Wednesday, December 19, 2018

ஆண்டவர் உம்மோடு

இன்றைய (20 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 1:26-38)

ஆண்டவர் உம்மோடு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு பற்றி வாசிக்கின்றோம். மரியாவை மூன்று சொல்லாடல்கள் வழியாக வாசகருக்கு அறிமுகம் செய்கிறார் லூக்கா: (அ) கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னி அல்லது இளம்பெண், (ஆ) தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர், (இ) அவர் பெயர் மரியா.

இவ்வாறாக, மரியாவின் வேர் (நாசரேத்து) மற்றும் விழுது (யோசப்பு) ஒருசேர பதிவுசெய்யப்படுகிறது.

தொடர்ந்து, 'வானதூதருக்கும் மரியாளுக்கும் நடந்த உரையாடலைப் பதிவு செய்கின்றார் லூக்கா.

'அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார் வானதூதர்.

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' - இந்த மூன்று வார்த்தைகளின் விரிவே இனி வரும் உரையாடலாக இருப்பதால், இம்மூன்று வார்த்தைகளை நாம் இன்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல், 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று அருள்பணியாளர் திருப்பலியிலும், வழிபாட்டிலும் சொல்ல, 'உம் ஆன்மாவோடும் இருப்பாராக!' என்று பதில் சொல்கின்றோம். அப்படின்னா, 'உடலோடு, உள்ளத்தோடு இல்லையா?' என்ற கேள்வியெல்லாம் தோன்றி மறைகிறது.

மரியாவுக்கு வானதூதர் சொன்ன வாழ்த்தில் இக்குளறுபடிகள் இல்லை. ரொம்பவும் ப்ளைனாக இருக்கிறது. நல்லது.

'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!'

இவ்வார்த்தைகள் பெரும்பாலும் விவிலியத்தில் 'ஆண்டவர் உம்மோடு இருப்பாராக!' என்று ஆசீர் அளிப்பதாகவோ, அல்லது 'ஆண்டவர் உன்னோடு இருப்பார்!' என நம்பிக்கை தருவதாகவோ இருக்கின்றது. (காண். ரூத் 2:4, 1 சாமு 17:37, 2 சாமு 14:17, ஆமோஸ் 5:14, 2 தெச 3:16, யோசு 1:17, 1 சாமு 20:13, 2 குறி 36:23, எஸ்ரா 1:3, விப 10:10).

ஆனால், நீத 6:12ல் கிதியோனுக்குத் தோன்றும் ஆண்டவரின் தூதர்,

'வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' என வாழ்த்துகிறார்.

இதை அப்படியே, இன்றைய நற்செய்தியோடு பொருத்துவோம்:

'அருள் நிறைந்தவரே! (வாழ்க) ஆண்டவர் உம்மோடு (உன்னோடு) இருக்கிறார்!'

அங்கே, வலிமை. இங்கே அருள்.

இதுதான் கிறிஸ்து பிறப்பின் மிக முக்கியமான செய்தி.

'ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.' சரி.

ஆனால், எப்படி? என்பதில்தான் பிரச்சினை வருகிறது.

அங்கே அவர் 'மனித வலிமையில்' இருக்கிறார். இங்கே அவர் 'கடவுளின் அருளில்' இருக்கிறார். மனித வலிமை எல்லை உடையது. அது வலுவிழக்கக் கூடியது. ஆனால், கடவுளின் அருள் எல்லை இல்லாதது. அது ஒருபோதும் குறையாதது.

இவ்வாறாக, மனித வலிமையை நம்பியிருந்த மனித இனம் இனி கடவுளின் அருளில் நம்பிக்கை கொள்ளும். மனித வலிமையால் நிறையவற்றை அடைய முடிவதில்லை. 'ஆனால், கடவுளால் (அருளால்) இயலாதது ஒன்றுமில்லை!'

இதையொட்டியே, இன்றைய முதல் வாசகத்தில், 'அடையாளம்' கேட்ட ஆகாசுக்கு, 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') அடையாளம் தரப்படுகிறது.

கடவுளின் அருள் மரியாளின் குழந்தையின் பிஞ்சு விரல்கள் வழியாக மனுக்குலத்திற்கு வருகிறது. மனித வலிமை அங்கே வலுவின்மையாக இருக்கிறது. அந்த வலுவின்மையில் அவருடைய அருள் செயலாற்றுகிறது.

ஆக, இன்று எல்லாமே என் வலிமையில் என நான் மறந்து, அவரின் அருளால்தான் என்ற நிலைக்குக் கடக்க அழைக்கப்படுகிறேன்.

ஆண்டவர் உங்களோடு! ஏனெனில் அவருடைய அருள் உங்களோடு!

2 comments:

  1. கிதியோனுக்கு வானதூதர் மொழிந்த வாழ்த்தில் வலிமையும்,மரியாவுக்கு கபிரியேல் மொழிந்த வாழ்த்தில் அருளும் இழையோடுவதாகப் பதிவு செய்கிறார் தந்தை.எல்லையுடைய, வலுவிழக்கக்கூடிய மனித வலிமை,எல்லையற்ற கடவுளின் அருளின் முன் நிற்க இயலாதது என்கிறார்.நிறைவைத் தரமுடியாத மனித வலிமையை ஓரங்கட்டி, ஆகாசுக்குக் கொடுக்கப்பட்ட " இம்மானுவேல்" எனும் அடையாளத்தையே நம் அடையாளமாக்க் கொள்ளவும், நம் தனிப்பட்ட வலிமையை மறந்து,அவரின் அருளையே முன் வைக்கவும் அழைக்கப்படுகிறோம்." ஆண்டவர் உங்களோடு! ஏனெனில் அவருடைய அருள் உங்களோடு!".... மனதார வாழ்த்துக்களை முன் வைக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இன்று எல்லாமே என் வலிமையால்
    என , நான் மறந்து , அவரின் அருளால் தான் என்ற நிலைக்கு கடக்க, வழிநடத்திய, அருட்பணி: யேசுவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
    "ஆண்டவர் அருள் நம்மோடு!"

    ReplyDelete