Friday, December 7, 2018

அமல உற்பவம்

இன்றைய (8 டிசம்பர் 2018) திருவிழா

அமல உற்பவம்

அன்னை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்தப் பதிவை எழுதும் நேரம், 2015ஆம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் மரியாள் தோன்றிய இடத்தில் நிற்கும், 'நாமே அமல உற்பவம்' என்று எழுதப்பட்ட சுரூபம் இருக்கும் இடம் நோக்கி என் மனம் செல்கிறது.

'அமலம்' - சில சமஸ்கிருதச் சொற்கள் முன் 'அ' சேர்க்கும்போது எதிர்ப்பதம் உருவாகும். 'மலம்' என்பதோடு 'அ' சேரும்போது, இந்த வார்த்தை 'தூய்மை' (அதாவது 'தூய்மையற்றது இல்லாதது') என்று பொருள்படுகிறது.

காஷ்மீர் சைவ சமயம் என்று சொல்லப்படும் சைவ சமயம் மூன்று வகை 'மலம்' ('தூய்மையற்ற நிலை' அல்லது 'அழுக்கு') பற்றி பேசுகிறது: 'ஆணவ மலம்,' 'கர்ம மலம்,' 'மாய மலம்'. இந்த மூன்று மலங்களும் ஒருவரைக் கடவுளிடமிருந்து தள்ளி வைக்கிறது. 'ஆணவ மலம்' ஆட்கொள்ளும்போது நான் என்னை மட்டும் முன்நிறுத்துகிறேன். 'கர்ம மலம்' ஆட்கொள்ளும்போது நான் என் செயல்களோடு என்னை ஒருங்கிணைத்துக்கொள்கிறேன். 'மாய மலம்' ஆட்கொள்ளும்போது நான் நிலையற்றவற்றில் என் மனத்தைச் செலுத்துகிறேன்.

இந்த மூன்று 'மலங்களும்' மறையும்போதுதான் ஒருவர் 'நிர்வாண நிலை' (மோட்சம்) அடைகின்றார்.

சைவ சமயத்தின் இந்தப் போதனை ஒரு பக்கம் இருக்கட்டும்.

அன்னை மரியாள் 'அமல உற்பவம்' என்ற சொல்லும்போது, நாம் அன்னை மரியாளிடம் மேற்காணும் தூய்மையற்ற நிலை என்று சொல்கிறேரமா? அல்லது திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் 1854ல் மொழிந்த 'இன்எஃப்பாபிலிஸ் தேயுஸ்' என்ற கொள்கைத் திரட்டு சொல்வதை நம்புகிறோம் என்று சொல்கிறோமா?

'அன்னை மரியாள் பிறப்பிலிருந்தே எந்த மாசும், எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கிறார். இது கடவுள் அவருக்கு வழங்கிய தனிப்பட்ட கொடை. இந்தக் கொடை அவர் இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுப்பதற்கான தயாரிப்பாக இருக்கிறது.'

- இதுதான் கொள்கைத்திரட்டின் சுருக்கம்.

இந்தக் கொள்கைத்திரட்டிற்கு நாம் 'ஆம்' என்று சொல்ல வேண்டும். ஏனெனில், இது திருத்தந்தை அவர்களின் 'வழுவாநிலைக் கோட்பாடு' வழியாக நமக்கு அருளப்பட்டது.

மேற்காணும் கொள்கைத்திரட்டின் சாரம் திருக்குரானிலும் உள்ளது. அங்கே, 'உலகிற்கு வரும் எல்லார் மேலும் சாத்தானின் நிழல் இருக்கிறது. ஆனால், மிரியம் மற்றும் அவளின் மகனிடம் இல்லை' என்கிறது திருக்குரான்.

அமல உற்பவத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

வழக்கமாகக் கொடுக்கப்படும் சாமானிய எடுத்துக்காட்டு, 'பாலும் பாத்திரமும்.' பாலை ஏந்த வேண்டிய பாத்திரம் தூய்மையாய் இருந்தால் பால் தூய்மையாக இருக்கும்.

ஆனால், இது மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டு அன்று.

'பாவ இயல்பு' - இதைப் புரிந்துகொண்டால் இந்தத் திருநாளைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய முதல் வாசகத்தில் ஏவாள் சபிக்கப்படும் நிகழ்வைப் பார்க்கிறோம். 'உயிருள்ளோர் அனைவருக்கும் தாய்' என்று ஏவாள் பெயர்பெறுவது இந்த நிகழ்வில்தான். 'மனுசி' என்று இருந்தவள் 'தாய்' என்ற பெயர் பெறுகிறாள். 'நீ ஏன் உண்டாய்?' என கடவுள் கேட்க, 'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' என்கிறாள் ஏவா.

'பாம்பு' அல்லது 'சாத்தான்' - இதன் குணம் ஏமாற்றுதல் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. 'ஏமாற்றுதல்' என்பதை 'ஒற்றைத்தன்மையை மறுதலிக்கும் நிலை.' எடுத்துக்காட்டாக, நான் 'உண்மை' என்று ஒன்றைச் சொல்லி அங்கே 'பொய்' சொன்னால் அங்கே ஒற்றைத்தன்மை மறுக்கப்படுகிறது.

பாவ இயல்பின் பண்பு ஏமாற்றுதல்.

திருடுவது நல்லது என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் திருடுகிறேன்.
பொய் சொல்வது நல்லதுதான். எல்லாரும் செய்கிறார்கள் என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் பொய் சொல்கிறேன்.

உலகத்துல இல்லாததா? நீயும் அதைப்போல இரு! என என் இயல்பு ஏமாற்றுகிறது. நான் அதன்படி செய்கிறேன்.

ஆனால், அடுத்த நாளே என் 'நன்மை இயல்பு' நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை எனக்கு உணர்த்திவிடுகிறது. உடனே, என் உள்ளம் குற்ற உணர்விற்கும், தொடர்ந்து பயத்திற்கும் ஆட்படுகிறது. ஆக, ஏமாற்றம், குற்ற உணர்வு, பயம் - இந்த மூன்றும் நாம் எந்தத் தவறு செய்தாலும் நம்மைச் சுற்றிக்கொள்ளும். மேலும், ஒருமுறை சிக்கிக் கொள்ளும் இந்தச் சூறாவளியிலிருந்து நம்மால் எளிதில் தப்ப முடிவதில்லை. இந்த மூன்றையும் குணமாக்காமல் சில நேரங்களில் நாம் மேலோட்டமாக மருந்து போட்டுக்கொள்கிறோம். இவை நாற்றம் எடுக்காமல் இருக்க சின்னச் சின்ன சமரசங்கள் என்னும் ஊதுபத்திகளை ஏற்றிக்கொள்கிறோம்.

இதிலிருந்து தப்பிக்க கடவுளின் அருள் மிக அவசியம் அவருடைய அருள் அன்றி நாம் இதிலிருந்து விடுபட முடியாது. அவர் நம்மை ஏமாற்றுவதில்லை.

ஆக, இன்றைய நாளில் நாம் அன்னை மரியாளின் பேறுபெற்ற நிலையைவிட, அவருக்குக் கடவுள் தந்த அருள்கொடையைத்தான் கொண்டாடுகிறோம். இவ்வாறாக, இது ஆண்டவரின் அருளின் திருவிழா.

அன்னை மரியாளுக்கு இந்தக் கொடை அவருடைய பிறப்பிலேயே கிடைத்தது.

உங்களுக்கும், எங்களுக்கும் பிறந்த பின் கிடைக்கிறது.

மேற்காணும் சூறாவளியிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள நம் முன்மாதிரியான அமல உற்பவியின் பரிந்துரையை நாடும்.

'ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அன்னை மரியே, உம் அடைக்கலம் தேடி வரும் பிள்ளைகளைக் காத்தருளும்!'

இன்றைய நாளில் தங்களின் பாதுகாவலியின் திருநாளைக் கொண்டாடும் தனிநபர்கள், நிறுவனங்கள், துறவற சபைகள், நாடுகள், நகரங்கள், ஆலயங்கள் அனைத்திற்கும் நம் வாழ்த்துக்கள்.

2 comments:

  1. நன்றி!
    " ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அன்னை மரியே! உம் அடைக்கலம் தேடி வரும் பிள்ளைகளைக் காத்தருளும்...ஆமேன்.

    ReplyDelete
  2. பாதி புரிந்தும்,புரியாமலும் உள்ள ஒரு கட்டுரையைப்படித்த உணர்வு.புரிந்ததெல்லாம் இன்றைய நாளில் அன்னை மரியாளின் பேறுபெற்ற நிலையை விட,அவருக்கு கடவுள் கொடுத்த அருள் கொடையைத்தான் கொண்டாடுகிறோம்.பிறப்பிலேயே அவருக்குக் கிடைத்த கொடை, நமக்குப் பிறந்த பின் கிடைத்துள்ளது.இதுபோதுமே..." ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அன்னையிடம் நாம் அடைக்கலம் தேடி ஓட."
    மற்றபடி 'அமலம்' என்ற சொல்லின் மூலம் குறித்த விஷயங்களை சைவ சமயம்,கொள்கைத்திரட்டு,மற்றும் திருக்குரான் மூலம் புரியவைக்கத் தந்தை எடுத்த அனைத்து முயற்சிகளும் பாராட்டுக்குரியவை!!! அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete