Thursday, August 18, 2016

யோனா - 2

'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன' (யோனா 1:2)

யோனா நூலில் முதலில் பேசுபவர் ஆண்டவரே.

யோனா ஒரு யூதர் அல்லது எபிரேயர்.

ஆனால் அவர் அனுப்பப்படுவதோ வேற்று இனத்து, வேற்று தெய்வத்தை வணங்கும் மனிதர்கள் வசிக்கும் நினிவே நகருக்கு.

கிறிஸ்தவர்களாக இருக்கும் வத்திக்கானில் கடவுள் தோன்றி (!), கிறிஸ்தவர்களே இல்லாத ஒரு நாட்டிற்கு ஒருவரை அனுப்பி, 'அந்த மக்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்!' எனச் சொன்னால், அவர் போவாரா?

போகும் வாய்ப்பு இருக்கிறது! இல்லாமலும் இருக்கிறது!

அனுப்பப்படும் அந்த நபருக்கு ஒருவேளை 'மெசியா காம்ப்ளக்ஸ்' இருக்கிறது என்றால் அவர் கண்டிப்பாக போவார். 'மெசியா காம்ப்ளக்ஸ்' உள்ளவர்கள் எப்பொழுதாவது யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த காம்ப்ளக்ஸ் தவறானது.

யோனாவுக்கு இந்த காம்ப்ளக்ஸ் அறவே கிடையாது.

'அடுத்த வீட்டில் போய் அவர்களைக் குறை சொல்ல நான் யார்?' என்று நினைத்தோ,

அல்லது

'இந்தக் கடவுளே இப்படித்தான்! போ, போ என்று சொல்வார். மனமாறுங்கள் என்று அவர்களிடம் சொல்லுமுன் இவர் மனம் மாறி விடுவார். இவரது கோபம் தணிந்துவிடும்! இதற்கு பேசாமல் இவர் இப்போதே கோபத்தை தணித்துக் கொள்ளலாமே!' என நினைத்தோ

தன் பயணத்திட்டத்தை மாற்றியிருக்கலாம் யோனா.

பயணத்திட்டத்தை மாற்றியதோடல்லாமல், அதை மிக வேகமாக நிறைவேற்றுகிறார் யோனா.

வேகமாக யோப்பா போய் அங்கிருந்து தர்சீசுக்கு புறப்படும் கப்பலைக் காண்கின்றார்.

'எந்த கப்பல் நின்னாலும் ஏறிப்போய்டுவோம்!' என்று இருக்கிற காசு எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு வந்தவர், அம்புட்டயும் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்.

கடவுளை நோக்கி வருவதை விட கடவுளை விட்டுச் செல்வதற்குத்தான் என் மனமும் சில நேரங்களில் திட்டமிடுகின்றது. அப்படி திட்டமிடும்போதெல்லாம் அவற்றைச் செயல்படுத்த வேகமாக செயலிலும் இயங்குகின்றது.

யோனாவின் மனநிலை என்னிலும்!

யோனா கடவுள் அவிழ்க்க முடியாத கழுதைக்குட்டி என தன்னை நினைக்கிறார்.

ஆனால், மாலுமிகள் நங்கூரத்தை அவிழ்த்து பயணத்தைத் தொடங்கிய அந்த நிமிடம் கடவுள் புன்னகைக்கிறார்.

அவரின் புன்னகையே கடுங்காற்றாய் வீசுகிறது...

4 comments:

  1. கடவுளுக்கும், யோனாவுக்குமிடையே ' பவர் கேம்' நடப்பதை அழகாகப் பதிவு செய்கிறார் தந்தை.' மெசியா காம்ப்ளக்ஸ்' இல்லாதவராக இருந்திருக்கலாம் யோனா.ஆனால இதை ஒரு எதிர்மறை கருத்தாகப் பார்ப்பதை விட ' இறைவனது இன்னொரு முகமான கருணை அவர் தன் மக்களை அழிப்பதிலிருந்து காப்பாற்றும்' என்று கூட அவர் எண்ணியதாக நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாமே!. இதுவே அவர் அடுத்த ஊருக்குக் கப்பலேறக் காரணமாயிருந்திருக்கலாம். அதனால் தந்தையும் யோனா ' இப்படித்தான் நினைத்து செயல்பட்டிருக்க வேண்டும்' எனத் தன் வசதிக்காக நினைப்பதைத் தவிர்க்கலாம்.எப்படியெனினும் நம் நடத்தை குறித்த இறைவனின் புன்னகை கடுங்காற்றாகவோ,புயலாகவோ வீசுவதை தவிர்த்துத்தானே ஆகவேண்டும்! கடவுள் அவிழ்க்க முடியாத அத்தனை கழுதைக் குட்டிகளுக்கும் ஒரு பாடம் புகட்டத்தான் தந்தை தன்னை தரைமட்டத்திற்குத் தாழ்த்துகிறார் என்பது எங்களுக்குப் புரியாதா என்ன? எதிலிருந்தும்,யாரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் ஒரு அழகான பதிவு!!!

    ReplyDelete
  2. Gita - New York

    I think Jonah is a fair-minded gentleman, despite all his whims.
    He pays the exact fare {Jonah 1:3] out of his funds.
    And I like that character in him.

    There are, on the contrary, many preachers and prophets, reverends and anointed around me.
    These take their trips to Joppa, to Tarshish, or to whichever destination.
    It is a pity that they don't buy their own tickets...
    How shall I call them?
    Frauds, cheats, charlatans and imposters...?

    ReplyDelete
  3. Anonymous8/19/2016

    Good reflection Yesu

    ReplyDelete
  4. Anonymous8/19/2016

    Good reflection Yesu

    ReplyDelete