Wednesday, August 31, 2016

கேள்விக்கென்ன பதில் - 1

இன்று முதல் நம் வலைப்பதிவில் நான் எதிர்கொண்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவோம்.

கேள்வி:

நம் கத்தோலிக்க பழைய மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு பகுதி, புதிய பொதுமொழிபெயர்ப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இது ஏன்? எப்படி?

பழைய மொழிபெயர்ப்பு:  'ஓடும் தண்ணீரின்மேல் உன் அப்பத்தை விடு. ஏனென்றால், நெடுங்காலத்துக்குப் பின் அதைக் கண்டெடுப்பாய். அதை ஏழு பேருக்கும், எட்டு பேருக்கும் பங்கிட்டுக் கொடு. ஏனென்றால் வருங்காலத்தில் உனக்கு என்ன தீங்கு நேரிடுமோ, உனக்குத் தெரியாது' (சங்கத் திருவுரை 11:1-2)

புதிய பொதுமொழிபெயர்ப்பு: 'உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய். ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும். உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில், எங்கு எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது' (சபை உரையாளர் 11:1-2)

பதில்:

புதிய மொழிபெயர்ப்பின் நோக்கம் எல்லாத் திருச்சபையினருக்கான ஒரு விவிலியத்தை தமிழில் உருவாக்குவது. ஏற்கனேவே கத்தோலிக்கர்கள் கொண்டிருந்த பழைய மொழிபெயர்ப்பும், பிரிந்த சபையினர் கொண்டிருந்த (இன்றும் கொண்டிருக்கும்) கிங் ஜேம்ஸ் பாடத்தின் மொழிபெயர்ப்பும் இங்கே அருகருகே வைக்கப்பட்டு இரண்டிற்கும் பொதுவான தமிழ்ப் பதங்கள் தேடி அல்லது உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்காணும் இறைவாக்குப் பகுதி பிரிந்த சகோதரர்களின் விவிலியத்தில் பின்வருமாறு உள்ளது:

'உன் ஆகாரத்தை தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு. பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.' (பிரசங்கி 11:1-2)

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.

அதாவது, எந்த ஒரு மொழிபெயர்ப்பும் மூலப்பாடத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். முதல் ஏற்பாட்டின் மூல பாடம் எபிரேயம் (சில பகுதிகள் தவிர). இரண்டாம் ஏற்பாட்டின் மூல பாடம் கிரேக்கம். 

கத்தோலிக்கரின் பழைய மொழிபெயர்ப்பின் நோக்கம் வழிபாட்டில் இறைவார்த்தையை பயன்படுத்துவதற்கு. ஆக, அந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்டபோது மூல மொழியோடு உள்ள நெருக்கம் கண்டுகொள்ளப்படவில்லை. மக்களுக்குப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனத்தில் இருத்தி கூட்டிக் குறைத்து மொழிபெயர்த்தார்கள். ஆனால், பிரிந்த சகோதரர்களின் மொழிபெயர்ப்பு மூல பாடத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில் அது தழுவிய கிங் ஜேம்ஸ் பாடமும் (1604) மூல பாடத்திற்கு நெருக்கமானது.

எபிரேய மூல பாடத்தில் 'தண்ணீர்கள்' என்று உள்ளது. 'தண்ணீர்கள்' என்பதை 'கடல்' என்றும் மொழிபெயர்க்கலாம். 'தண்ணீர்கள்மேல் போடு' என்பதை 'கடலில் போடு' என்றும், 'கடல் வாணிபத்தில் போடு' என்றும் மொழிபெயர்க்கலாம். 'தண்ணீருக்குள் போடு' என்பது இங்கே பொருள் அல்ல. உதாரணத்திற்கு, தென் மாவட்டங்களில், 'பணத்தை உப்புல போட்டேன்' என்று சொல்வார்கள். இங்கே, 'உப்புல போட்டேன்' என்பது 'உப்புச் சாக்கில்' அல்லது 'உப்பளத்தில்' அல்லது 'உப்பு கிட்டங்கியில்' போட்டது என்பது பொருள் அன்று. 'உப்பு வணிகத்தில் போட்டேன்' என்பது பொருள். 

அடுத்ததாக, 'லேகேம்' என்ற வார்த்தை 'அப்பம்' என்று மொழிபெயர்க்கப்படவேண்டியது என்றாலும், 'அப்பம்' என்பதை வேலையின் உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் நாம் உண்ணும் உணவு என்பது நாம் செய்யும் வேலையின் பலனே.

'வட்டி' என்ற வார்த்தை எபிரேயத்தில் இல்லை. இது தமிழில் சேர்க்கப்பட்டுள்ளது.

அடுத்த வசனத்தில் 'ஏழெட்டு' என்பது 'நிறைய' என்ற பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அடுத்து வரும் வார்த்தை 'பங்கிட்டுக்கொடு.' ஆனால், புதிய மொழிபெயர்ப்பில் 'முதலீடு செய்' என்று உள்ளது. முதலில் 'வட்டி' என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்தியதால், 'பங்கிடு' என்பதையும் 'முதலீடு' என மாற்றிவிட்டனர். 'பங்கிட்டுக்' கொடுப்பதும் ஒருவகை 'முதலீடு'தானே!

பின் எதுதான் சரியான பாடம்?

ஏறக்குறைய பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்:

'உன் உழைப்பை கடல்மேல் போடு. பல ஆண்டுகளுக்குப் பின் அது உன்னிடம் திரும்பும்.
உன்னிடம் இருப்பவற்றை ஏழெட்டாக பங்கிட்டுக்கொடு. ஏனெனில் இப்பூமியில் என்ன துயரம் நேரம் என்பது உனக்குத் தெரியாது!'

புதிய மொழிபெயர்ப்பின் முன்னுரையை வாசியுங்கள். அங்கே இம்மொழிபெயர்ப்பின் நோக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது: 'தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு' (dynamic equivalence) முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது.

எந்த மொழிபெயர்ப்பைத்தான் வாசிப்பது?
எபிரேயம் அல்லது கிரேக்கம் வாசித்தலே சால்பு.

ஆனால், மூலமொழியில் இருப்பதை அப்படியே மொழிபெயர்ப்பதும் நலமன்று.

'கிங் ஜேம்ஸ் வேர்ஸன்' (ஆங்கிலம்) மூலமொழிகளுக்கு மிக ஒத்திருக்கிறது. அடுத்ததாக, நாம் பயன்படுத்தும் 'நியு ரிவைஸட் வேர்ஸன்' (ஆங்கிலம்). மற்றவைகளை நாம் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும்.

இதுல என்ன விநோதம் என்றால், 'எந்த பைபிள் உண்மையானது?' என்பதே நமக்குத் தெரியாமலிருக்க, அதில் சொல்லப்பட்டதை அப்படியே 'இறைவார்த்தை' எனச் சொல்லி மிரட்டி மோட்சத்துக்கு வழிகாட்டுவதாக வாக்குறுதி கொடுப்பது மடமையாகத் தெரியவில்லையா?

3 comments:

  1. GITANJALI A BERNARD,
    New York.

    Dear Fr. YESU:

    Now that "JONAH" has accomplished his missionary work in Nineveh, I am glad you are turning your attention to instruct us on sundry subjects.

    It feels like I begin a train-journey in Chennai's Egmore Station and my carrier is suddenly being dislodged/attached to Nagapattinam/Vailankanni Route at Villupuram.

    The most educative passage of your blog [to me] is this:
    இதுல என்ன விநோதம் என்றால், 'எந்த பைபிள் உண்மையானது?' என்பதே நமக்குத் தெரியாமலிருக்க, அதில் சொல்லப்பட்டதை அப்படியே 'இறைவார்த்தை' எனச் சொல்லி மிரட்டி மோட்சத்துக்கு வழிகாட்டுவதாக வாக்குறுதி கொடுப்பது மடமையாகத் தெரியவில்லையா?

    "In the beginning was the Word;
    the Word was with God;
    and the Word was God" [Jonah 1:1]

    My cousin goes on beating me to believe that "WORD" is the printed text of Jerusalem Bible.
    Meanwhile my nephew is adamant that "WORD" means nothing but the word of New International Version.

    May be, the problem with all religions with books is that
    the followers want to bottle God in their texts and to suffocate Him...

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.தாங்கள் எதிர்கொண்ட சில கேள்விகளுக்கான பதிலைத் தேடித்தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.நல்ல காரியம்தான். தாங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்ற எண்ணத்தில் தங்களுக்கு ஒன்று சொல்லலாமா? தங்களைப் போன்ற ' கல்வியாளர்களுக்கும்,ஆசிரியப்பணியில் இருப்பவர்களுக்கும்' வேண்டுமெனில் இதுமாதிரி விஷயங்கள் தேவைப்படலாம்.ஆனால் எங்களைப் போல சாதாரண மக்களுக்கு அது முதல் ஏற்பாடா,இரண்டாம் ஏற்பாடா,மூலமா,தழுவியதா,கிரேக்கமா,எபிரேயமா, கத்தோலிக்கர் பயன்படுத்துவதா? இல்லை பிரிந்த சகோதரர் பயன்படுத்துவதா ....இப்படி எதைப்பற்றியும் கவலை இல்லை.சொல்ல வந்த விஷயம் என்ன? அது என்னை,என் வாழ்க்கையை எந்த அளவில் பாதிக்கிறது?... அவ்வளவே! என்னைப்பொருத்தவரை இன்றையச் செய்தி " உன் உழைப்பை ஏதாவது ஒரு உருப்படியான வகையில் முதலீடு செய்.நாளை அது உனக்கு ஈட்டித்தரும் பலனைக் கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்யலாம்.எந்த நேரம் நமக்கு எப்படி இருக்குமோ தெரியாது.எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்."... அவ்வளவே.தங்களுக்கே எது உண்மை,எது தேவை என்பதில் தெளிவு இல்லை என்பதைத் தங்கள் பதிவின் இறுதிவரிகள் வெளிப்படுத்துகின்றன.ஆகவே தங்களுக்கு ஒரு வேண்டுகோள்: யாருக்குமே தெளிவில்லாத விஷயங்களைப்பற்றி நம்மை நாமே குழப்பிக் கொள்வதை விட ஒரு ' ரூத்து' ஆகமம் போல,ஒரு ' நீதிமொழிகள் நூல்' போல, புனிதர்களின் வாழ்க்கை வரலாறு போல... இல்லை எங்களுக்குத் தெரியாத ஆனால் தங்களுக்குத் தெரிந்த,எங்களின் வாழ்வுக்கு வலு சேர்க்கும் விஷயங்கள் பற்றிப் பேசலாமே! தயவு செய்து தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.தங்களின் முயற்சியை நான் குறைத்து மதிப்பிடவில்லை.எங்களைப் போன்றவர்களின் 'சிறுமதி'க்கு எட்டக்கூடிய விஷயங்களைச் சொல்லுங்கள் என்பதே என் கருத்து.இது என் தனிப்பட்ட கருத்தும் கூட.இறைவன் தங்களையும்,தங்களின் செயல்கள் அனைத்தையும் ஆசீர்வதித்து,வழிநடத்த வேண்டுகிறேன்.அன்புடன்.....

    ReplyDelete