Friday, January 30, 2015

மதச்சார்பின்மையும். சோஷியலிஸமும்

இந்த ஆண்டு நம் நாட்டின் குடியரசுத் திருநாளன்று நம் நாட்டின் தகவல்துறை அமைச்சகம் சார்பாக நாட்டு மக்களுக்கு குடியரசு வாழ்த்து சொல்லி நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் நம் அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு (ப்ரிஆம்பிள்) புகைப்படமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முகப்பில் நம் அரசியலமைப்புச் சட்டம் தரும் வாக்குறுதிகளில் 'இந்தியா ஒரு ... மதச்சார்பற்ற (secular) மற்றும் சமுதாயத்துவ (socialist) ...' என்ற இரண்டு வார்த்தைகள் மிஸ்ஸிங். இதை இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்த எதிர்க்கட்சிகள் இந்த இரண்டு வார்த்தைகள் நீக்கப்பட்ட முகப்பை எப்படி வெளியிடலாம் எனக் கேள்விகள் எழுப்பின. அதற்கு நம்ம தகவல்துறை அமைச்சர் நேத்து ரொம்ப கூலா ஒரு பதில் சொன்னார்: 'அந்த இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் சேர்க்கப்பட்டது எமெர்ஜன்சி என்ற சொல்லப்படும் இந்திராகாந்தி ஆட்சியின் போதுதான். அதை ஏன் நாம் சேர்த்திருக்கிறோம் என்பதை மறு ஆய்வு செய்து அவைகளை நீக்கிவிட வேண்டும்!' இந்தப் பதிலால் பலர் ரொம்ப அப்செட் ஆகி இருக்கின்றனர்.

ஒரு சில சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்றால் மத்தியில் மோடி தலைமையில் நடக்கும் பாஜக ஆட்சி சமஸ்கிருத வாரம், பகவத் கீதை தேசிய நூல் என்று அடுத்தடுத்து மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் படலத்தின் ஒரு பகுதியாக இது இருக்குமோ என்பதுதான்.

செக்யுலர், சோஷியலிஸ்ட் - இந்த இரண்டு வார்த்தைகள் நமக்கு வாக்குறுதியாகத் தருவது என்ன? இந்த இரண்டு வார்த்தைகள் நம் சட்டத்தில் இருப்பதே பலருக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

முதலில் செக்யுலர். வழக்கமாக செக்யுலர் என்ற வார்த்தையை அதன் எதிர்ப்பதமான 'சேக்ரட்' என்பதை வைத்து அர்த்தம் சொல்வர். நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் செக்யுலரிசம் இரண்டு வகைப்படும். முதல் வகை, நம்ம பிரைவேட் பஸ்களில் பார்த்தா தெரியும். முன்னால ஓடிக்கிட்டு இருக்கும் எல்.சி.டி டிவிக்குக் கீழே நீளமா ஒரு ஃபோட்டோ வச்சி மாலை போட்டிருப்பாங்க. அந்த ஃபோட்டோவுல பிள்ளையார், இயேசுநாதர், மெக்கா மசூதி அல்லது முருகன், வேளாங்கண்ணி மாதா, பிறைவடிவ அடையாளத்தில் 786 என்ற எண். அதாவது 'எங்களைப் பொறுத்தவரையில் இந்த மூன்று கடவுளுமே ஒன்று' என்ற சொல்வது முதல் வகை செக்யுலரிசம். இந்த மூன்று கடவுள்கள் தாம் என்றல்ல, எத்தனை கடவுள்கள் இருந்தாலும் அது எங்களுக்கு ஒன்றுதான். இரண்டாவது வகை செக்யுலரிசம் கவர்ன்மெண்ட் பஸ்ல பார்க்கலாம். எந்தவொரு மதத்தின் அடையாளமோ, சாமி படமோ, மாலையோ இருக்காது. அதற்குப் பதிலாக திருக்குறளை எழுதி வைத்திருப்பார்கள். அதாவது, சாமி வேறு. சமுதாயம் வேறு என்று பார்க்கும் நிலை. இந்த இரண்டாம் வகையில் எந்த சாமிக்கும் இடமில்லை.

நம்ம நாட்டுல நம்ம சட்டம் செக்யுலர் என்று சொல்லும் போது இந்த இரண்டு பொருள்கள் இருக்கின்றன. செக்யுலர் என்ற வார்த்தையின் பொருளை நாம் எப்போது கண்கூடாகப் பார்த்தோமென்றால் நம்ம மன்மோகன் சிங் முதன்முதலா பிரதமர் ஆகும் போதுதான். அதாவது கிறிஸ்தவரான காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா முன்மொழிய, இஸ்லாமியரான குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சீக்கியரான பிரதமர் மன்மோகன் பதவியேற்றார். ஆக, கிறிஸ்தவம், இசுலாம், சீக்கியம் என்று அனைத்தும் ஒரே நேரத்தில் மேடையில் நிற்க முடியும் - எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடவுளுக்கு பொதுவாழ்வில் இடம் என்பதே இல்லை. ஆக, அவர்களால் வெகு எளிதாக செக்யுலர் என்று சொல்லிக் கொள்ள முடிகிறது. ஆனா நம்ம ஊருல அப்படியா? நீங்க யார்கிட்டயாவது சும்மா பேச்சு கொடுத்து பாருங்க. பேசிய அடுத்த நிமிடம் நீங்க கிறிஸ்டியனா? என்று கேட்பார்கள். பள்ளிக்கூடத்தில் முதலில் நம் குழந்தையிடம் கேட்கப்படும் கேள்வியும் இதுதான். நீ எந்த சாதி? நீ எந்த மதம்? இது இரண்டும் இல்லாமல் நாம் இருக்கணும்னு நினைச்சாலும் முடிவதில்லையே. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் 'நீ எந்த மதம்?' என்று ஒருவர் மற்றவரைக் கேட்டால் அவரைக் கைது செய்யலாம் என அவர்களின் சட்டம் சொல்கிறது. ஆக அவர்களுக்கு மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அவரின் பெட்ரூம் விஷயம் போன்றது. உன் பெட்ரூமில் என்ன நடக்கிறது? என்று யாரும் அங்கே கேட்பதில்லை. ஆனால், நம்ம ஊருல எல்லாரும் எல்லாத்தையும் கேட்கலாம். ஆக, மதச்சார்பற்று இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

மற்றொரு பக்கம். இந்தியா மதச்சார்பற்றது என சொல்கிறது. ஆனால், எந்தவொரு அரசு விழா என்றாலும், அரசுக் கட்டிட திறப்பு என்றாலும், அரசுக்கட்டிடம் கட்டுதல் என்றாலும், அரசு வாகனம் பயன்பாடு என்றாலும் அங்கே இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தப்படுகிறது. அல்லது சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இது எப்படி நியாயமாகும்? இது நம் நாட்டில் இருக்கும் மற்ற மதத்தினரின் உள்ளத்தைக் காயப்படுத்துவது இல்லையா?

நம் நாடு இவ்வளவு நாள் வெளிப்படையாக 'மதச்சார்பற்றது' என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு குறிப்பிட்ட ஆதிக்க இனத்தவரின் மதத்தை வளர்த்தெடுப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது.

சரி! 'மதச்சார்பற்ற' அப்படிங்கிற வார்த்தையை எடுத்து விடுவோம். இனிமேல் அனைவரும் இந்தியர் என்ற ஒன்றின் அடிப்படையில் மட்டும் நடத்தப்படுவார்களா? இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா, பிராமின் கோட்டா, தலித் கோட்டா, சிறுபான்மையினர் கோட்டா என இருக்கும் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு இந்த நாடு எல்லாரும் இந்தியர்கள் எனச் சொல்லுமா? நான் என் மதத்தை விடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என்னை மறுபடியும் ஏதாவது ஒரு இந்து வர்ணாஸ்ரமித்தில் இணைப்பார்களா?

இந்த மோடி மற்றும் பாஜக வெண்ணெய்களுக்கு வேற வேலையே இல்லை. பார்க்க எவ்வளவோ வேலைகள் இருக்க, இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றிற்குப் பேன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாவது, சோஷியலிஸம் - இந்த வார்த்தை நம் சட்டத்தில் வரக் காரணம் நம்ம நேரு. அவருக்கு இந்த வார்த்தை பிடிக்குமாம். அதனால சேர்த்தாரம். நம்ம நாட்டுல இருக்கிற மின்சாரம், டெலிஃபோன், போக்குவரத்து எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டோம். இப்போதைக்கு ரயில்வேயை மட்டும் நம்ம அரசாங்கம் வச்சிருக்கு. இதுல சோஷியலிஸம் அப்படின்னு நம்ம வச்சிருக்கிறது தப்புதான். சோஷியலிஸம் என்பது பொதுத்துறைகளை அரசாங்கம் மட்டுமே நடத்தும். நம்ம இப்போ வச்சிருக்கிற எகனமாமிகல் சிஸ்டம் ரெண்டுங்கெட்டான். எல்லாம் பொது என்பதும் கிடையாது. எல்லாம் தனி என்பதும் கிடையாது. இந்த வார்த்தையை கண்டிப்பாக மறுஆய்வு செய்வது அவசியம்.

ஆனா பாருங்க. நாம இன்னும் மதம், கடவுள், சாதி, சாமியார், காவி என சொல்லிக்கொண்டிருக்கும் வரை அப்படியே தான் இருப்போம்.

இதுல நாம செலவிடும் நேரத்தை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி, 'போயி புள்ளைங்களப் படிக்க வைங்கயா!' என்று உருப்படியாக எதற்காவது பயன்படுத்தலாம்.



3 comments:

  1. Anonymous1/30/2015

    Yesu how are you. Very good explanation for the words secular socialism. Good reflection also. Hats off Yesu.

    ReplyDelete
  2. பட்டும், படாமலும்...தெரிந்தும் தெரியாமலுமிருந்த பல விஷயங்கள் பற்றி அழகான ஒரு அலசல். ஆனால் என்ன பயன்? நம்மூரில் இந்த அரசியல்வாதிகள் சாதி,மதம்,கடவுள், கோட்டா எனும் பெயரில் களியாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் வரை எல்லாமே விழலுக்கிறைத்த நீர்தான். ஆயினும் இவ்வளவு dry ஆன விஷயத்தை அழகாகப் புரியவைத்த தங்களின் சாதுரியத்திற்குப் பாராட்டு!!!

    ReplyDelete
  3. Dear IAS, I just went through your comments. They are encouraging. Thanks. I often think of the b'ful moments we have spent together. May God be blessed. Have a blessed Sunday.

    ReplyDelete