Monday, January 12, 2015

உனக்கு என்னப்பா...!

இன்னைக்குச் சாயங்காலம் குளித்துவிட்டு தலைசீவ கண்ணாடி முன் நின்றேன். என்னையறியாமலே என் மனம், 'போன வாரம் இந்நேரம் என்ன செய்தோம்?' என்று கேட்டது. இதையே விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்வதற்கு முன்னும் இதே மனம், 'அடுத்த வாரம் இந்நேரம் என்ன செய்வோம்?' என்றே கேட்டது. இப்படி இடத்தையும், நேரத்தையும் கடந்து சிந்திக்கும் மனத்தை நாம் பெற்றிருப்பது நாம் பெற்றிருக்கும் வரம். இதுவே சில நேரங்களில் சாபமாகவும் ஆகிவிடுகிறது. நாம் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டி 'போன தீபாவளிக்கு என்ன சாப்பிட்டேன்?' என எண்ணிப்பார்ப்பதில்லைதானே. யாருக்குத் தெரியும்? ஒருவேளை அதுவும் எண்ணிப்பார்க்கலாம்.

ஆக, உடல் தான் இத்தாலி வந்திருக்கிறது. உள்ளம் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறது. நேற்று வரை மேல்சட்டை அணியாமல் தூங்கிவிட்டு இன்று இரண்டு ஸ்வெட்டர் அணிந்து கொண்டு கல்லூரி செல்வதும் கடுப்பாக இருக்கிறது.

இந்த முறை பயணம் ரொம்ப நல்லாயிருந்துச்சுனு சொல்ற அளவுக்கு இல்லை.

புறப்படும்போதே தாமதம். நம்ம ஏர் இந்தியா விமானத்தை இனிமேல் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது இந்தப் பயணங்கள். இரவு 10:25க்கு தில்லியை நோக்கிப் புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 2 மணிக்குத் தான் புறப்பட்டது. இருக்கையில் அமரவே பிடிக்கவில்லை. எனக்கு முன் பயணம் செய்த ஒருவர் பயன்படுத்திய ஹெட்ஃபோன், சால்வை என எல்லாம் உருக்குலைந்து கிடந்தது. 2012ஆம் ஆண்டு வெளியான தியேட்டரில் ஓடாத தமிழ் திரைப்படங்கள். இதில் ஆடியோவும் வேலை செய்யவில்லை. சரி தூங்கலாம் என பார்த்தால் தூக்கமும் வரவில்லை. சீட் அரேன்ச்மென்டில் மிகவும் கொடுமையானது நடுவில் உள்ள சீட். இரண்டு பக்கமும் கை வைப்பதற்காக இருக்கும் இடத்தில் எனக்கு வலமும், இடமும் இருந்தவர்கள் வைத்துக் கொண்டனர். இந்த இருவரில் யாராவது ஒருவர் எடுப்பார்களா என்றால் தில்லி வரும் வரை நம் செபம் மட்டும் கேட்கப்படவே இல்லை.

தில்லியில் மாதிரி மிக சோம்பேறித்தனமாக வேலை செய்யும் காவல்துறையை வேறெங்கும் பார்க்கவில்லை. அவர்களின் கவனமெல்லாம் பயணிகளின் பைகளில் இருக்கும் ஃபாரின் சரக்கின் மேலேயே இருந்தது. எப்படியோ ஒருவகையில் தில்லி வந்தாயிற்று என்றால் இது நம்ம ஊர்தான் என்பதற்கு மிக எளிதான சான்றுகள் தெரிந்தன. தில்லி ஏர்போர்ட்டில் நிறைய பேர் ஓஸி கேட்டனர். இந்த ஈஸி மணியைப் பற்றி எனக்கு சுருக்கென்று கோபம் வந்தது. பாத்ரூமில் முகம் கழுவிவிட்டு வெளியே வந்;தவுடன் அங்கே நின்று கொண்டிருந்த பையன், 'சார் ஏதாவது!' என்றான். புத்தகக் கடையில் 'ஷல்மான் ருஷ்டியின் புத்தகம் எங்கே?' என்று கேட்க, 'அதோ அங்கே!' என்று சுட்டிக் காட்டியவனும் கேட்டான். 'மதுரைக்கு ஒரு ஃபோன் பண்ணலாமா?' என்று பண்ணி முடித்துவிட்டு பில் கட்டும் போது மீதி பணம் இல்லை என்று மறுத்துவிட்டார் அந்த ஏர்டெல் பணியாளர்.

இதில் கடுப்பாகிப் போய் அமர்ந்தால் சென்னை விமானம் இரண்டு மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. இது தாமதம் என்றால் மதுரை விமானத்தை விட்டுவிடுவோம் என்று எனக்கு அங்கேயே பட்சி சொன்னது. சென்னை வந்து சேர்ந்தால் விமான நிறுவனத்திடமிருந்து எந்தவொரு வருத்தமோ, மன்னிப்போ சொல்லப்படவில்லை. 'எங்களின் விமான சேவையை பயன்படுத்தியதற்கு நன்றி. மீண்டும் உங்களை இந்த விமானத்தில் எதிர்பார்க்கிறோம்!' என்று பணிப்பென் மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தபோது அப்படியே காண்டாக இருந்தது.

மதுரைக்குச் செல்லும் ஜெட் விமானம் அன்னைக்குன்னு பார்த்து அஞ்சு நிமிஷம் முன்னாலேயே போயிடுச்சு. அப்புறம் என்ன எஸ்.ஆர்.எம் தயவுல மதுரை போய்ச் சேர்ந்தேன்.

திரும்பவும் அதே பாடுதான். சென்னையிலிருந்து தில்லி விமானம் தாமதம். தில்லியில் இறங்கும் போதே இரண்டு பேர் 'நீங்க தான் கருணாநிதியா?' என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நடந்து சென்றால், 'திஸ் இஸ் த ஃபைனல் கால் ஃபார் த பேசன்ஞர் கருணாநிதி!' என்று மைக்கில் வேறு சொல்லிக் கொண்டிருந்தனர். எங்கப்பா பேர் இப்படி டில்லி ஏர்போர்ட் முழுதும் கேட்கும் என அவர்கூட நினைத்திருக்க மாட்டார். இந்த ஓட்டத்தின் நடுவே காவல்துறை செக்அப் வேறு.

நம் துரதிர்ஷ்டம் அங்கேதான் தொடங்கியது என்பது எனக்கு விமானத்தில் ஏறிய பின் தான் தெரிந்தது. இப்போது பாதையோர சீட். இதில் உள்ள தர்மசங்கடம் என்னவென்றால் மற்ற இரண்டு பேர் எப்பெல்லாம் எந்திருக்கிறாங்களோ நாமளும் எந்திரிச்சி வழி விடனும். அமர்ந்திருந்த ரெண்டு பேரில் ஒருத்தன் மொக்கப் பீசு. மற்றவன் முரட்டுப் பீசு. தண்ணீர் உடம்பில் பட்டு பல மாதங்கள் ஆகியிருக்கும் போல. மணப்பாடு பக்கம் யாரோ பஸ்ல கருவாட்டுக் கூடை கொண்டு போனது போல இருந்தது. சாப்பாட்டு நேரம். இந்த இரண்டு பேரும் தங்களுக்குப் பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கே ஆச்சர்யம். ஆனால் காஃபி வேண்டும் என்று கேட்டார்கள். எனக்கு அருகில் இருப்பவர் காஃபியை எடுத்து அப்படியே என் மேல் கொட்டிவிட்டார். சூடு தாங்க முடியாமல் அலற அவர் புன்முறுவல் பூத்தார். புத்தாண்டில் கெட்டவார்த்தை பேசக் கூடாது என்பதால் நானும் மௌனமாகச் சிரித்தேன். பாவி மகன். ப்ளைட்டுலேயே துண்டைக் கட்டி டிரஸ் மாத்த வச்சிட்டான். இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் தேநீர் பரிமாறப்பட்டது. இந்த முறை அவர் கோக் கேட்டார். நான் சுதாரித்துக் கொண்டு என் சீட்டிலிருந்து வெளியே வந்து விட்டேன். இந்ந முறை அவர் கோக்கை தன் மேலேயே ஊற்றிக் கொண்டார். பாவம் பயபுள்ள கை ரொம்ப வீக் போல.

காஃபி, கோக் என ஈரமாக ரோம் வந்து இறங்கினேன். இதில் மிலானுக்கு முதலில் சென்றதால் இரண்டு மணி நேரம் தாமதம் வேறு.

இன்னொரு விஷயம். நாம இருக்குற வரிசை தவிர மற்ற அனைத்து வரிசைகளிலும் விமானப் பணிப்பெண்கள். நம்ம வரிசைக்கு மட்டும் இந்தி நடிகர் மாதிரி பசங்க. எட்டி எட்டியே நாமளும் எவ்வளது தூரம் தான் பார்க்க!

எப்பவும் வேலை பார்த்துவிட்டு களைத்துப் போய் ஃப்ளைட்டுல மட்டும் தான் தூங்க டைம் கிடைப்பது போல பந்தா காட்டும் சாப்ட்வேர் பசங்க ஒரு பக்கம்.

அம்மி மிதிச்சி, அருந்ததி பார்த்து கட்டின தாலியை வீட்டுலேயே கழத்தி வச்சிட்டு உச்சி நெற்றியில் ஒரு துளி குங்குமம் வைத்து 'எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு' மினுக்கும் ஜீன்ஸ் பெண்கள் மற்றொரு பக்கம்

ஆனா...இந்தப் பொண்ணுங்க தூங்குனாலும் அழகுதான். தூங்கி எந்திரிச்சி அசடு வழிய உட்கார்ந்தாலும் அழகுதான்.

கடவுள் ரொம்ப மோசம் பாஸ்.

போதும் போதும் என்றாகிவிட்டது இந்தப் பயணம்.

'உனக்கு என்னப்பா டவுன் பஸ்ல மாதிரி ஃப்ளைட்ல போய்கிட்டு இருக்க!' என்று என்னைப் பார்த்து யாரோ சொன்னதுதான் நினைவிற்கு வந்தது.


3 comments:

  1. கூழுக்கு உப்பில்லையே என்று அழும் ஜீவன்களின் மத்தியில் பாலுக்கு சீனி இல்லையே என்று அழும் சிலரைப்போல இருக்கிறது இன்றையப் பதிவு. இன்னும் பேரூந்தையும், புகைவண்டியையுமே பார்த்தறியாரின் மத்தியில் ந்த்தம்பட்டிப் பையன் ஒருவன் இத்துணைமுறை உயர,உயரப்பறந்து கொண்டிருப்பது எவ்ளோ பெரிய விஷயம்.இதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டுமல்லவா? அதுதான் தங்களின் இந்த அனுபவம்.தாங்கள அனுபவித்த அத்தனையையும் அந்தக் கடைசி வரிகள் ஈடு செஞ்சுருக்குமே!!??

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    i was laughing as i was reading yesu. Thanyawath ji

    ReplyDelete