Thursday, January 29, 2015

மாதொருபாகன்

இன்னைக்கு ஒன்இண்டியாவுல நியூஸ் படிக்கும் போது சுபவீ அவர்களோட கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. பெருமாள் முருகன் எழுதி இன்று சர்ச்சiயில் இருக்கும் நாவல் 'மாதொருபாகன்' பற்றிய கட்டுரை அது. மாதொருபாகனை ஆதரித்து எழுதியிருந்தார்.

இப்ப அண்மையில வந்திருக்கிற பிகே திரைப்படமும் சரி, இந்த மாதொருபாகனும் சரி. எந்த அளவுக்கு சர்ச்சையானதோ அந்த அளவுக்கு விற்றும் போகிறது.

இந்த நாவல் 2010ஆம் ஆண்டே வெளிவந்தாலும் இப்போதான் சர்ச்சை வருகிறது. இதன் பிண்ணனி என்ன? வழக்கமாக சினிமாவுல எதும் பிரச்சினைன்னா, ரசிகர்கள் அடிச்சுக்குவாங்க. நடிகர்கள் வேடிக்கை பார்ப்பாங்க. ஆனா எழுத்து உலகத்துல எழுத்தாளர்கள் அடிச்சுக்குவாங்க. வாசகர்கள் வேடிக்கை பார்ப்பாங்க.

இந்த மாதொருபாகன் எழுதிய பெருமாள் முருகன் அண்மையில் நீதிமன்றம் சென்று, 'பெருமாள் முருகன் என்ற ஒரு எழுத்தாளன் இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

ஒரு கலைஞன் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கு நம்ம ஊர்ல தான் முட்டுக்கட்டை அதிகம். சாதி, மதம் என அதுக்க ஒரு கோட்டிங் கொடுத்து நாம் ஏதாவது இடையூறு செய்யத் தொடங்கி விடுகிறோம்.

இந்த நாவலை எப்படியும் வாசித்துவிட வேண்டும் என நினைத்து இதன் மின்பதிப்பைக் கண்டுபிடித்து வாசித்தும் விட்டேன். மொத்தம் 190 பக்கங்கள். 3 மணி நேரம் எடுத்தது. இடையில் உணவு இடைவேளை.

மிக அருமையான நாவல்.

முதலில் ஆசிரியரின் பெயரே விநோதமாக இருக்கிறது. பெருமாள் முருகன். 'பெருமாள்' என்பது வைணவம் சார்ந்தது. 'முருகன்' என்பது சைவம் சார்ந்தது. வழக்கமாக, இந்துக்கள் வைணவ மற்றும் சைவப் பெயர்களை சேர்த்து வைக்க மாட்டார்கள். இந்து மதத்தின் இரண்டு தூண்களும் இணைந்திருப்பது போல ஒரு பெயர்.

நாவலின் பெயர் 'மாதொருபாகன்' - 'மாது ஒரு பாகம்' என்பதே மருவி மாதொருபாகன் என வந்துள்ளது. வழக்கமாக அர்த்தனாரீஸ்வரர் அல்லது அம்மையப்பன் என்று கேள்விப்பட்டிருப்போம். அதுதான் இது. திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் உருவமானது ஒரு பக்கம் ஆணாகவும் (வலது), மறு பக்கம் பெண்ணாகவும் (இடது) இருக்கும். ஆணும், பெண்ணும் இணைந்ததே உலகம் என்று சொல்லும் கடவுளின் உருவம் இது. நம்ம பைபளிலும் பாருங்களேன். கடவுள் முதல் பெண்ணை ஆணின் இடது பக்க விலா எலும்பிலிருந்து தான் செய்கிறார். இடது பக்கத்தில் தான் இதயம் இருக்கிறது. ஆக, உணர்வு, எண்ணம் அனைத்தின் ஊற்றாக இருப்பவர் பெண். மேலும், இந்த இதயத்தின் அருகில் நாம் பெண்ணை வைத்து அன்பு செய்ய வேண்டும் என்பதும் இதன் கருத்து.

திருச்செங்கோட்டில் ஒவ்வொரு வருடம் நடக்கும் ஆண்டுத் திருவிழாவின் பதினான்காம் நாளன்று, அதாவது சாமி மலையில் இருந்து இறங்கி மீண்டும் ஏறிச் செல்லும் நாளன்று, அந்த ஆலயத்திற்கு குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் அங்கு தான் காணும் எந்தச் சாமியோடும் (ஆணோடும்!) உறவு வைத்துக்கொள்ளலாம். இப்படிப் பிறந்த பிள்ளைகளை சாமி தங்களுக்குக் கொடுத்த குழந்தைகளாகவே அவர்கள் கருதுவர்.

இது இன்றளவும் நடக்கின்ற ஒரு நிகழ்வு என்று ஆய்வு செய்து, இந்த ஆய்வின் பின்புலத்தில் தன் நாவலை எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.

இதுதான் கதையின் பின்புலம். இதை வாசித்தவுடன் சிலருக்கு முகம் சுளிக்கும். அதெப்பெடி முன்பின் தெரியாத ஒரு ஆணிடம் பெண் உறவு கொள்ள முடியும்? திருவிழாவிற்கு வருபவரெல்லாம் சாமி என்று எப்படி சொல்ல முடியும்? இது பெண்ணை இழிவுபடுத்தும் செயல் இல்லையா? என்று நாம் நிறைய கேள்விகள் கேட்கலாம்.

இது சரியா? அல்லது தவறா? என்று விளக்கம் தருவது ஆசிரியரின் நோக்கம் அல்ல.

இதற்கு இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. ஆனால் இந்துக்களின் சட்டநூலான மனுநீதியில் கூட இப்படிச் செய்வது சரி என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்றவருக்கு குழந்தை பாக்கியம் தருவதற்காக, அவரோடு எந்தவித காம உணர்வும் இன்றி, மற்றவரோடு கூடலாம் எனவும், அப்படி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லும் மனுநீதி இதை 'நியோகா தருமா' என அழைக்கிறது. நம்மை பைபிள்ள கூட இதே கான்செப்ட் இருக்கு. அதாவது மணமான ஒரு பெண் குழந்தையில்லாமல் இருக்கின்ற நிலையில் கணவன் இறந்துவிட்டால் அவனது சகோதரன் (இங்கே சகோதரன் என்பது இனத்தான் என்றும் பொருள்படும்!) அவளை மணம் முடித்து குழந்தை கொடுக்கலாம். இங்கே ஒரு கண்டிஷன் - கணவன் இறந்தபின்.

ஒரு சில சாதிய அமைப்புகள் தங்கள் சாதியினரை கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆக, மதமும், சாதியும் தான் முட்டுக்கட்டை போடுகிறது.

இந்த சாதி, மத சாயத்தை அகற்றிவிட்டு புத்தகத்தைப் பார்ப்போமே!

காளி தான் இந்த நாவலின் கதாநாயகன். பொன்னா கதா நாயகி. திருமணம் ஆகி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் இவர்களுக்குக் குழந்தையில்லை. மேலே சொல்லப்படும் பதினான்காம் திருநாளில் பொன்னா கலந்து கொண்டு வேறு எந்த சாமி வழியாகவாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்பதுதான் கதையின் பிணைப்பு நூல்.

காளிக்கும், பொன்னாவுக்கும் இடையே இருக்கும் காதல். பொன்னாவின் அண்ணன் முத்துவுக்கும், காளிக்கும் இருக்கும் நட்பு, மாமன், மச்சான் உறவு, திருவிழா, ஆடு, கோழி வளர்ப்பு, மாட்டு வண்டி என முழுக்க முழுக்க கிராமத்து மண்வாடை அடிக்கின்றது.

வேளாளம் செய்யும் கவுண்டர், பனையேறி நாடார் மற்றும் சக்கிலி சமூகத்தினர் வாழும் ஒரு ஊரில் தான் இந்தக் கதை நடக்கிறது. இந்த மூன்று குழுக்களுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வை மிகத் தெளிவாகக் கண்முன் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் போது ஒரு தம்பதியினர் அடையும் வலியை, இந்தச் சமூகம் பேச்சும் பேச்சுக்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கின்றார்.

மற்றொரு பக்கம் குழந்தையில்லாமல் இருந்தால் எப்படி இருக்கலாம் என்று தொனியில் நல்லுப்பையன் சித்தப்பா என்ற கதாபாத்திரம். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதான். இதை வாசிக்கும் போது என் இரண்டாவது தாய்மாமன் நினைவு தான் அதிகமாக வந்தது.

தன் மனைவி மற்றொருவனுடன் உறவு கொள்ள வேண்டுமா! என்று முடிவெடுக்க முடியாமல் துடிக்கும் காளி, கணவன்னா இப்படித்தான் இருக்கணும் என்பதை நம் முன் கொண்டு வருகிறார். 'பொசசிவ்னஸ்' என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் தான் என்பதை காளியின் முகத்தில் நாம் காண முடிகிறது.

ஃபோக் ரெலிஜன் என்று சொல்லப்படும் நாட்டுப்புற சாமிகளுக்கும், கோயில் கட்டி மந்திரம் சொல்லி நாம் வழிபடும் சாமிக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்த நாவல் சொல்கிறது.

ஒரு சில சொல்வழக்குகள் புரியவில்லை. மக்களின் பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

என்னைக் கவர்ந்த வாக்கியங்கள் பல. அவற்றில் இதுதான் இப்போதும் நினைவில் இருக்கிறது:

'புதிதாக்குவது அம்மாக்களின் வேலை.
அதற்காக அவர்களும் புதிதாகிக் கொண்டே இருக்கிறார்கள்.'

எனக்கு ஒரு ஆசை. இதை இன்னும் நேரமெடுத்து வாசித்து, இதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பைபிள் இன்ஸ்டிட்யூட்ல பைபிள் படிக்கிறதுல உள்ள ஒரு பிறவிப்பயன் இதுதான். இந்தப் படிப்பை வைச்சு எந்தப் புத்தகத்தையும், எந்தத் திரைப்படத்தையும், நாடகத்தையும் மிக அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய முடியும். இங்க நாங்க படிக்கிற படிப்பே அதுதான். பைபிளை வெறும் புத்தகமா எப்படிப் படிக்கிறது? இதை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மனிதரும் காலம் எழுதுகிற புத்தகம் தானே.

இந்த நாவலை வாங்க முடிந்தவர்கள் கண்டிப்பாக வாங்குங்கள்.

இந்த நாவிலின் மின்பதிப்பை தரவிறக்கம் செய்பவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்.

Maadhorubaagan

பெருமாள்முருகனுக்கு வாழ்த்துகள்!

'மாதொருபாகன்' - உங்களுள்ளும்! என்னுள்ளும்!


3 comments:

  1. " மாதொருபாகன்"... தந்தை இந்த நாவலை எவ்வளவு இரசித்திருக்கிறார் என்பது ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது. இந்த நாவலின் மையக்கருத்து!!??... தங்களின் கூற்றுப்படி பெண்களைப்போலவே 'பொச்சிவ்னஸ்' ஆண்களுக்கும் உண்டென்றால் அது எப்படி சாத்தியமாகும்? இன்றையப்பதிவில் தங்களைக் கவர்ந்த வாக்கியம் தான் என்னையும் கவர்ந்துள்ளது." புதிதாக்குவது அம்மாக்களின் வேலை; அதற்காக அவர்களும் புதிதாகிக் கொண்டே இருக்கிறார்கள்." " காலம் எழுதுகிற புத்தகம் தானே மனிதன்"... அழகான பதிவு. எப்படியோ என்னையும் இந்த நாவலைப்படிக்கத் தூண்டுகிறது தங்களின் எழுத்து.நன்றியும்...பாராட்டும்....

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    I'm downloading the book yesu

    ReplyDelete