Monday, January 26, 2015

ஒபாமா நத்தம்பட்டிக்கு வர்றார்!

இந்தா வர்றார்...அந்தா வர்றார்னு சொன்னாங்க.

இன்னைக்கு காலையில் வந்தே விட்டார் நம்ம பிக் பிரதர் ஒபாமா.

பிள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவ் கிடைக்கலயாம். அதனால மனைவி மிஷலோட மட்டும் வந்திருக்காரம். மிஷலுக்குக் கொடுக்க நம்ம மோடி 100 பனாராஸ் பட்டு சேலை வாங்கி வச்சிருக்காராம். ஆனா, வந்த இறங்குன மிஷலுக்குக் கைகூட குலுக்கல. சரி இருக்கட்டும்!

ஆனா, நம்ம மிஷலும் வந்ததுல இருந்து ஹோட்டலே கதின்னு கிடக்குறாராம். ராஜ்பவன் போகலை. ராஜ்காட் காந்தி நினைவகம் போகல. எல்லாத்துக்கும் பாவம் பிரதர் தனியே தான் போயிருக்கார்.

நம்ம பிரதர் சாப்புடற சாப்பாட்டை 15 நிமிஷத்துக்கு முன்னால ஒருத்தர் சாப்பிடுவாராம். அவருக்கு ஏதும் ஆகலைன்னாதான் பிரதர் சாப்பிடுவாராம். நம்மள எந்த அளவுக்கு நம்புறாங்க பாருங்களேன்!
நம்ம ஊரு போலீசை நம்பல. அதனால அவக ஊருல இருந்தே போலீசு, மோப்ப நாய், ஸ்குவாட் எல்லாம் வந்துருக்கு.

இன்னைக்கு எங்க அம்மாகிட்ட சும்மா கேசுவலா கேட்டேன். என்னம்மா நம்ம ஊருக்கு ஒபாமா வந்துருக்காரமுள்ள! அவங்க காதுல 'கோப்பம்மா!' அப்படின்னு விழுந்துருக்க போல. இந்த கோப்பம்மா தான் எங்க ஊரு முன்னால் பிரசிடன்ட். இப்ப வேற ஊருக்கு போயிடுச்சு. இவங்க பிரசிடன்ட் ஆ இருந்தப்போ தான் எங்கம்மா பேருல ஒரு வீடு கட்ட உதவி வந்துச்சு. அதனால, ஒபாமா கூட கோப்பம்மா னு தான் கேட்குது.

'யாரு வந்தா என்ன? விடிஞ்சா நாம தான் வாசல் கூட்டனும். தண்ணீர் தெளிக்கணும்!' அப்படின்னாங்க. அதென்னவோ உண்மைதான். பிரதர் வந்துட்டுப் போனாலும், வரலன்னாலும் நம்ம வேலை செஞ்சாதான் சாப்பாடு.

இந்த அமெரிக்கா குரூப் நம்ம ஊர்களுக்கு வந்தால் தான் இவ்வளவு அலப்பறை! ஜெர்மனியில போய் இந்த பந்தா பண்ணச் சொல்லுங்களேன்! தம்பி நாங்க குடுக்கிறத சாப்பிடு! விஷம் இருக்கும்! அப்படி இப்படி பயந்தீன்னா நீ ஒங்க ஊர்ல இருந்து சாப்பாடு கொண்டு வா! அப்படின்னு கூலாச் சொல்லிடுவாங்க.

இதுல நம்ம ஊருல ஒருசிலர் நம்ம இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போனதுன்னு சொல்வாங்க. ஏங்க! நீங்க விருந்தோம்பல், விருந்தோம்பல்னு சொல்றீங்களே! எங்க உங்க ஊர் டீக்கடையில ஓசியில ஒரு டீ குடிக்க முடியுமாங்க உங்களால! அல்லது உங்களுக்கு பசின்னா அடுத்தவன் சாப்பாடு கொடுப்பானா?

எல்லாம் இருக்குறவனுக்கு தான் நம்ம ஊர்ல விருந்தோம்பல். ஏன்னா அப்புறம் எப்படியாவது வசூலிச்சிடலாம்ல. ஒன்னும் இல்லாதவனுக்கு வெறுந்தோம்பல்தான்!

சரி! நம்ம பிரதர் எதுக்கு வந்திருக்கார்?

நம்ம ஊர்ல ரெண்டு தேசிய விழாக்கள்: சுதந்திர தினம். குடியரசு தினம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சிம்பிளா சொல்லணும்னா. நம்ம வீட்டுல பக்கத்து வீட்டுக்காரன் வந்து உட்கார்ந்துகிட்டு நம்மள ஆட்டிப் படைச்சிட்டு, ஒருநாள் சரிப்பா, நான் எங்க வீட்டுக்குப் போறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டான் வைங்க. 'அப்பாடா! போயிட்டான்!' அப்படின்னு பெருமூச்சு விடுவோம்ல அதுதான் சுதந்திர தினம். அவன் போயிட்டான். இனி சாப்பாட்டுக்கு என்ன பண்றது? வீட்டை எப்படி நிர்வாகம் பண்றது! இதெல்லாம் யோசிச்சு இனிமேல் நம்ம வீடுன்னா இப்படி இப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறது குடியரசு தினம்.

இந்த குடியரசு தினம் அன்னைக்கு முக்கியமானது ஒரு பெரிய பரேடு நடக்கும். நம்ம ஊருப் பொண்ணுங்க ஆடிப்பாடி பரேடுல வந்தாலும், முக்கியமாக அணிவகுப்பது நம்ம நாட்டோடு படைக்கலங்கள். அதாவது, வெடிகுண்டு, பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் எல்லாத்தையும் ரோட்டுல கொண்டு வந்து காட்டி, 'பாருங்கடா! நாங்களும் ரவுடிதான்னு!' உலகத்துக்குச் சொல்ற நாள்தான் இந்தக் குடியரசு தினம்.

சும்மாவே அமெரிக்காவுக்கு ஒரு சில நாடுகளைப் பார்த்துப் பயம். 'இவன் எல்லாத்தையும் வச்சிக்கிட்டே இல்லாத மாதிரி நடிக்கிறானா!' அப்படின்னு தான் நம்ம நாட்டை நினைப்பாங்க. ஆனா, விடிஞ்சா நம்ம பிரதர் எல்லாத்தையும் அவரே கண்கூடாய்ப் பார்த்துவிடுவார்.

நம்ம பக்கத்துவீட்டுக்காரன் நம்மளப் பார்த்து உங்க வீட்டுப் பீரோவுல எவ்வளவு பணம் இருக்கு! பண்ட பாத்திரம் எத்தனை இருக்கு! நகை நட்டு எவ்வளவு இருக்கு! அப்படின்னு கேட்டா நம்ம அவனைக் கூட்டி வந்து காட்டுவோமா என்ன? எம்புட்டு கோபம் வரும் நமக்கு? ஆனா, நாளைக்கு நம்ம மோடி அதைத்தான் செய்யப்போறார்.

நம்ம பிரதர்க்கு பாதுகாப்பு அப்படிங்கிற பேர்ல அவங்களோட கேமராவுல எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டு போயிடுவாங்க! போனா போகட்டும்! நம்மள ராமரோ, லட்சுமணனோ யாராவது காப்பாத்துவாங்க!

எங்க ஊர்ல நடக்குற ஆட்சி காவி ஆட்சி தான் அப்படிங்கிறத, காவி சால்வையைப் போட்டுகிட்டு ஏர்போர்ட் போன நம்ம மோடி காட்டிட்டார்.

இந்த முறை நம்ம ஊருக்கு வந்த ஒபாமா காந்தி நினைவகம் போனார். அடுத்த முறை வரும்போது 'கோட்சே நினைவகம்' போக வேண்டியிருக்கும். அதுக்குள்ள தான் கோட்சேக்கு சிலை வச்சு பாலாபிஷேகம் செஞ்சிடுவார் மோடி.

மேல ஒபாமா, ஒபாமா அப்படின்னு இருக்க, நம்ம ஊர்ல ஒரே ஸ்ரீரங்கம் பேச்சாதான் இருக்கு.

எது எப்படியோ, நம்ம படிச்சா தான் மார்க்கு. நம்ம சமைச்சாதான் சோறு.

2 comments:

  1. தந்தைக்கு அமெரிக்கா மீது உள்ள ' அலர்ஜி ' இன்னும் குறையவில்லை போலும்.நாம் விரும்பினும், விரும்பாவிட்டாலும் உலகமே நிமிர்ந்து பார்க்கும் ஒரு தலைவர் தான் ' ஓபாமா'. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் தாண்டி இன்று நம் நாட்டிற்கு வந்துள்ள விருந்தினராக அவரைப்பார்க்கும்,அங்கீகரிக்கும் நேரமிது. அரசியலையும், அரசியல்வாதிகளையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் நமக்கே உரித்தான 'விருந்தோம்பலை' அவருக்கு நிருபித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.ஏன், நீங்கள் ந்த்தம்பட்டிக்குக் கூப்பிட்டுப் பாருங்களேன். யார் கண்டா? ஒருவேளை வரக்கூடும்......அனைவருக்கும் 'குடியரசு' தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    Dear Yesu very happy to read your writing. Wonder at you.you find time for everything. To pray read write laugh. ...etc.wishing you all the success Yesu. Unga I A S with prayers

    ReplyDelete