Sunday, January 18, 2015

என்றும் கண்முன் என் ஜூலி!

இன்னைக்குக் காணும் பொங்கல். அதாவது சொந்தக் காரங்களைப் போய்ப் பார்க்கிற பொங்கல். அந்த விவசாய சமூகத்துல ஒருவர் மற்றவர் தங்கள் பொழப்பையே பார்த்துகிட்டு இருந்ததுனால ஒரு நாள ஒதுக்கி இந்த நாள்ல எல்லாரும் எல்லாரையும் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பாங்களோ என்னவோ. ஆனா, இன்னைக்குக் காணும் பொங்கல்னா சுற்றுலா தளங்களில் ஒன்று கூடுவதும், சினிமாவுக்குப் போவதும், டிவி புரோகிராம் பார்ப்பதும் என மாறிவிட்டது.

ரொம்ப நாளா பார்க்க முடியாத சில நபர்களை இன்று பார்க்கலாம் என நினைத்தாலும் தூரம் அதிகம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. ஆகையால், ரொம்ப நாளா பேசமா இருக்கிற யார்கிட்டயாவது இன்று பேசலாமே என நினைத்தேன்.

இன்று நான் அப்படி உரையாடிய நபர் ஜூலி. பெயரைப் பார்த்தவுடன் பொம்பளப் புள்ளனு நினைச்சிடாதிங்க. இவரும் ஒரு ஃபாதர் தான். புனே குருமடத்தில் எனக்கு 4 வருடங்கள் சீனியர். இவரை முதன் முதலாக நான் பார்த்தது புனே குருமட ஃபுட்பால் கோர்ட்டில் தான்.

ஒரு விஷயம் தெரியுமா. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதே என் 19 வயதில் தான். சின்ன வயசில இருந்தே எனக்கு சைக்கிள் ஓட்டணும்கிற ஆசையெல்லாம் இருந்தது. ஆனா எங்க அப்பா தான் 'பெடல் உயரம் கூட இல்ல! நீ எல்லாம் எப்படி சைக்கிள் ஓட்டுவ! சைக்கிள் ஓட்டணும்னா பயம் இருக்கக் கூடாது! தைரியம் வேணும்!' அப்படி இப்படினு சொல்லி நான் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் மும்முரமாக இருந்துவிட்டார். சைக்கிள் ஓட்டவே இவ்ளோ லேட்னா, அப்புறம் பைக், கார் எல்லாம் நீங்களே யோசிச்சுக்கோங்க. ஆனா, ஒன்னு மட்டும் முக்கியம். வண்டி ஓட்டணும்னா பயம் இருக்கக் கூடாது. இந்தப் பயத்தினாலேயே நான் நிறைய தடவை கீழே விழுந்திருக்கிறேன். இன்னைக்கும் எனக்கு வர்ற இன்னொரு பயம் வண்டியில யாருக்காவது லிப்ட் கொடுப்பது. முடிந்த வரை தவிர்த்து விடுகிறேன். 'இருசக்கர வாகனம் ஒருவருக்கு மட்டுமே!' என்பது கொள்கை.

புனே ஃபுட்பால் கோர்ட்டில் மதிய நேரத்தில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ஒருநாளில் ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போதுதான் இந்த ஜூலியைச் சந்தித்தேன். அவரது இரண்டு நண்பர்கள் பெபி மற்றும் ஜான் டிசூசாவோடு வந்திருந்தார். என்னவோ பார்த்தவுடன் பிடித்துவிட்டு - அவருக்கு!

பிரதர் என்று தான் முதலில் அழைத்தேன்! குருமடத்தில் ஒருவர் மற்றவரை அப்படித்தான் அழைக்க வேண்டும்!

இது ஒரு வித்தியாசமான உறவு. என்னைப்பற்றிய எல்லாம் அவருக்குத் தெரியும். அவரைப்பற்றிய எல்லாம் எனக்குத் தெரியும். குருமட வாழ்க்கை முடிந்து அவர் அருட்பணியாளராக மாறியதும் கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது. நிறைய தோழிகள் அவருக்கு. இந்தத் தோழிகள் வந்தாலே நண்பர்கள் பிரிந்து விடுவார்கள் என்பதற்கு எங்கள் உறவும் ஒரு உதாரணம். ஆனா, எவ்வளவு நாள் பேசாம இருந்துட்டு திரும்பப் பேசினாலும், எவ்வளவு நாள் பார்க்காமல் இருந்துட்டு திடீர்னு பார்த்தாலும் அதே நெருக்கம், அதே புரிதல், அதே நட்பு. எங்களுக்குள் சண்டை வந்ததே கிடையாது. ஏதாவது கோபம் வரும். ஆனா உடனே சரியாகிவிடும்.

எந்தப் புத்தகத்தையும் ரொம்ப அசால்டா வாசித்து முடித்துவிடுவார். பன்மொழிப் புலமையாளர். நல்ல மறையுரையாளர். யாரிடமும் எளிமையாகப் பேசுவார்.

முதன் முதலாக பெர்ஃப்யூம் போடப் பழக்கியது, ரெட் லேபிள் குடித்தது, பேங்க் அக்கவுண்ட் தொடங்கியது, தியேட்டர் போனது, மல்டிப்ளக்ஸிஸ் ஷாப்பிங் செய்தது, ஃப்ளைட் ஏறியது என அனைத்து முக்கிய முதன் முதலாக்களும் இவரோடு தான்.

ஜூலியை நினைத்தால் மூன்று பொழுதுகள் உடனே கண்முன் வரும்.

அ. என் மெய்யியில் இறுதித் தேர்வுக்கு என்னை தயார் செய்த விதம். நான் என்ன சொன்னாலும் அதை ரசிப்பார். 'ஆல் தெ பெஸ்ட்' என்று அவர் 2002ல் அளித்த கார்ட் இன்றும் என்னுடன் இருக்கிறது.

ஆ. என் திருத்தொண்டர் பட்டம். நான், ஃபாத்தி மற்றும் நண்பர்கள் என திருத்தொண்டர் பட்டம் புனேயில் நடந்தது. இந்த நிகழ்விற்கு சொந்தக்காரர்கள் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது குருமடத்தின் சட்டம். அந்த நாளில் வந்து உற்சாகப்படுத்தினார்.

இ. என் குருத்துவ அருட்பொழிவு விழா. மதுரையில் நடந்த நிகழ்விற்கு வந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு முன் தயாரிப்பாக, அன்று நான் அணிந்த திருவுடை முதல், பயன்படுத்திய பவுடர் வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கிப் பரிசளித்தவர்.

இன்று நாங்க ரொம்ப விஷயங்களைப் பேசினோம். இனி எப்போது பேசுவோம் என்பது தெரியாது. நாளை பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்காது. அடுத்த காணும் பொங்கலுக்குப் பேசினாலும் உரையாடல் என்னவோ இன்று விட்டதிலிருந்து தொடங்குவது போல நெருக்கமாக இருக்கும்.

காலத்தையும், இடத்தையும் கடக்கும் இறகு நட்பிற்கு உண்டு என்பதை எனக்கு உணர்த்தியது இந்த ஜூலியின் நட்பு. கண்களால் காண முடியவில்லையென்றாலும் என்றும் கண்முன் என் ஜூலி.


3 comments:

  1. யாரும் பார்த்துப் பொறாமைப் படும் விதமாய் ஒரு நட்பு.இப்படிப்பட்ட நட்பிற்கிடையேதான் ....எந்த எதிர்பார்ப்புமில்லாத, நட்பிற்காக மட்டுமே ஒருவர் மற்றொருவரை நேசிக்கும் போதுதான் காலங்கள் கடந்து சந்திக்கும் போதும் அதே நெருக்கம்,அதே நட்பு,அதே புரிதல் தொடர முடியும்."அனைத்து முக்கிய முதலாக்களும் இவரோடுதான்"..அழகான மனத்தின் அழகான வெளிப்பாடு."ஆம் கண்டிப்பாக காலத்தையும்.நேரத்தையும,தூரத்தையும் கடககும் இறகு நட்பிற்கு உண்டு " என்பது உண்மைதான்.தொடரட்டும் இந்தத் தூய நட்பு.எந்தத் தோழியும் இதை சிதைத்து விடாமல் கவனமாயிருங்கள்.....இந்த நட்பை காணும் பொங்கலோடு இணைத்திருப்பது உண்மையிலேயே க்ளைமாக்ஸ்.....

    ReplyDelete
  2. You kill me with your write ups (கொன்னுட்டீங்க போங்க) ......an enjoyable experience reading!

    ReplyDelete
  3. I really appreciate your friendship. if i would have known before you i might have been your friend.

    ReplyDelete