Wednesday, January 28, 2015

மிட்-லைஃப் கிரைசிஸ்

நேற்று மாலை நேரம் போகாமல் இண்டர்நெட்டை நோண்டிக் கொண்டிருந்தபோது 'மிட்-லைஃப்' கிரைசிஸ் பற்றிய ஒரு கட்டுரை கண்ணில் கிடைத்தது. 'இறப்பும், மிட்-லைஃப் கிரைசிசும்' - இதுதான் தலைப்பு. அதாவது நாம் நம் வாழ்வின் பாதியை வாழ்ந்த பிறகு ஐயோ சரியாக நாம் வாழவில்லையோ! என்ற பயமோ! நாம் தவறவிட்ட வாய்ப்புகள் குற்ற உணர்ச்சியாகவோ இருக்கும் என்பதைப் பற்றிய கட்டுரை. எழுதியவர் ஒரு அமெரிக்க பெண் உளவியல் அறிஞர். பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் 40 முதல் 45 வயதில் அவர்கள் இருக்கும் போது இந்த உணர்வு வரும் என்று குறிப்பிடுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சராசரி வயது 80 முதல் 85. ஆக, இங்கே 40 முதல் 45 வரை இந்த மிட்-லைஃப் பிரச்சினை வரும். ஆனால், நம் இந்தியாவில் சராசரி வயது 60 முதல் 70 தான். ஆனால், 2010ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சராசரி வயது 75ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். இதில் கிராமத்திற்கம், நகரத்திற்குமே வித்தியாசம் இருக்கின்றது. ஆக, குத்து மதிப்பா வச்சி பார்த்தா 32 முதல் 36 வயது வரை உள்ள ஒருவருக்கு இந்த மிட்-லைஃப் கிரைசிஸ் வர வாய்ப்பிருக்கிறது.

கிரைசிஸ் அப்படின்னாலே ஒரு எதிர்மறையான வாழ்க்கைச் சூழல். இந்த எதிர்மறையான சூழல் இயற்கையான ஒன்றுதான். இதை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்று மாற்றுக் கருத்தும் சொல்கின்றனர் சிலர். ஆண்களுக்கு, தலையில் முடி கொட்டுவது பெரிய அறிகுறியாகவும், பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது பெரிய அறிகுறியாகவும் சொல்லப்படுகின்றது. இரண்டுமே இயற்கை நிகழ்வுகள் தாம். உடலில் ஏற்படும் இந்தப் பாதிப்புகள் உள்ளத்தையும் பாதிக்கத் தொடங்குகின்றன.

நாம ரோட்டு ஓரத்திலே பாருங்களேன். பச்சைப் பசேல் என்று ஒரு மரம். நல்லா அடர்த்தியா கிளைகள். இலைகள். காய்கள். கனிகள். இயல்பாகவே நாம் அதைப் பார்ப்போம். ரசிப்போம். வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்குவோம். அதே மரம் இலைகளையெல்லாம் இழந்து நின்றால் அதை யாரும் ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. மரத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மனிதர்களுக்கு எல்லாம் தெரியுமே. யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், அடுத்தவர்கள் நம்மைப் பார்க்க வைக்க இந்தக் காலத்தில் தான் நாம் அதிக முயற்சி எடுப்போமாம். ஆண்கள் சின்ன வயதுக்காரர்களின் உடைகளை அணிவதும், பெண்கள் தங்கள் உடலமைப்பின் மேல் அதிக ஆர்வம் காட்டுவதும் இப்போதுதான் தொடங்குமாம். தங்கள் வயதுக்கு மிகக் குறைவானவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இங்கே தான் வருமாம்.

ஒரு தலைமுறை என்று சொல்வது 40 ஆண்டுகள். ஆக, நமக்கு நாற்பது வயதான பின் இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் நமக்கு அடுத்த தலைமுறையாகிவிடுகிறது. ஆக, அந்தத் தலைமுறைக்கும், நமக்கும் 'தலைமுறை இடைவெளி' வேறு வந்துவிடுகிறது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றொருபக்கம் இந்த இடைவெளியை வேகமாக அதிகரிக்கிறது. அடுத்த வரும் தலைமுறை 'கொஞ்ச நாளைக்கு முன்னால செல்ஃபோன்னு ஒன்னு இருந்துச்சாம்!' என்ற சொல்லும் அளவிற்கு வளர்ந்து விடும்.

வாழ்வின் இடைநிலைப்பருவம் எல்லாரும் சந்திக்கக் கூடிய ஒன்றுதான். சரி! இதை எப்படித்தான் சரி செய்வது?

வாழ்வை இருப்பது போல ஏற்றுக்கொள்வது. அவ்வளவுதான்.

'என் வழி எனக்கு. உன் வழி உனக்கு!'

வாழ்வின் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தியிருந்தாலும், பயன்படுத்தவில்லையென்றாலும், நாம் வந்த பாதை சரி என்றாலும் தவறு என்றாலும், வருத்தமோ, குற்றவுணர்வோ இருக்கவே கூடாது.

'இனியாவது நல்லா இருப்பேன்!' என்று ரொம்ப நல்லா இருக்க முயற்சியும் செய்யக் கூடாது.

வாழ்வின் முதல் குவார்ட்டர், ஆஃப் ஸ்டெடியா தான் இருக்கும். ரெண்டாவது குவார்ட்டர், அல்லது ஆஃப்லதான் கொஞ்சம் தடுமாற்றம் வரும்.

ஒவ்வொரு பொழுதையும் இனிதே வாழ்ந்தால், வாழ்வை குறுகிய மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்க்காமல், கலர்ஃபுல் கலைடாஸ்கோப் வழியாகப் பார்த்தால் எல்லா நாளும் நமக்கு வாழ்வின் முதல் நாளே!


5 comments:

  1. எந்த ஒரு மனிதனுமே தான் வாழ்ந்த வாழ்க்கையைக் திரும்பிப் பார்க்கும் போது செய்த தவறுகளை நிவர்த்தி செய்து வாழலாமே என்ற எண்ணம் வரும்.இப்படியொரு எண்ணம் வளர்ந்து கொண்டேபோனால் கண்டிப்பாக ஒரு ஜென்மம் போதாது.உச்சகட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய 32-36வயதில் செய்த தவறுகளை எண்ணி குற்ற உணர்ச்சியில் நாட்களைத் தள்ளுவதும் விவேகமல்ல. நம்மையும், நாம் வாழும் வாழ்க்கையையும் அதன் நிறை குறைகளோடு ஏற்று வாழ்க்கை நம்மைக் கூட்டிச் செல்லும் திசையில் பயணிப்பதே விவேகம்.வாழும தலைமுறையினருக்கு வாழும் முறையை அழகாக எடுத்துக்கூறிய தந்தைக்குப் பாராட்டு!!!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    So midlife starts for us yesu. I am on the way

    ReplyDelete
  3. அருமையான வார்த்தைகள் கனி. ஒவ்வொரு பொழுதையும் இனிதே வாழ்ந்தால், வாழ்வை குறுகிய மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்க்காமல், கலர்ஃபுல் கலைடாஸ்கோப் வழியாகப் பார்த்தால் எல்லா நாளும் நமக்கு வாழ்வின் முதல் நாளே!
    ரோமில் இருந்து வரும்போது எனக்கு ஒரு கலைடாஸ்கோப் வாங்கிட்டு வாங்க.

    ReplyDelete