Friday, January 23, 2015

மரியாளின் நிழல்கள் - 2

2. சாரா

சாரா ஆபிரகாமின் மனைவி. ஈசாக்கின் தாய். இவரைப்பற்றிய குறிப்பு எபிரேய விவிலியத்திலும் உண்டு. திருக்குரானிலும் உண்டு. தொடக்கநூல் 17:15ன் படி சாராய் என்ற இவரது பெயரை சாரா என மாற்றுகிறார் கடவுள். சாரா என்றால் இளவரசி என்பது பொருள். தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் தன் அடிமைப்பெண் ஆகாரை தன் கணவர் ஆபிரகாமிற்கு மனைவியாக அளிக்கின்றார். அவ்வாறே அடிமைப்பெண் கருவுற்று இஸ்மயேலைப் பெற்றெடுத்ததும் பொறாமையினால் ஆகாரை அலைக்கழிக்கின்றார். ஆகாரையும், அவரது மகன் இஸமயேலையும் வீட்டை விட்டுத் துரத்தும்படி ஆபிரகாமை வற்புறுத்துகின்றார். ஆபிரகாமின் இல்லத்தில் இளவேனிற்காலத்தில் மூன்று தூதர்கள் வந்தபோது அவர்களில் ஒருவர் அடுத்த இளவேனில் காலத்தில் சாரா கருத்தாங்கியிருப்பாள் என்று சொல்ல, தன் கூடாரத்தில் இருந்த சாரா அதைக்கேட்டு சிரிக்கிறாள். 'நீ எதற்காக சிரித்தாய்?' என்று அவர்கள் கேட்டபோது, 'சிரிக்கவில்லை!' என்றும் மறுதலிக்கின்றார் (காண். தொடக்கநூல் 18:9-15). தான் கடவுளின் வாக்குறுதியால் பெற்ற மகன் ஈசாக்கை ஆபிராகாமோடு இணைந்து அவரைப் பலியிடத் துணிகின்றார் (தொநூ 22).

தூய பவுலடியார் ஆகாரை அடிமையின் உடன்படிக்கை எனவும், சாராவை வாக்குறுதியின் உடன்படிக்கை அல்லது விடுதலையின் உடன்படிக்கை எனவும் ஒப்பிட்டுப் பார்க்கின்றார் (காண். கலாத்தியர் 4:21-31). ஆகார் அடிமைத்தனத்தின் மகனைப் பெறுகிறார் எனவும், சாரா அருளின் மகனைப் பெறுகிறார் எனவும், ஆகார் 'சட்டத்தையும்', சாரா 'அருட்கொடையையும்' குறிப்பதாக எழுதுகின்றார். மரியாள் விடுதலையின் மகனாம், அருளின் மகனாம் இயேசுவைப் பெற்றெடு;த்ததில் சாராவின் மேல் நிழலாடுகின்றார். சாரா தன் மகன் ஈசாக்கைப் பலியாகக் கையளிக்க வேண்டியிருந்தது போல, மரியாளும் தன் மகன் இயேசுவைப் பலியாகக் கையளிக்க வேண்டியிருந்தது. சாராவில் புதிய இஸ்ராயேல் இனம் தோன்றுகிறது. இஸ்மயேல் அல்ல, மாறாக ஈசாக்கே வாக்குறுதியின் மகன் என ஈசாக்கைத் தெரிவு செய்கின்றார் கடவுள். அவ்வாறே இயேசுவும் 'சகோதரர் சகோரருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்று' (உரோமையர் 8:29) கடவுள் அவரை முன்குறித்து வைக்கின்றார்.


3. ரெபேக்கா

'ரிபாக்' என்ற எபிரேய வேரிலிருந்து வரும் ரெபேக்கா என்ற சொல்லுக்கு இணைப்பவர், கட்டுபவர் அல்லது பாதுகாப்பவர் என்பது பொருள். இவர் ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் மனைவி. இவரை ஆபிரகாமின் பணியாளர் பெண்பார்க்கத் தேடிச்செல்லும் படலம் மிகவும் சுவராஸ்யமானது (காண். தொடக்கநூல் 24). ரெபேக்காக ஈசாக்கை மணமுடிக்க சம்மதித்துப் பறப்படும்போது அவரை இவ்வார்த்தைகளில் வாழ்த்துகின்றனர்: 'எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழி மரபினர் தங்கள் பகைவர்களின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!' (தொநூ 24:60). ஏசா மற்றும் யாக்கோபு என்ற இரண்டு மகன்களைப் பெற்றெடுக்கின்றார். இளைய மகன் யாக்கோபை மிகுதியாக அன்பு செய்ததால் அவர் மட்டுமே தந்தை ஈசாக்கின் ஆசியை முழுமையாகப் பெற வேண்டும் என விழைந்து, யாக்கோபை அவரது அண்ணன் ஏசா போல ஜோடித்து அனுப்புகின்றார். சாரா - ஆபிரகாம் தம்பதியரில் ஆபிரகாம் மிக ஆக்டிவ்வாக இருப்பார். ஆனால், ரெபேக்கா - ஈசாக்கு தம்பதியரில் ரெபேக்கா மிக ஆக்டிவ்வாக இருப்பார்.

ஆபிரகாமின் பணியாளர் ரெபேக்காவை தன் தலைவரின் மகனுக்கு மனைவியாய் இருக்கக் கேட்டது போல, கடவுளின் பணியாளராம் கபிரியேல் தூதரும் கடவுளுக்கே தாயாக இருக்கும்படி மரியாளைக் கேட்கின்றார். ரெபேக்காவின் அண்ணன் லாபான் அளித்த ஆசியுரை மரியாளில் நிறைவேறுகிறது: 'ஆயிரமாயிரமாக மரியாளின் தலைமுறை பெருகுகின்றது'. மேலும், யாக்கோபை ஏசாவைப் போல ஆடையுடுத்தி தந்தை ஈசாக்கிடம் ரெபேக்கா அழைத்துச் சென்றது போல, மரியாளும் இயேசு என்னும் கடவுளுக்கு மனிதம் என்னும் ஆடையை உடுத்தி தந்தை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றார். எல்லாவற்றையும் விட, ரெபேக்காவின் பெயர் குறிப்பிடுவது போல மரியாள் விண்ணையும், மண்ணையும் இணைப்பவராக, அந்த இணைப்பைப் பலப்படுத்துபவராகவும், பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார்.


4. ராகேல்

லாபானின் இரண்டு புதல்வியர்களுள் இளையவர் இவர். அக்காவைவிட மிக அழகானவர். 'செம்மறியாட்டுக் குட்டி' என்பது இவரது பெயரின் அர்த்தம். யாக்கோபு இவருக்காக ஏழு ஆண்டுகளும், பின் லாபானால் ஏமாற்றப்பட்டு லேயா திருமணம் செய்துவைக்கப்பட, மீண்டும் ஏழு ஆண்டுகளும் வேலை செய்தவர். எந்த அளவிற்கு அவர் அழகாக இருந்தால், இந்த அளவிற்கு யாக்கோபு அவருக்காக வேலை செய்திருக்க வேண்டும். காலத்தையும் கடந்த அழகாக இவரது அழகாக இருந்திருக்க வேண்டும். ஆகையால் தான் 14 ஆண்டுகளுக்கு முன் பார்த்த ராகேல் வேறு, இப்போது திருமணம் முடிக்கும் ராகேல் வேறு என்று பிரித்துப் பார்க்காமல் மாய்ந்து மாய்ந்து அன்பு செய்கிறார் யாக்கோபு. முதலில் தாய்மைப்பேறு அடைய இயலாதவராக இருந்தாலும், கடவுளின் கருணையால் அப்பேற்றை சீக்கிரமே அடைகின்றார். லேயா, ராகேல் மற்றும் அவர்களது பணிப்பெண்கள் வழியாக யாக்கோபு பன்னிரண்டு புதல்வர்களைப் பெற்றுக்கொண்டாலும், ராகேலின் புதல்வர்களான யோசேப்பு மற்றும் பென்யமீனைத்தான் மிக அதிகமாக அன்பு செய்கிறார். இந்த ஓரவஞ்சக அன்பைப் பார்த்து மற்ற பத்து சகோதரர்களும் பொறாமைப்படவும் செய்கின்றனர்.

யாக்கோபு ராகேலின் அழகால் கவரப்பட்டது போல, கடவுளும் மரியாளின் அழகால் கவரப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். மரியாளின் புற அழகை விட, அக அழகை லூக்கா நற்செய்தியாளர் நேர்த்தியாக வர்ணனை செய்கின்றார்: 'அருள்மிகப் பெற்றவர். கடவுளின் அருளைக் கண்டடைந்தவர்' (லூக்கா 1:28-30). ராகேலின் மகன் யோசேப்பு அவருடைய சகோதரர்களால் இருபது வெள்ளிக்காசுகளுக்கு மிதியானியர்களிடம் விற்கப்படுவது போல (தொநூ 37:28), மரியாளின் மகன் இயேசுவும் அவரது சீடர் யூதா இஸ்காரியோத்தால் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலைபேசப்படுகின்றார் (மத்தேயு 26:14-16, 27:3-10). எகிப்தில் அடிமையாய் அழைத்துச் செல்லப்படும் ராகேலின் மகன் யோசேப்பு பாரவோனின் முன்னிலையில் தன் அறிவுக்கூர்மையினால் எகிப்தையே ஆளும் அளவிற்கு உயர்கின்றார். பின்நாளில் தன் சகோதரர்களின் பஞ்சத்தைப் போக்குகின்றார். அடிமையின் உருவாம் மனித உருவை ஏற்கும் மரியாளின் மகன் இயேசுவும் சிலுவையில் உயர்த்தப்பட்டு பாவம் என்ற கொடிய அருளின் பஞ்சத்திலிருந்து தன் சகோதரர்களை மீட்கின்றார். பழைய இஸ்ராயேல் மக்களை ராகேலின் பிள்ளைகள் என்றே எரேமியா இறைவாக்கினர் அழைக்கின்றார். புதிய இஸ்ராயேலாம் கிறிஸ்தவர்களும் மரியாளின் பிள்ளைகள் என்றே அழைக்கப்படுகின்றனர்.


5. மிரியம்

'மிரியம்' என்ற வார்த்தை இரண்டு 'மாரா' மற்றும் 'யாம்' என்ற இரண்டு வார்த்தைகளின் தொகுப்பு. 'மாரா' என்பதற்கு 'கசப்பு' என்றும் 'போராட்டம்' என்றும் 'அழகு' என்றும் பொருள். 'யாம்' என்றால் 'கடல்'. ஆக, மிரியம் என்றால் கசப்பின் கடல், போராட்டத்தின் கடல் அல்லது அழகின் கடல் என்று பொருள். புதிய ஏற்பாட்டு மரியாளின் பெயரும், இந்தப் பெயரோடு நேரிடையாகத் தொடர்புடையதே. மிரியம் மோசே மற்றும் ஆரோனின் சகோதரி. இவரை முதல் பெண் இறைவாக்கினர் எனவும் அழைக்கின்றனர். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை யாவே இறைவன் அழைத்து வந்தபோது தன் வலிமைமிகு கரத்தால் செங்கடலைப் பிளக்கின்றார். தங்கள் பாதம் நனையாமல் கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்களோடு இணைந்து பாடல் பாடுகின்றார் மிரியம் (காண். விடுதலைப்பயணம் 15). ஆரோனுடன் இணைந்து கொண்டு மோசேயின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டதால் கடவுளால் தண்டிக்கவும்படுகின்றார் (காண். எண்ணிக்கை 12).

பழைய ஏற்பாட்டில் மோசே திருச்சட்டத்தின் பிதாமகனாகவும், ஆரோன் திருப்பணியின் அதாவது குருத்துவத்தின் பிதாமகனாகவும் வலம் வருகின்றனர். இந்த இரண்டு பேரோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர் மிரியம். புதிய ஏற்பாட்டில் மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய சட்டம் வழங்கும் மோசே எனவும், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் இயேசுவை ஆரோனின் குருத்துவத்தின் மறுபிறப்பு எனவும் எழுதுகின்றனர். இந்த இயேசுவோடு தன்னையே ஒன்றித்துக் கொண்டவர் மரியாள். மேலும், மிரியம் என்ற பெயரிலும் நம் மரியாள் நிழலாடுகின்றார்.

(நிழல்கள் நீளும்)




1 comment:

  1. மரியாளின் நிழல் உண்மையிலேயே நீண்டு கொண்டுதான் இருக்கிறது.அபிரகாமின் மனைவி சாராவும்,ஈசாக்கின் மனைவி ரபேக்காவும்,லாபானின் மகள் ராக்கேலும்,மோசே மற்றும் ஆரோனின் சகோதரி மிரியமும் ஏற்கனவே ஓரளவு பரிட்சயப்பட்டவர்கள் தான் எனினும் ,இன்று அவர்களை ஒரு புதிய கோணத்தில மரியாவின் பிரதிபலிப்பாக,நிழலாகக் காட்டியிருப்பது புதிய விஷயம்.மனத்தில் தேக்கிவைத்து இரசிக்கும்படி பல விஷயங்கள் இருப்பினும் என் மனதை் தொட்டது இதுதான்;"யாக்கோபை ஏசா போல உடைஉடுத்தி தந்தை ஈசாக்கிடம ரபேக்கா அழைத்துச் சென்றது போல மரியாளும் கடவுளாம் இயேசுவுக்கு மனிதம் எனும் ஆடை உடுத்தி தந்தை இறைவனிடம் அழைத்து்செல்கிறார்.விண்ணையும் மண்ணையும் இணைப்பவராக,அந்த இணைப்பை பாதுகாக்கிறவராக,பலப்படுத்துகிறவராக இருக்கிறார் " என்பதே.மரியாளின் நிழலும்,கடைக்கண் பார்வையும் நம்மையும் ஆட்கொள்ளட்டும்......

    ReplyDelete