Wednesday, January 21, 2015

மரியாளின் பயணங்கள் - 4

5. நாசரேத்திலிருந்து எருசலேமிற்கு

பயணத்தின் தொடங்குமிடமும், முடியுமிடமும் நான்காம் பயணத்தைப் போல இருந்தாலும், பயணம் தொடங்கிய காலமும், நோக்கமும் வேறு. மரியாளின் இந்தப் பயணத்தின் போது இயேசுவிற்கு வயது பன்னிரண்டு. இந்தப் பயணத்தின் நோக்கம் பாஸ்கா விழா (காண் லூக்கா 2:41-52). யூதர்களின் வாழ்வில் எருசலேம் மிக முக்கியமானது. ஏனெனில் அங்கேதான் இறைவனின் பிரசன்னம் துலங்கிய கோவில் இருந்தது. அங்கேதான் அவர்களின் அரசர் குடியிருந்தார். கோயில் என்பது அவர்களுக்கு வெறும் இடம் மட்டுமல்ல. அங்கேதான் கடவுளின் பெயர் குடியிருந்ததாக அவர்கள் நம்பினர். யாவே இறைவன் அவர்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமான பத்துக் கட்டளைகளும், பாலைவனத்தில் அளித்த மன்னாவும், அவர்களை வழிநடத்திச் சென்ற ஆரோனின் கோலும் இந்த ஆலயத்தில் தான் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. ஆனால், கிமு 587ல் பாபிலோனியப் படையெடுப்பின் போது, நெபுகத்னேசர் அரசன் எருசலேம் நகரத்தை அழித்து, ஆலயத்தைத் தீக்கிரையாக்கி, மக்களையும் அடிமைகளாக நாடுகடத்திச் செல்கிறான். அப்போதுமுதல் யூதர்கள் சிதறுண்டு போகத் தொடங்குகின்றனர். பாரசீக மன்னன் சைப்ரஸ் மீண்டும் அவர்களுக்கு விடுதலை தர, எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் மீண்டும் ஆலயத்தைக் கட்டுகின்றனர். ஆக, இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்தது இரண்டாம் ஆலயம்.

யூதர்கள் மற்ற ஊர்களில் சிதறுண்டு வாழ்ந்தாலும், எருசலேம் தவிர மற்ற நகரங்களில் வாழ்ந்தாலும் மூன்று திருவிழாக்களின் போது அவர்கள் எருசலேமிற்குச் செல்ல வேண்டும் என்பது வழக்கம் (காண். விடுதலைப் பயணம் 23:14-17, 34:18-23, இணைச்சட்டம் 16). பெஸாக் என்று அழைக்கப்படும் பாஸ்காத் திருவிழா, ஷவுவோத் என்று அழைக்கப்படும் வாரங்களின் திருவிழா மற்றும் சுக்கோத் என்று அழைக்கப்படும் கூடாரத் திருவிழா - இந்த மூன்று திருவிழாக்களின் போதும் இன்றும் யூதர்கள் எருசலேமில் கூடி வருகின்றனர். இந்த நாளில் இவர்கள் தங்கள் கடவுளோடு உள்ள பிணைப்பையும், ஒருவர் மற்றவரோடு உள்ள பிணைப்பையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். பன்னிரண்டு வயது நிரம்பிய ஆண்கள் 'மேஜர்' என கருதப்பட்டதால், மேஜர் ஆன அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஆக, இயேசுவுக்கு இதுதான் அதிகாரப்பூர்வமான முதல் எருசலேம் பயணம்.

திருவிழாவுக்கு போறதுனாலே ஒரு குதூகலம் தான்! சொந்தக் காரங்களப் பார்ப்போம்! புதுச்சட்டை அணிவோம்! பலகாரங்கள் சுடுவார்கள்! வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் காசு கொடுப்பார்கள்! அப்படிப்பட்ட குதூகலத்தில் தான் மரியாளும், யோசேப்பும், இயேசுவும் எருசலேமிற்குச் சென்றிருப்பர். இந்தத் திருவிழாவிற்கு சக்கரியா, எலிசபெத்து மற்றும் திருமுழுக்கு யோவான் கூட வந்திருப்பார்கள். ஏனெனில் யோவானுக்கும் தான் பன்னிரண்டு வயது முடிந்திருக்குமே.

மரியாளின் இந்தப் பயணம் கடவுளோடும், தன் சொந்த மக்களோடும் இருக்க வேண்டிய பிணைப்பை நமக்குக் காட்டுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் என்றாலும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவதில் மரியாள் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார். உறவே வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தவர் மரியாள். எருசலேம் என்பது ஒரு வாழும் அடையாளம். எருசலேம் என்பது ஒரு உணர்வு. இன்று பலர் படிப்பினிமித்தமும், வேலையினிமித்தமும், போரின் நிமித்தமும் தங்களின் சொந்த வேர்களை விட்டு புலம்பெயர்ந்து நிற்கின்றனர். ஒருசிலர் தங்கள் சொந்த வேர்களுக்குத் திரும்ப முடியாத நிiலியிலும் இருக்கின்றனர். மற்றும் சிலர் தங்கள் வேர்கள் தங்களுக்கு வேண்டாம் என நினைக்கின்றனர். ஆனால் தற்காலிகமாக, நிரந்தரமாக புலம்பெயர்ந்து நிற்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் சொந்த மண்ணின் ஏக்கம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

நாம் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடிவது போல நம் சொந்தங்களைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நம் பெற்றோர், சித்தப்பா, பெரியப்பா, மாமா, அக்கா. அண்ணன், தம்பி, தங்கை எல்லா உறவுகளுமே தானாக வருபவை. நாம யார்கிட்டயும் போய் 'நீங்க எனக்கு அக்காவா இருக்கீங்களா? சித்தப்பாவா இருக்கீங்களா?' என்று கேட்பதில்லை. நம் உடலின் அளவு, அமைப்பு, நிறம், நாம் பேசும் மொழி என எப்படி ஒருசிலவற்றை நாம் கேட்காமலேயே பெற்றிருக்கிறோமோ, அப்படித்தான் இந்த உறவுகளையும் பெற்றிருக்கிறோம். நம் எதிர்பார்ப்புகளை இந்த உறவுகள் பூர்த்தி செய்யவில்லை என்பதற்காகவோ அல்லது இந்த உறவுகளால் நமக்குப் பயனில்லை என்பதற்காகவோ நாம் இவைகளை வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நான் எங்க போனாலும் என் சொந்த ஊரு நத்தம்பட்டி தான். எங்க ஊர் எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக அந்த ஊருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒரு 'மித்' இதுதான்: 'தனிநபர்தான் எல்லாம். உறவுகள் தேவையில்லை. என் சந்தோஷம், என் பாதுகாப்புதான் எனக்கு எல்லாம்!' என்ற மனநிலை. இப்படியே நாம் மற்றவர்களோடு வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் காயம் நம்மையும் காலப்போக்கில் பாதிக்கவே செய்கின்றது. ரொம்ப ஒட்டிக் கொள்ளாவிட்டாலும் ஒரு நடுநிலைப் பாதையையாவது நாம் எடுக்க வேண்டும் என்கிறார் மரியாள்.

இந்தப் பயணத்தின் மற்றொரு அம்சமாக இழந்து போன தன் மகனைத் தேடி பரிதவித்துப் போகிறார். பரிதவித்துக் கண்டுபிடித்து அணைக்க ஓடும்போது, 'ஏன் என்னைத் தேடுனீங்க?' என்று ரொம்ப கூலாகக் கேட்கிறார் இயேசு. தாய்மார்கள் அடித்துக் கொண்டு தேட பல நேரங்களில் இந்தப் பிள்ளைகள் அப்படித்தான் கேட்கிறார்கள்: 'ஏம்மா! உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்பப்பார்த்தாலும் என் பின்னாலயே ஓடி வர்றீங்க! நான் இங்க தான இருக்கேன்!' ஆனால், இந்தத் தாய்மார்களின் தேடலே பிள்ளைகள் தாமே என்பதை தாங்கள் தாயாகவோ, தந்தையாகவோ மாறும்போதுதான் உணர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு இளைஞர் மட்டும் தண்ணீர், திருவிழா, கொண்டாட்டம் என எதற்கும் வரி தராமலும், 'இந்த ஊரை எனக்குப் பிடிக்கவில்லை! இந்த ஊர் எனக்கு வேண்டாம்!' என்று கோபத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார். இதைக் கேள்வியுற்ற ஒரு பெரியவர் ஒருநாள் அவரைச் சந்திக்க அவரின் வீட்டிற்குச் சென்றார். அது மாலை நேரம். குளிர்காலம். இளைஞன் தன் வீட்டினுள் நெருப்பு மூட்டி அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். இந்தப் பெரியவர், 'தம்பி சூடு ரொம்ப அதிகமாக இருக்கு என்று சொல்லிக் கொண்டே எரிகின்ற கட்டைகளில் ஒன்றை எடுத்து வெளியே வைத்து விடுகின்றார்'. தொடர்ந்து இருவரும் சும்மா பேசிக்கொண்டிருக்கின்றனர். பெரியவர் புறப்படும்போது, தனியாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டை அணைந்துவிட்டதைக் காட்டி அந்த இளைஞனிடம் சொல்கின்றார்: 'தம்பி! கவனித்தீர்களா! மற்ற கட்டைகளோடு சேர்ந்து இராததால் தான் இந்தக் கட்டை இப்போது குளிர்ந்து போனது! நாம் வாழ வேண்டும் என்றாலே மற்றவர்களின் அருகிருப்பு அவசியம்!' சொல்லிவிட்டு நகர்கின்றார். இளைஞன் ஞானம் பெறுகின்றான்.


6. நாசரேத்திலிருந்து கானாவிற்கு

'மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்' என எழுதுகின்றார் யோவான் நற்செய்தியாளர் (காண் 2:1-12). யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பிறந்த இடத்தையும், வாழ்ந்த இடத்தையும் பற்றி எழுதுவதில் அக்கறை காட்டவில்லை. கானாவிற்கு மரியாள் கண்டிப்பாக நாசரேத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும். இயேசுவும் அங்கிருந்துதான் வந்தாரா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. முப்பது வருடங்கள் மறைமுக வாழ்ந்துவிட்டு முதன் முதலாக பொதுவாழ்விற்கு வருகிறார் என்பதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் ஒருவேளை அவரும் நாசரேத்திலிருந்து கானாவிற்கு வந்திருக்கலாம் எனச் சொல்லலாம். கானாவில் நிகழ்த்தியது தான் இயேசுவின் முதல் அறிகுறி என்றாலும், அறிகுறி நிகழ்த்துவதற்கு முன் இயேசு வெறும் போதிக்கும் பணியை மற்ற இடங்களில் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆக, மரியாளை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.
மரியாளுக்கு திருமண அழைப்பு வருகின்றது. யோவான் நற்செய்தியாளர் மரியாளை 'இயேசுவின் தாய்' என்று குறிப்பிடுகிறாரே தவிர பெயரிட்டுக் குறிப்பிடவில்லை. இந்தத் திருமணம் 'யூதா ததேயுவின் திருமணம்' என்பது மரபு வழி வரும் கதை. இயேசுவின் சகோதரர் (!) - அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் - யூதா ததேயு. மரியாளும் அழைப்பு பெற்றிருந்ததை வைத்துப் பார்க்கும் போது இத்திருமணம் யூதா ததேயுவுடையது என்று சொல்ல ஆதாரம் இருக்கின்றது. மேலும் திருமண வீட்டில் மரியாள் 'ஏதோ பட்டுச் சேலை கட்டினோம்! மல்லிகைப் பூ வச்சோம்! வந்தோம்! உக்கார்ந்தோம்!' என்றில்லாமல், ரொம்ப ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆக, கண்டிப்பாக இந்தக் கல்யாணம் ஒரு உறவினர் இல்லக் கல்யாணமாகத் தான் இருக்க வேண்டும். மரியாள் இந்தக் கல்யாண வீட்டுல செஞ்ச மிகப் பெரிய வேலை என்னன்னா, 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது!' என்பதை முதன்முதலாக அவர்தான் கண்டுபிடிக்கின்றார். கண்டுபிடித்து உடனே தண்டாரா போடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தன் மகனுடன் வந்து சொல்கின்றார்.
இன்றைக்கு நாம யாரிடமாவது குறை கண்டுபிடித்துவிட்டால், உடனடியாக ஊரெல்லாம் போய், 'அவன் அப்படியாக்கும்!' 'இவள் இப்படியாக்கும்!' என்று தண்டாரா போட்டுவிடுகிறோம். சம்பந்தப்பட்ட நபரை அணுகிப் பேசவோ, கேட்கவோ நமக்குத் துணிவில்லை. மரியாளிடமிருந்து நாம் இன்று ஒரு நல்ல பண்பைக் கற்றுக்கொள்ளலாம் - குறைகளைக் காணும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லது 'டிஃபிகல்ட் சிட்டுவேஷன்' வரும்போது அதை நாம் எப்படிக் கையாள வேண்டும்?

இந்த மரியாள் மட்டும் தாங்க சரியான நேரத்தில் எது தேவையோ, அதைக் கண்டுபிடிக்கிறார். மற்றொரு பக்கம் பாருங்க. மரியாள் அங்கிருந்தவங்களுக்கெல்லாம் 'ரூல்' போடலை. 'டேய்! ஏன்டா குடிக்கிற? என்றோ, கொஞ்சமாக் குடி!' என்றோ சொல்லவில்லை. விருந்தின் மகிழ்ச்சி கலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறார். நம்ம வாழ்க்கையில் நம்ம மகிழ்ச்சி கலைந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுவதில் இந்த தாய்மார்கள் எப்பவும் ஒருபடி மேலதான். சில இல்லங்களில் மனைவிகளும் தாய்மார்களாகவே மாறி தங்கள் கணவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆக, இந்த அக்கறைப்படுதல் போன்ற பண்புகள் எல்லாம் பெண்மையின், தாய்மையின் பண்புகள். மரியாளின் இந்தப் பயணம் நமக்குக் கற்றுக் கொடுப்பது 'மற்றவர்கள் மேல் அக்கறைப்படுவது!'

'அடுத்தவனுக்கு நான் ஏன் உதவி செய்யணும்!' 'அவனுக்கு கை கால் இல்லையா!' 'நான் உழைச்சு தான முன்னுக்கு வந்தேன்! அவனும் உழைக்கலாமே!' என்பார்கள் சிலர். பிரதர்! வாழ்க்கை எல்லாரையும் ஒரே போல வைத்திருப்பதில்லை. உழைக்கும் எல்லாரும் நல்லா வந்துடறது இல்லை. சிலரை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் வாழ்க்கை மற்றும் சிலரை செங்கலால் கன்னத்தில் அறைந்து விடுகிறது. 'அவனுக்கு நான் உதவி செய்தா எனக்கு என்ன ஆகும்!' என்று கேட்பதை விட, 'அவனுக்கு நான் உதவி செய்யாவிட்டால் அவன் என்ன ஆவான்!' என்று கேட்பதே சால்பு. இதைக் கேட்க வேண்டால் மரியாளைப் போன்ற ஒரு 'சென்சிட்டிவான' 'எம்பதடிக்' உள்ளம் வேண்டும்.

நாம 'சிம்பதி' காட்டத்தான் தயாரா இருக்கோமேயொழிய, 'எம்பதி' காட்டத் தயங்குகிறோம். பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் ஒரு நாய்க்குட்டி வியாபாரி நாய்க்குட்டிகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவன் ரொம்ப நேரமா அந்தப் பெரியவர் முன் நின்று கொண்டு அவர் கொண்டு வந்திருந்த நாய்க்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாய்க்குட்டியை நோக்கிக் கையை நீட்டி 'இதை நான் வாங்கிக் கொள்ளலாமா?' எனக் கேட்டான். 'தம்பி! அந்த நாய்க்குட்டி ரொம்ப ஒல்லியால இருக்கு! அதுக்கு ஏதோ நோய் போல! மத்த நாய்க்குட்டிகளைப் பாரு. நல்லா புசுபுசுனு. இவைகளில் ஒன்றை எடுத்துக்கொள்' அப்படிங்கிறார் அந்தப் பெரியவர். 'இல்ல! எனக்கு அதுதான் வேண்டும்!' என்ற சிறுவன் அதை வாங்கிக் கொண்டு சொல்கிறான்: 'ஐயா! எனக்கு அப்பா அம்மா கிடையாது! நான் அதோ அந்த விடுதியல தான் தங்கியிருக்கேன். நானும் சின்னக்குழந்தையா இருந்தப்ப ஒல்லியா, சீக்காளியாத் தான் இருந்தேனாம்! அன்னைக்கு என்னை யாரோ எடுத்து வளர்க்கலயா? நானும் இந்த நாயை நல்லா பார்த்துப்பேன்!' சொல்லி விட்டு வழி நடந்தான் சிறுவன். 'ஐயோ! பாவம் ஒல்லியா இருக்கு!' என்று நினைப்பது 'சிம்பதி'. 'ஒல்லியா இருக்கு! அதை நான் சரியாக்குகிறேன்!' என்று ஆவண செய்வது 'எம்பதி'.


7. கானாவிலிருந்து கல்வாரிக்கு

இயேசுவின் மூன்று வருட பணி வாழ்வில் அவர் கப்பர்நாகூமில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவரைத் தேடி அவருடைய தாயும், சகோதரர்களும் வருவதாக மத்தேயு (காண் 12:46-50), மாற்கு (3:33-35) மற்றும் லூக்கா (லூக்கா 8:21) நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். இந்த நிகழ்வு இயேசுவுக்கு எதிரான ஒரு குழுவினர் கிளப்பிவிட்ட புரளி எனவும் அது காலப்போக்கில் நற்செய்தி நூல்களுக்குள் புகுந்துவிட்டது என்றும் கருதுகின்றனர் விவிலிய ஆராய்ச்சியாளர்கள். ஆக, மரியாளின் இந்தப் பயணத்தை நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.

மரியாளின் இறுதி மற்றும் ஏழாம் பயணம் கானாவிலிருந்து கல்வாரிக்கு என வைத்துக் கொள்வோம். நாசரேத்திலிருந்து தான் வந்திருப்பார்கள். அல்லது எருசலேமிலிருந்து வந்திருப்பார்கள். இயேசுவின் பணியின் மையமாக யோவான் நற்செய்தியில் கானா இருப்பதால் நாம் அங்கிருந்து வந்ததாக வைத்துக் கொள்வோம். மரியாளுக்கு இதுதான் இறுதிப் பயணம் என்று சொல்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் தூய ஆவியானவர் இறங்கி வரும்போது மரியாள் இயேசுவின் சீடர்களோடு இணைந்து எருசலேமில் செபித்துக் கொண்டிருக்கிறார் (காண். திருத்தூதர் பணிகள் 1:14). இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நடந்த இந்த நிகழ்வை நாம் தனியாக எடுத்துவிட்டால், அல்லது நற்செய்திகளில் வரும் மரியாளின் பயணங்கள் என வைத்துக்கொண்டால் மரியாளின் கல்வாரிப் பயணமே அவரின் கடைசிப் பயணம்.

மரியாளின் இந்தப் பயணம் ஒரு வருத்தம் கலந்த மகிழ்வைத் தந்திருக்க வேண்டும். வருத்தம் எதற்காக? 'ஐயோ! என் மகன். நான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன்! எகிப்திற்கு தூக்கி;க் கொண்டு போய் எதிரியிடமிருந்து நான் காப்பாற்றிய மகன்! எருசலேம் ஆலயத்தில் காணாமற் போய் நான் கண்டுபிடித்த மகன், என்னோடு உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட மகன் இன்று ஒரு தோல்வியின் அடையாளமான, அவமானத்தின் அடையாளமான சிலுவையில் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறானே!' என்ற ஆதங்கம். மகிழ்ச்சி எதற்காக? 'உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும்! என்று அன்று வானதூதர் கபிரேயலுக்குச் சொன்ன வார்த்தை இப்படித் தானே நிறைவேற வேண்டும். இதுதானே கடவுளின் திருவுளம். இதுதானே கடவுளின் மீட்புத் திட்டம்!'

இந்தக் கல்வாரிப் பயணத்தில் இயேசு தன் அன்புத் தாயிடம் தன் சீடரைக் காட்டி, 'அம்மா! இவரே உம் மகன்!' என்றும், சீடரிடம், 'இவரே உம் தாய்!' என்றும் சொல்கின்றார் (காண் யோவான் 19:26-27). மரியாள் மனுக்குலத்தைத் தன் பிள்ளையாக எடுத்துக் கொண்டதும், மனுக்குலம் மரியாளைத் தன் தாயாக எடுத்துக் கொண்டதும் இந்த நிகழ்வில் தான். பெத்லகேமில் முதல் முறை தாயான மரியாள் கல்வாரியில் இரண்டாம் முறை தாய்மைப்பேறு அடைகிறார். இந்தத் தாய்மைப் பேறுக்காக அவர் கொடுத்த விலைதான் அதிகம். தன் மகனையே சிலுவையில் பலியாக்கத் துணிகின்றார். என்னதான் இறைச்சித்தம்! கடவுளின் திருவுளம்! என்றாலும் பெத்த வயிறு சும்மாவா இருந்திருக்கும்! இந்த மகன் இன்று என்னோடு இல்லையென்றாலும், இனி வரும் அனைத்துப் பிள்ளைகளுமே என் பிள்ளைகள் எனப் புதிய பாதையைத் தொடங்குகின்றார் மரியாள். நம் இந்திய மரபில் மனிதர்களின் வாழ்க்கை நிலையை பிரமச்சார்யா, கிரகஸ்தா, வனப்பிரஸ்தா மற்றும் சந்நியாசா என நான்கு நிலைகளாக அழைக்கின்றோம். மரியாளின் சந்நியாசம் கல்வாரியில் தான் தொடங்குகிறது. துறவு என்றால் சந்நியாசம் என்றால் என்ன? வலியைத் தனக்கு வைத்துக் கொண்டு, மகிழ்வை மற்றவருக்குத் தருவதே துறவு.

விவேகானந்தர் பள்ளி மாணவனாக இருந்த போது தான் துறவு வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாகத் தன் தாயிடம் சொல்கின்றார். தாய் அந்நேரம் சமையல் செய்து கொண்டிருக்கிறார். 'சரி! அந்தக் கத்தியை எடு!' என்கிறார் தாய். இவரும் எடுத்து நீட்டுகின்றார். 'நீ போக முடியாது!' என்கிறார் தாய். இப்படியே இரண்டு முறை நடக்கின்றது. சில மாதங்களுக்குப் பின் மறுபடியும் விவேகானந்தர் அதே விண்ணப்பத்தோடு தன் தாயிடம் வருகின்றார். இப்போதும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார் தாய். நீட்டுகின்றார் கத்தியை. கத்தியைப் பெற்றுக்கொண்ட தாய், 'நீ போகலாம்!' என்கிறார். விவேகானந்தருக்கு ஆச்சர்யம். 'ஏன்மா! மூன்று முறையும் நீ கத்தியைக் கேட்ட போது நான் மூன்று முறையும் கத்தியைத் தான் கொடுத்தேன்! இப்போ மட்டும் எப்படி நான் போகலாம் என்று சொல்கிறாய்?' எனக் கேட்கிறார். தாய் சொன்னாரம், 'நான் முதல் இரண்டு முறை கத்தியைக் கேட்ட போது கத்தியின் பாதுகாப்பான பகுதியை நீ வைத்துக் கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய்! இன்று மட்டும் தான் வெட்டுகின்ற பகுதியை நீ வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய்! துறவு என்பது இதுதான்: வெட்டுகின்ற பகுதியை நீ வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியைப் பிறருக்கு நீட்டுவது!'

மரியாளின் பயணங்களின் ஒவ்வொரு இலக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தின் மைல்கல்லாக இருக்கட்டும்!

(பயணம் முடிந்தது!)


2 comments:

  1. கடவுளோடும் தன் சொந்த மக்களோடும் தனக்கிருந்த பிணைப்பை வெளிப்படுத்தும் மரியாளின் எருசலேம் நோக்கிய பயணமாகட்டும்;பெண்மைக்கே உரித்தான தாய்மை,அக்கறை இவற்றை வெளிப்படுத்தும் கானா நோக்கிய பயணமாகட்டும்;மரியாளின் சந்நியாச வாழ்க்கையை வெளிப்படுத்தும் கல்வாரிப்பயணமாகட்டும்...எல்லாமே மரியாள் இக்காலத்துப் பெண்கள் யாவருமே வாழக்கூடிய,பின்பற்றக்கூடியஒரு சாதாரண,இயல்பான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார் என்று நமக்குக் காட்டுகின்றன."வலியைத் தனக்கு வைத்துக்கொண்டு மகிழ்வை மற்றவர்களுக்குத் தருவதே துறவு",மற்றும் "சிம்பதி,எம்பதி போன்ற வார்த்தைகளுக்குத் தரப்படடுள்ள விளக்கங்கள் யாவுமே அன்னை மரியாளோடு நாங்களும் அத்தனை பயணங்களிலும் கைகோர்த்து பங்கு கொண்ட உணர்வைத்தந்தது.இதை சாத்தியமாக்கிய தந்தைக்கு எங்கள் பாராட்டுக்களும்;நன்றிகளும்.அன்னை மரியாள் தன திருக்குமாரனிடம் தஙகளுக்காக என்றென்றும் பரிந்து பேசுவாராக.....

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    i feel so great that Yesu was my class mate with whom i have studied, lived, played, fought and had more fun. keep it up yesu.

    ReplyDelete