Thursday, January 15, 2015

அடல்டரி

நான் படித்த இரண்டாம் புதினத்தைப் பற்றியும் எழுதி விடுகிறேன். புதினத்தின் பெயர் 'அடல்டரி'. அதே ஆசிரியர் 'பவுலோ கோயலோ'.

'அடல்டரி' என்பதை 'விபச்சாரம்' என்று தமிழில் மொழி பெயர்ப்பது கொஞ்சம் குரூரமாக இருக்கிறது. ஆகையால் 'அடல்டரி' என்றே வைத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் 'அடல்டரி' என்ற சொல்லாடலை ஒத்து 'ஃபோர்னிகேஷன்' மற்றும் 'ப்ரோமிஸ்க்விட்டி' என்று நிறைய சொற்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொன்றின் பொருள் வேறு. உதாரணத்திற்கு, திருமணம் ஆகாத ஒருவர் பலரோடு உடல் சார்ந்த உறவில் ஈடுபட்டால் அதை 'ஃபோர்னிகேஷன்' என்றும், அதையே திருமணம் ஆனவா செய்தால் அதை 'அடல்டரி' என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

'அடல்டரி' என்பது மூன்று பண்புகளை உள்ளடக்கியது:

அ. முழு விருப்பத்தோடு பிரமாணிக்கத்திலிருந்து விலகுதல்.
ஆ. அதற்காக ஒருவர் கொடுக்கும் விலை (பணம் அல்லது பொருள் அல்லது உணர்வு)
இ. அதில் கிடைக்கும் உடல் சார்ந்த இன்பம்

இந்த மூன்றும் இருந்தால் தான் அடல்டரி என்று சொல்ல முடியும். திருமணமான ஒரு பெண்ணோடு நாம் ஷாப்பிங் செல்வதை அடல்டரி என்று சொல்வதில்லை.

விவிலியத்தில் இஸ்ரயேல் மக்களை கடவுள் அதிகம் சாடும் ஒரு குற்றம் என்னவென்றால் அடல்டரி. யாவே இறைவனைப் புறக்கணித்துவிட்டு மற்ற கடவுளர்களைத் தேடிச் செல்வதை இறைவாக்கினர்கள் வேசித்தனம் என்றே சாடினர்.

அடல்டரி என்றவுடன் விவிலியத்தில் வரும் நிகழ்வு 'தாவீது-பெத்செபா' உறவு தான். தாவீது முழு விருப்பத்தோடு பிரமாணிக்கத்தை இழக்கின்றார். இந்த உறவிற்காக அந்தப் பெண் தன் கணவனையே விலையாகக் கொடுக்கின்றார். இந்த உறவில் தாவீது இன்பம் அனுபவிக்கின்றார்.

ஆக, இந்த மூன்று பண்புகளும் இருந்தால் தான் நாம் அடல்டரி என்று ஒன்றைச் சொல்கின்றோம்.

கோயலோவின் இந்தப் புதினத்தின் கதாநாயகி லிண்டா. வயது ஏறக்குறைய முப்பது இருக்கும். திருமணமானவர். நல்ல கணவர். பாசமான இரண்டு குழந்தைகள். ஒரு புகழ்பெற்ற நியூஸ்பேப்பரில் ரிப்போர்ட்டர் வேலை. கை நிறைய சம்பளம். பார்ப்பவர்கள் எல்லாம் 'வாழ்ந்தால் இவரை மாதிரி வாழ வேண்டும்' என்று சொல்லும் அளவிற்கு பெர்ஃபக்ட்டான வாழ்க்கை. ஆனால் உள்ளுக்குள் இது எல்லாம் போலி என்று உணர்கின்றார் லிண்டா. வாழ்வில் அர்த்தம் இல்லையே என்று அல்லாடும் போது தன் சின்ன வயது நண்பன் ஜேக்கப்பைக் காண்கின்றார். ஜேக்கப் வளர்ந்து வரும் அரசியல் ஸ்டார். ஒரு இன்டர்வியு எடுக்கச் செல்லும் போது அவனைக் கண்டவுடன் தான் இதுவரை இழந்த வாழ்வின் நெருப்புப் பொறியைக் கண்டு கொள்கிறாள். கிடைக்காத அந்த அன்பிற்காக எதையும் செய்யத் துணிகிறாள். மனித வலுவின்மையின் எந்த ஆழத்திற்கும் சென்று பார்த்துவிடத் துணிகிறாள். லிண்டா வாழ்வின் அர்த்தம் பெற்றாளா? அவளின் இந்தச் செய்கை அவளது கணவனுக்கோ, அல்லது ஜேக்கபின் மனைவிக்கோ தெரிந்ததா? என்பதுதான் கதையின் ஓட்டம். 'அடல்டரி' சரியா அல்லது தவறா என்பதல்ல ஆசிரியரின் வாதம். சரி என்பதும் தவறு என்பதும் நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் பொறுத்தது தானே.

1. ஒரு பெண்ணை அழ வைக்குமுன் ஒருதடவைக்கு பல தடவை யோசி. ஏனெனில் கடவுள் அவளின் கண்ணீர்த் துளிகளை கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. தனிமை. நம்மைச் சுற்றி நாம் அன்பு செய்யும் நபர்கள் இருந்தாலும் அடிக்கடி நம்மைப் பற்றிக் கொள்வது இந்தத் தனிமை. மூளை எல்லாம் சரியாக நடப்பதாகச் சொன்னாலும் நம் ஆன்மா அதை ஏற்க மறுக்கிறது. காலையில் எழுந்திருக்கிறோம். நம் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறோம். கணவனுக்கு சாப்பாடு வைக்கிறோம். வேலைக்குப் புறப்படுகிறோம். பஸ்ஸில் ஏறுகிறோம். சிரிக்கிறோம். நன்றாக ஆடை அணிகிறோம். ஆனால் உள்ளத்தின் ஓரத்தில் இந்தத் தனிமை ஒட்டிக் கொண்டே இருக்கிறது. நம் ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டே இருக்கிறது. இந்த முள்ளை எடுத்துவிட நாம் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறோம். மற்றவற்றின் மேல் நம் கவனத்தைத் திருப்பினாலும், மது, போதை என்று ஓய்ந்திருந்தாலும் அது நம்மை விடுவதில்லை. 'எப்படி இருக்கிற?' என்று யாராவது நம்மைக் கேட்டால், 'நல்லா இருக்கிறேன்!' என்று கூசாமல் பொய் சொல்கின்றோம். அவர்களும் அதே பொய்யைத் தான் நம்மிடம் சொல்கிறார்கள்.

3. எல்லாம் மாறிவிடும் என்ற பயமும் என்னிடம் இருக்கிறது. எதுவுமே மாறாமல் அப்படியே இருக்குமோ என்று பயமும் என்னிடம் இருக்கிறது.

4. காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு கலை. ஒவ்வொரு கலைக்கும் ஒரு உந்துசக்தி தேவைப்படுவதுபோல செயல்திறனும் தேவைப்படுகிறது.

5. நாம் நம் வாழ்வில் நாமாகவே இருப்பதில்லை. நாம் விரும்புவது போல நாம் இருப்பதில்லை. நம் சமூகம் விரும்புவது போலவும், நம் பெற்றோர் விரும்புவது போலவும் இருக்கிறோம். யார் மனதும் புண்படக் கூடாது என்பதிலேயே கருத்தாய் இருக்கிறோம். ஆனால் நம்மை நாமே புண்படுத்திக் கொள்கிறோம். நம் கனவுகளை எல்லாம் இரவின் பயங்கரங்களாக மாற்றி விடுகிறோம்.

6. கனவைப் பின்தொடர்வது என்பது மிகவும் கஷ்டமானது. அதற்கான விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும். நாம் காலங்காலமாக வைத்திருக்கும் ஒரு பழக்கத்தைக் கூட அதற்காக விட வேண்டியிருக்கும்.

7. நீ செய்யக் கூடாத ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது அதை மறைக்கவும் தொடங்குகிறாய்.

8. அன்பு செய்யத் தொடங்கும் போது நீ எதற்கும் தயாராக இருக்க வேண்டும். சின்ன வயதில் நாம் ரசித்த கலைடாஸ்கோப் போலத்தான் அன்பு. திருப்பத் திருப்ப அதன் பரிமாணம் மாறிக் கொண்டே இருக்கிறது.

9. இருவருக்கிடையே இருக்கின்ற உறவு முறிவதற்கு முதல் காரணம் அங்கே சவால்கள் குறைவதுதான். இனி ஒருவர் மற்றவரிடம் அனுபவிக்க ஒன்றும் புதிதாக இல்லை என்ற உணர்வு ஒருவரை மற்றவரிடமிருந்து பிரித்து விடுகிறது. அன்பில் எப்போதும் சர்ப்ரைஸ் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

10. நீ வாழ்வைத் தெரிந்து கொள்வதில்லை. வாழ்வு தான் உன்னைத் தெரிந்து கொள்கிறது. எதற்காக எனக்கு மட்டும் கண்ணீர், மகிழ்ச்சி, தனிமை, அழுகை என்று நீ கேட்க முடியாது. வருவதை எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இரு.

11. நம் பயமே நம் பேய்.

12. எல்லா நாளும் ஒன்று போல இருக்கிறது என்று சொல்பவர்களால் வாழ்வின் அற்புதத்தை முழுமையாக உணர முடியாது.



2 comments:

  1. 'அடல்ட்ரி'... ' விபசாரம்' ...விவிலியத்தில் அடிக்கடி வரும் ஒரு சொல்லாடல்; இது இறைவனுக்குப் பிடிக்காத வார்த்தை மட்டுமல்ல; யாரும் குரலுயர்த்திச் சொல்லவும் தயக்கம் காட்டும் ஒரு வார்த்தையும் கூட. அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை..ஒரு செயலைப்பற்றி விளக்கியிருப்பது ஒரு சாதுரிய்மான..பாராட்டப்பட வேண்டிய
    செயல். " ஒரு பெண்ணை அழ வைக்குமுன் பல தடவை யோசி; ஏனெனில் கடவுள் அவளின் கண்ணீர்த்துளிகளைக் கணக்கு வைத்திருக்கிறார்"... ஆண்களுக்காகச் சொல்லப்பட்டது போலிருப்பினும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.
    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    you did it Yesu. Thought provoking.

    ReplyDelete