Friday, January 16, 2015

எவர்சில்வர் டம்ளர்!

ஒவ்வொரு பொங்கல் திருநாளின் போதும் எனக்கு நினைவிற்கு வரும் பெயர்கள் இரண்டு: ஒன்று ராமச்சந்திரன், மற்றொன்று ஜெயப்பிரகாஷ். இவர்கள் யார்? என் ஊர் நத்தம்பட்டியில் என்னுடன் ஆறாம் வகுப்பு படித்தவர்கள். ராமச்சந்திரனுக்கு என்னைவிட இரண்டு வயது அதிகம். இரண்டு வருடம் ஐந்தாம் வகுப்பில் தக்க வைக்கப்பட்டதால் என்னோடு ஆறாம் வகுப்பில் படிக்க வேண்டியதாயிற்று. ஜெயப்பிராகாஷிற்கு என்னை விட இரண்டு வயது குறைவு. ஆனால் இவர்கள் அம்மா எங்க ஊர் பிரசிடென்ட்டாக இருந்ததால் எங்க தலைமை ஆசிரியரை உருட்டி, மிரட்டி மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு மாற்றி விட்டார்கள். ஆக, அவனும் என்னோடு ஆறாம் வகுப்பு.

ஒவ்வொரு தைப்பொங்கலின் போதும் எங்க ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். இளைஞர் நற்பணி மன்றம் என்று அடிக்கடி கூடும் எங்க ஊரு இளசுகள் தான் இவைகளை நடத்ததும். அதில் முதன்மையானவராக இருப்பவர் நம்ம ஏற்கனவே குறிப்பிட்ட கண்ணா அண்ணனும், கதிரவன் அண்ணனும். எங்களுக்கு சின்ன வயதில் கண்ணுக்குத் தெரிந்த ஸ்டார்கள் இவர்கள்தாம். வளர்ந்த பிறகு இவர்களைப் போல இருக்க வேண்டும் என அடிக்கடி நினைத்ததுண்டு.

எனக்கு விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பயம். புத்தகங்கள் எனக்குப் பிடித்த அளவிற்கு மண் பிடித்தது கிடையாது. ஆகையால் விளையாடவும் பயப்படுவேன். விளையாட பயம் என்று சொல்வதை விட விளையாட்டில் தோல்வி என்பதுதான் பயம். ஆறாம் வகுப்பில் என் உடன் பயின்ற டயானாவும் பக்கத்து ஊரிலிருந்து என் ஊருக்கு பொங்கல் போட்டிகள் பார்க்க வருவதாய் இருந்தது. ஆக, இந்த ஆண்டு எப்படியாவது ஏதாவது ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என நினைத்தேன். தனியாக ஓடும் போட்டியோ, அல்லது ரிலே போன்ற போட்டிகளிலோ கண்டிப்பாக தோற்றுவிடுவோம் எனத் தெரியும். ஆக, கபாடிப் போட்டியில் சப்ஸ்டிட்யூட்டாகவாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை. அந்த ஆண்டு சிறுவர்களுக்கான கபாடிப் போட்டியின் இரண்டு கேப்டன்கள் நம்ம ராமச்சந்திரனும், ஜெயப்பிரகாசும் தான். ராமச்சந்திரனின் அம்மாவும், என் அம்மாவும் ஒரே பள்ளியில் சமையல் வேலை பார்க்கிறபடியால் எங்க அம்மாவை வைத்து, அவங்க அம்மாவிடம் பேசி டீமில் இடமும் வாங்கியாயிற்று.

சப்ஸ்டிட்யூட்தான என்ற நினைப்பில் நம்மள விளையாட விட மாட்டாங்க என்ற முழு நம்பிக்கையில் வெறும் கரும்போடு விளையாட்டுப் போட்டி பார்க்கப் புறப்பட்டேன். போட்டியின் இடைவேளையில் நம்ம டயானாவும் வீட்டிற்கு வந்து பொங்கல் சாப்பிட்டாள். இடைவேளை முடிந்ததும் கபாடிப் போட்டி. எங்கள் அணியின் கெட்ட நேரம் என்னவோ மூன்று பேருக்கு அடிபட்டு விட்டது. ஆக மூன்றாவது சப்ஸ்டிட்யூட்டாக நான் இறக்கிவிடப்பட்டேன். அழுது கொண்டே இருந்தேன் களத்தில். பாடி அடுத்த கட்டத்திற்குச் செல்வதும் பெரிய சவாலாக இருந்தது. ஏதோ பாடிச் சென்றபோது பிடித்தும் விட்டார்கள். ஆனால் நழுவி வந்து நடுக் கோட்டைத் தொட்டதால் எங்க கேப்டன் ராமச்சந்திரன் உள்ளே வந்தார். எங்க டீம் வெற்றியும் பெற்றுவிட்டது. இரவில் வெற்றியாளர்களின் பெயர்களை வாசித்தார்கள். ஆனால் என்ன சப்ஸ்டிட்யூட் பெயரை வாசிக்கவில்லை. எனக்கு அழுகை கண்களைக் கோர்த்துக் கொண்டு வந்தது. அந்த சோகத்தில் அப்படியே தூங்கச் சென்றுவிட்டேன். அதிகாலை எழுந்த போது ஜெயித்த டீமில் இருந்த அனைவருக்கும் ஒரு எவர்சில்வர் டம்ளர் கொடுத்திருக்க, என் டம்ளர் என் தலைமாட்டில் இருந்தது. இன்றும் விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் அந்த டம்ளரை எடுத்துத் தரச் சொல்லிப் பார்ப்பேன்.

அது வெறும் எவர்சில்வர் டம்ளர் தான் என்றாலும். இன்றும் அன்று நான் பார்த்த தூசி, ராமச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், டயானா, நடுக்கோடு என அனைத்தும் அவைகளில் தெரிகின்றன.

நம் வாழ்வில் நாம் அசை போடும் அளவிற்கு நினைவுகளைச் சேகரிக்க வேண்டும் என்ற புதிய கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது பிரபு சாலமோனின் கயல் திரைப்படம். இந்த கான்செப்ட் ரொம்ப பிடித்திருந்தது. இதில் பிடித்த மற்றொன்று இது: 'வாழ்க்கை என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொஸ்டின் பேப்பர். அதன் வினாக்களுக்கு நாம் தான் விடையளிக்க வேண்டும். மற்றவர்களின் விடையை நாம் எழுத முயன்றால் நாம் பெயிலாகி விடுவோம்'. இப்படித் தொடக்கத்தில் பிண்ணி எடுக்கும் பிரபு சாலமோன் படம் போகப் போக கருத்துச் சொல்வதில் துவண்டு விடுகிறார். பிரபு சாலமோன் நீங்க கிறிஸ்தவர் தான். உங்க மதம் உங்களுக்கு முக்கியம்தான். அதற்காக உங்க படத்துல வர்ற விசிட்டிங் கார்டு வரைக்கும் எல்லாதுலயும் கிறிஸ்டின் பெயர்தான் இருக்கணுமா. இதில் டைட்டில் போடும் போது 'படத்தொகுப்பு: 1 சாமுவேல் 23:8' என்று போட்டிருக்கிறீர்கள். சரி அந்த வசனத்தை எடுத்தப் பார்த்தால் ஆண்டவர் என்று பெயர் இருக்கிறது. ஆண்டவர் என்ற பெயர் எண்ணற்ற இடங்களில் வர அந்த வசனத்தை மட்டும் நீங்க ஏன் எடுத்தீங்க. அல்லது உங்க படத்தொகுப்பை அந்த ஆண்டவர் தான் பண்ணினாரா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே. வாழ்க்கையின் இறுதியில் ஆரோன் அசைபோடும் ஒரு நினைவு தான் கயல் என்று முடித்திருந்தால் உங்களுக்கு நாங்க கோயில் கட்டியிருப்போம். பாவம். அவங்க ரெண்டு பேரையும் கடைசி வரை இப்படி அலைக்கழிக்க வச்சிட்டீங்களே! பைபிளில் வரும் ஆரோன் திருமணம் முடிக்காத (திருமணம் முடித்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து!) கன்னிச் சாமியார். அவர் தான் பழைய ஏற்பாட்டின் யாவே இறைவன் தங்கும் பேழையைத் தூக்கும் பாக்கியம் பெறுகின்றார். அந்த ஆரோனுக்கும் உங்க ஆரோனுக்கும் வேறு ஒன்றும் சம்பந்தம் இல்லையே! பெயர் வைக்கும் போதும் கொஞ்சம் பார்த்து வைங்க எசமான்!

இந்த இடத்தில் நான் நேற்று பார்த்த ராமானுஜன் திரைப்படத்தையும் பதிவு செய்ய விழைகிறேன். கணித மேதை சீனிவாச ராமானுஜம் அவர்களைப் பற்றியது. மிக அழகான திரைக்கதை மற்றும் இயக்கம். ராமானுஜத்தின் மனைவி ஜானகியாக வரும் இளவலின் நடிப்பு மிக அருமை. இதில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான்: 'இந்த உலகம் தன்னைச் சுற்றி சாதாரணமானவர்களையே வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதற்கு ஜீனியஸ்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அப்படி யாரையாவது அது பார்த்துவிட்டால் அது சாதாரணமானவராக அவரை மாற்றிவிட முயற்சி செய்கிறது. அல்லது அவருக்குப் பைத்தியம் என்ற பட்டம் கட்டிவிடுகிறது.'

எந்நேரமும் கணிதம் என்று இருக்கும் ராமானுஜன் போல எந்நேரமும் பைபிள் என்று இருக்க எனக்கு ஆசை. எந்த நிலையிலும் தன் தேடலில் சமரசம் செய்து கொள்ளாத ராமானுஜன் தன் 32 வயதில் வாழ்வை முடித்தாலும் இன்றும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.


2 comments:

  1. பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள அவியல் என்ற ஒன்றை செய்வார்கள்.அப்படி ஒரு அவியல் கலவையாக இருந்தது இன்றையப் பதிவு."இந்த உலகம் சாதாரணமானவர்களையே விருமபுகிறது"...முத்தான விஷயம்.மற்றும் "எந்நேரமும் கணிதம் என்றிருக்கும் ராமானுஜன்
    போல எந்நேரமும பைபிள் என்றிருக்க எனக்கும் ஆசை"...தங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    super Yesu. i love reading your memories.

    ReplyDelete