Thursday, January 22, 2015

மரியாளின் நிழல்கள் - 1

ஒருவரின் நிழல் (ஷேடோ) என்று நாம் ஒன்றைக் குறிப்பிட்டால் உளவியலில் அது அவரது எதிர்மறையான குணம் என்று கருதப்படுகின்றது. உதாரணத்திற்கு, ராஜாவிடம் எல்லா நல்ல குணமும் இருக்கின்றது. ஆனால் அவனுக்கே தெரியாத அவனது நிழல் அவனது கோபம் என்று சொல்கிறோம் என வைத்துக் கொள்வோம். இதில் கோபம் என்ற குணம் ராஜாவின் நிழலாக இருக்கின்றது. மேலும் நிழல் ஒருவருக்குப் பின் விழுவதால் ஒருவருக்குத் தெரியாத ஒன்றாகவும் இருக்கிறது.

மரியாளின் நிழல்கள் என்று நாம் தொடங்கும் இந்தப் பகுதி மரியாளின் எதிர்மறையான பண்புகளைச் சொல்வன அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே மரியாளை நிறுத்;தி, புதிய ஏற்பாட்டின் ஒளியை அவர்மேல் விழச் செய்தால் பழைய ஏற்பாட்டு கதாபாத்திரங்களின் மேல் விழுகின்ற நிழலே நாம் சொல்ல விழைவது. பழைய ஏற்பாட்டில் மரியாள் பல்வேறு கதாபாத்திரங்களில் நிழலாடுகின்றார். இந்தக் கதாபாத்திரங்கள் கண்டிப்பாக பெண்கள் தாம். பழைய ஏற்பாட்டுப் பெண்களை அலசிப் பார்க்கும் போது மரியாளின் நிழலைத் தாங்கும் பெண்கள் ஒன்பது பேர் இருக்கின்றனர்: ஏவாள், சாரா, ரெபேக்கா, ராகேல், மிரியம், தெபோரோ, ரூத்து, அபிகாயில் மற்றும் எஸ்தர். நம்ம கணக்குப்படி ஏழு தான் இருக்கணும். ஆனா, ஒன்பது இருக்கு. பரவாயில்லை. ஒன்பதையும் பற்றி எழுதுவோம். இந்தக் கதாபாத்திரங்கள் வரலாற்றில் வாழ்ந்தார்களா, இல்லையா என்பது குறித்து நாம் விவாதிக்கப்போவதில்லை. விவிலியத்தில் சொல்லப்பட்டபடி இவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சரியா?

1. ஏவாள்

ஏவாளுக்கு ஆதாம் இரண்டு முறை பெயரிடுகின்றான்: முதலில், தொடக்கநூல் 2:23 'அப்பொழுது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள். ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்' என்றான்'. இரண்டாவதாக, தொடக்கநூல் 3:20 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.' எபிரேய மொழியில் முதலில் அவள் 'ஈஷா' ('ஈஷ்' என்றால் ஆண், 'ஈஷா' என்றால் பெண்) என்றும், இரண்டாவதாக 'ஹவ்வா' ('ஹாயா' அல்லது 'ஹாவா' என்றால் உயிர் என்பதும பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றாள்.

மரியாளை புதிய ஏவாள் என அழைப்பதற்கு முதற்காரணம் இயேசுவை புதிய ஆதாம் என தூய பவுலடியார் அழைப்பதுதான் (காண் உரோமையர் 5, 1 கொரிந்தியர் 15). மரியாளை புதிய ஏவாள் என்று எந்தப் புதிய ஏற்பாட்டுப் பகுதியும் குறிப்பிடவில்லை. தூய யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலின் 'பெண்ணும் அரக்கப்பாம்பும்' (திவெ 12) பகுதியில் கூட அந்தப் பெண் மரியாள் என்று குறிப்பிடப்படவில்லை.

முதல் ஏவாளுக்கும், இரண்டாம் ஏவாளுக்கும் ஆறு ஒற்றுமைகள் (வேற்றுமைகள்!) உள்ளன:

அ. முதல் ஏவாள் முதல் ஆதாமிலிருந்து வந்தாள். ஆனால் இரண்டாம் ஆதாம் இரண்டாம் ஏவாளிலிருந்து வருகின்றார்.

ஆ. முதல் ஏவாள் சாத்தானின் குரலைக் கேட்கின்றாள். இரண்டாம் ஏவாள் தேவதூதனின் குரலைக் கேட்கின்றாள்.

இ. முதல் ஏவாள் பாவத்தையும், சாவையும் பெற்றெடுக்கிறாள். இரண்டாம் ஏவாள் அருளையும், மீட்பையும் பெற்றெடுக்கிறாள்.

ஈ. முதல் ஏவாளும், முதல் ஆதாமும் சேர்ந்து 'விழுகின்றனர்'. இரண்டாம் ஏவாளும், இரண்டாம் ஆதாமும் சேர்ந்து 'எழுகின்றனர்'.

உ. முதல் ஏவாள் 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும்' தாயாகிறாள். இரண்டாம் ஏவாள் 'கிறிஸ்துவில் வாழ்வோர் அனைவருக்கும்' தாயாகிறாள்.

ஊ. முதல் ஏவாளுக்குப் பகையாக இருந்தது பாம்பு. இரண்டாம் ஏவாளுக்குப் பகையாக இருப்பது சாத்தான்.

இந்த ஆண்டு புத்தாண்டின் முதல் நாளில் மரியாளை இறைவனின் தாய் என்று ஆற்றிய மறையுரையில் முதல் ஏவாளையும், இரண்டாம் ஏவாளையும் மூன்று பகவத்கீதைக் கோட்பாடுகளை வைத்து ஒப்பிட்டேன். அதை இங்கே பதிவு செய்வதும் பொருத்தமாக இருக்கும்;.

'தினச்சார்யா' என்பது பகவத் கீதையின் ஒரு மேலாண்மைக் கோட்பாடு. இதன் அர்த்தம் இதுதான்: 'நாம் தினமும் செய்யும் ஒன்று என்னதான் குறைவோடு இருந்தாலும், நான் என்றாவது செய்யும் நிறைவான ஒன்றைவிட மேலானது!' புரியலையா! ரொம்ப சிம்பிள். தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போவது (வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும், பேசிக்கிட்டே நடந்தாலும், பேசாமல் நடந்தாலும்) மாதத்திற்கு ஒருமுறை வாக்கிங் போவதை விட (ரொம்ப பெர்ஃபெக்டா, சைலண்ட்டா போனாலும்) மேலானது. அல்லது தினமும் ஐந்து நிமிடம் தியானம் செய்வது மாதத்திற்கு ஒருநாள் ஒரு மணிநேரம் செய்யும் தியானத்தைவிட மேலானது. உங்க ஒய்ஃப் ரொம்ப தூரமா இருக்காங்கனு வச்சிக்குவோம். அவங்ககிட்ட நீங்க தினமும் அஞ்சு நிமிஷம் பேசினாலும் (சண்டை போட்டுக்கிட்டே!) அது மாதத்திற்கு ஒரு முறை (வழிஞ்சு வழிஞ்சு) பேசுறதை விட ரொம்ப பலன் தருமாம்.

லாஜிக் ரொம்ப சிம்பிள். தினமும் தூங்குகிறோம்;. தினமும் எந்திரிக்கிறோம். தினமும் குளிக்கிறோம். தினமும் பல் துலக்குகிறோம். தினமும் மூச்சு விடுகிறோம். ஆனால் வாழ்வின் சில செயல்கள் (படிப்பது, வேலை பார்ப்பது, உறவுகளை வளர்ப்பது) என்று வரும் போது நாம் அவைகளைச் செய்வதில் தள்ளிப்போடுகிறோம். எதையும் தினமும் செய்ய வேண்டும் என்பதுதான் கீதையின் போதனை. உதாரணத்திற்கு, பன்மொழியில் நீங்க பேசணுமா. தினமும் அந்த மொழிகளில் அஞ்சு நிமிஷமாவது பேசணும். கம்ப்யூட்டரில் கலக்கணுமா. தினமும் ஒரு மணி நேரமாவது அதைக் குறித்துப் படிக்கணும். உங்க ஃப்ரெண்ட்ஷிப் நல்லா இருக்கணுமா. தினமும் ஆஃப் அன் அவராவது ஸ்பெண்ட் பண்ணனும். இப்போ புரியுதா! எப்பாடு பட்டாவது நான் தினமும் ஒரு பக்கமாவது அனிச்சம் வலைப்பூவில் எழுதி விடுவதை!

இந்த 'தினச்சார்யா' பிரின்சிபிலை மூன்று பரிமாணங்களாகப் பிரிக்கலாம்:

அ. மேலானது எது, தாழ்வானது எது என ஆராய்ந்து பார்க்க வேண்டும். தாழ்வானதை உதறித் தள்ளவிட்டு மேலானதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். காலையில அஞ்சு மணிக்கு 'வேக்-அப்' டைமர் வைக்கிறோம். டைமர் அடிக்கிறது. இப்ப நாம ஒரு முடிவு எடுக்கணும். எந்திரிக்கவா. வேணாமா. நம்ம மூளை என்ன சொல்லும்! இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா. ரொம்ப டயர்டா இருக்க. நாளைக்கு வாக்கிங் போய்க்கலாம். அல்லது நாளைக்கு கோயிலுக்குப் போய்க்கலாம். ஒருநாள் போகலனா ஹார்ட் அட்டாக்கா வந்துடும். அல்லது ஒருநாள் போகலனா சாமி கோய்ச்சிக்கிடுமா. இதில் சோம்பல் என்பது தாழ்வானது, சுறுசுறுப்பு என்பது மேலானது. நாம ரெண்டையும் பிரிச்சிப் பார்க்கணும். அப்புறம் தாழ்வான சோம்பலை விட்டுவிட்டு, மேலான சுறுசுறுப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆமாம்! போர்வையை விலக்கி எந்திரிச்சிடணும்.

இதை முதல் ஏவாள், இரண்டாம் ஏவாள் வாழ்வில் பாருங்களேன். கண்ணுக்கு ஒரு பழம் அழகா தெரியுது. மேலானது எது கடவுளுக்குக் கீழ்ப்படிவது. தாழ்வானது எது பழத்தைப் பறித்து உண்பது. ஆனா, முதல் ஏவாள் மேலானதை விலக்கிவிட்டு, தாழ்வானதைப் பற்றிக் கொள்கின்றாள். இரண்டாம் ஏவாளுக்கும் ஒரு கட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலை வருகிறது. 'நீ தூய ஆவியின் அருளால் குழந்தை பெறுவாய்!' என்று தூதர் சொல்கிறார். இதில் மேலானது என்பது இறைத்திட்டம். கீழானது என்பது மக்களின் ஏச்சுப்பேச்சு. இரண்டாம் ஏவாள், கீழானதை ஒதுக்கி விட்டு மேலானதைப் பற்றிக் கொள்கின்றார்.

ஆ. நாம் எதில் நேரத்தைச் செலவழிக்கிறோமோ, அது வளரும். நாம் எதில் நேரத்தைச் செலவழிக்கவில்லையோ அது குறையும். டார்வினின் உயிரியில் பரிணாமக் கோட்பாடும் இதுதான். பயன்பாட்டில் இருக்கும் எதுவும் வளரும். பயன்பாட்டில் இல்லாத எதுவும் அழிந்து விடும். ஒருகாலத்தில் பாம்புகளுக்கு கால்கள் இருந்தனவாம். காலப்போக்கில் அவைகள் பயன்படுத்தப்படாததால் அழிந்து விட்டன. அது போல ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மற்ற விலங்குகளின் கழுத்து போல சின்னதாகத் தான் இருந்ததாம். ஆனால், உயர்ந்த மரங்களின் இலைகளைப் பறித்து உண்ண வேண்டிய நிர்பந்தம் அவைகளுக்கு இருந்ததால், அந்தப் பயன்பாட்டின் காரணமாக அவைகளின் கழுத்து நீண்டு விட்டது. நாம ஒரு கெட்ட பழக்கத்தை விட முடியலனு சொல்றோம். ஏன்? அந்தப் பழக்கத்தோட நாம நம்ம நேரத்தை செலவழிக்கிறோம். உதாரணத்திற்கு, எனக்கு குடிப்பழக்கம் அல்லது போர்னோகிராஃபி பார்க்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? இந்தப் பழக்கத்தை நிறுத்த முதலில் நான் இந்தப் பழக்கத்தோடு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். தினமும் மாலை ஒருமணி நேரம் உட்கார்ந்து குடிக்கிறேன் என்றாலோ, அல்லது படம் பார்க்கிறேன் என்றாலோ அதை அரை மணியாக, கால் மணியாக, பத்து நிமிடமாக, ஐந்து நிமிடமாகக் குறைத்து மொத்தமாகக் குறைத்துவிட வேண்டும். நாம் ஒரு நிமிடம் அந்தப் பழக்கத்திற்காக ஒதுக்கினாலும் அது நம்மை விட்டுப் போவதில்லை. 'மாட்டேன்!' என்றால் 'மாட்டேன்!' - இதில் சமரசம் செய்து கொள்ளாத சுயகட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம். இதேபோல நான் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டை நன்றாக வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என வைத்துக்கொள்வோம். ஆசை இருந்தால் மட்டும் போதுமா. நான் கிரேக்க மொழி விவிலியத்தோடு என் நேரத்தைச் செலவிழிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை என்பார்கள். அதுபோல நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றிற்கும் நம் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். நமக்குத் தேவையில்லாத உறவுகளை, நம் வளர்ச்சிக்குப் பயன்தராத உறவுகளை எப்படி விட்டுவிடுவது? இதே லாஜிக் தான். அந்த உறவு பற்றி நினைத்துப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அந்த உறவுகளோடு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். நேரம் குறைய உறவு குறையும். நேரம் அதிகமாக உறவும் அதிகமாகும்.

முதல் ஏவாள் படைக்கப்பட்டதன் நோக்கம் தன் கணவனோடு இருப்பதற்குத்தான். ஆனால், அவர் கணவனோடு நேரத்தைச் செலவழித்ததை விட பாம்போடும், பழத்தோடும் தான் நேரத்தைச் செலவழிக்கிறார். பாம்பு சொன்னவுடன் பழத்தை பறித்திருப்பார் என நினைக்கிறீர்களா? இல்லை. கண்டிப்பாக ஒரு வாரமாவது அதைப் பற்றியே நினைத்துக் கொண்டே தான் இருந்திருப்பார். பின் ஒரு நாள் எட்டிப் பிடித்துப் பார்த்திருப்பார். பின் தொட்டுப் பார்த்திருப்பார். பின் பறித்து ஒளித்து வைத்திருப்பார். பின் தான் சாப்பிட்டிருப்பார். நாம் செய்யும் தீய பழக்கத்திற்கும், அதை மறைப்பதற்கும் தான் நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இல்லையா? இரண்டாம் ஏவாள் தன் நேரத்தைச் செலவழித்ததெல்லாம் தன் மகனோடு மட்டும் தான். தன் மகனின் விருப்பம், தேடல் அனைத்தையும் தன் தேடலாக வைத்துக் கொள்கின்றார். ஆகையால் தான் தன் மகனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்விலும் (பெத்லகேம், நாசரேத்து, கானா, கல்வாரி) அவரோடு தன்னை முழுமையாக ஒன்றித்துக் கொள்ள முடிகிறது.

இ. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம். அந்த நேரத்தில் அந்த ஒன்று மட்டும் தான். ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம். அந்த இடத்தில் அந்த ஒன்று மட்டும் தான். இன்னைக்கு நாம மல்டிடாஸ்கிங் பற்றிப் பேசுகிறோம். நாம அதையேதான் செய்றோம். ஃபோன் பேசும்போது பைக் ஓட்டுறோம். சாப்பிடும் போது டிவி பார்க்கிறோம். டிவி பார்க்கும் போது பேசுறோம். பேசும்போது செல்ஃபோனை நோண்டுறோம். எதையும் நாம் முழுமையாகச் செய்வதில்லை. ஆகையால் தான், என்ன பேசுனோம்கிறதும், என்ன சாப்பிட்டோம்கிறதும், என்ன பார்த்தோம்கிறதும் மறந்துடது. சில பேர் டெய்லி பைக் சாவியைத் தேடுவதை ஹாபியாக வைத்திருப்பார்கள். பொண்ணுங்களுக்கு மொபைல் ஃபோனை தேடுறது ஒரு ஹாபி. ஒருகாலத்துல நானும் ஃபோனைத் தேடிக்கிட்டே தான் இருப்பேன். சில நேரங்களில் யாரிடமாவது ஃபோன்ல பேசிகிட்டே ஃபோன் எங்க இருக்குணு தேடுவேன். இப்ப ஸ்மார்ட்ஃபோன் வாங்குனதுக்கு அப்புறம் அந்தக் கவலையே இல்லை. ஏன்னா, எப்பவும் என் ஃபோன் சார்ஜர்லதான இருக்கு! நாம எல்லா நேரத்திலயும், எல்லாத்தையும் பண்றதுனால நம்மளோட உற்பத்தித்திறனும், படைப்புத்திறனும் குறைகிறது. வீணாகிறது. கொஞ்ச வருடத்துக்கு முன்னால கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகள் மாதிரி, வரைந்த ஓவியங்கள் மாதிரி, கட்டிய கட்டடங்கள் மாதிரி நம்மால் செய்ய முடியவில்லை. ஏன்? எல்லாத்தையும் உடனடியாக நம் கையடக்க மொபைலில் பார்க்க முடியறதுனால நம்மளோட நாம புதுசா எதையும் கற்பனை பண்ண முடியறதில்லை.

முதல் ஏவாள் செஞ்சதும் மல்டிடாஸ்கிங் தான். பாம்போட செலவிட்ட நேரத்தை கொஞ்சம் கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி அப்படின்னு செலவிழிச்சிருக்கலாம். ஒருவேளை கோழி வளர்க்கும்போதுகூட பாம்பு சொன்னததான் நினைச்சிட்டு இருந்திருப்பார். ஆதாமோட இருக்க வேண்டிய நேரத்துல பாம்போட இருந்ததுதான் பெரிய பிரச்சினையாயிடுச்சு. ஆனால் இரண்டாம் ஏவாள் அதற்கதற்கான நேரத்தை அதற்கதற்காக மட்டும் செலவழிக்கிறார். பெத்லகேமில் நாசரேத்தை நினைத்து வருந்தவில்லை. கானாவில் கல்வாரியை நினைத்துப் பயப்படவில்லை. அந்தந்த நேரத்தில், அந்தந்த இடத்தில் முழுமையாக வாழ்கின்றார் இரண்டாம் ஏவாள்.

இந்த மூன்று பண்புகளுகளும் இருந்ததால் தான் இரண்டாம் ஏவாள் கடவுளின் தாயாக உயர்கிறாள். இவைகள் இல்லாததால் முதல் ஏவாள் மனிதர்களின் தாயாக மட்டுமே இருந்து விட்டாள்.


2 comments:

  1. "மரியாளின் நிழலைத்தாங்கும் பெண்கள்"...தலைப்பே புதுமையாக உள்ளது.மரியாள் புதிய ஏவாள் எனில் இயேசு புதிய ஆதாம்...கொஞ்சம் நெருடலாக உள்ளது.முதல் ஏவாளுக்கும் இரண்டாம் ஏவாளுக்குமுள்ள ஒப்புமைப் பட்டியல் சுவாரஸ்யம்.தினச்சார்யாவின் கொள்கைகளின்படி "வாழ்வில் மேலானதைத் தேர்ந்தெடுப்பது,செய்யும் செயலுக்கு நேரம் கொடுத்துத் திறம்படச் செய்வது,ஒரு சமயத்தில் ஒரு செயலை மட்டுமே செய்வது"...இவற்றை இரண்டாம் ஏவாள் கடைபிடித்ததால் இறைவனின் தாயாக உயருகிறாள் எனவும்,கடைபிடிக்காததால் முதல ஏவாள் மனிதர்களின் தாயாக மட்டுமே இருந்துவிட்டாள்....சிந்திக்க வைக்கின்றன.நாமும் கூட நம் வாழ்வில் இவற்றைக் கடைபிடித்தால் இறைவனின் தாயாக உயரவில்லையெனினும் ஒரு நல்ல மானுடப் பிறவியாகவேணும் இருக்லாமே! நிறையக் கருத்தாழமிக்க,சிந்திககத்தூண்டும் விஷயங்களைத் தந்த தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    Hats off Yesu

    ReplyDelete