Monday, January 19, 2015

மரியாளின் பயணங்கள் - 1

ஒரு நாவலைப் படித்ததால் அன்னை மரியாளின் மேலுள்ள பக்தி மீண்டும் உயிர் பெற்றது என போன வாரம் எழுதியிருந்தேன்.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த அன்னையின் மேல் இன்னும் ஆர்வம் வரத் தொடங்கியது. ஆகையால் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கும், திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா ஆலயத்திற்கும் சென்றேன். அந்த இரண்டு நாட்கள் அனுபவம் மிக அருமையாக இருந்தது.

எனது இரண்டாம் புத்தகம் அன்னை மரியாளைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று அங்கே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்படின்னா முதல் புத்தகம் எழுதியாச்சா? அதாங்க, மூன்று வருடங்களுக்கு முன்பாக வந்த 'அவரோடு' என்னும் நூல். தவக்கால மற்றும் உயிர்ப்புக்கால சிந்தனைகளைத் தாங்கி வந்த நூல். என் குருத்துவ அர்ப்பணத்தின் விருதுவாக்கையே அந்த நூலுக்கு தலைப்பாக்கிக் கொண்டேன்.

அன்னை மரியாளின் ஏழு - ஏழு. இதுதான் இந்தப் புதிய புத்தகத்தின் கான்செப்ட். அன்னை மரியாளின் ஏழு என்றால் வழக்கமாக நாம் அவரது ஏழு துயரங்களைத் தான் நினைப்போம். ஆனால் அதையே கொஞ்சம் நீட்டி அன்னை மரியாள் பேசிய ஏழு வார்த்தைகள், அன்னை மரியாளிடம் பேசப்பட்ட ஏழு வார்த்தைகள், அன்னை மரியாளின் ஏழு மௌனங்கள், அன்னை மரியாளின் ஏழு பயணங்கள், அன்னை மரியாளின் ஏழு மகிழ்ச்சிகள், அன்னை மரியாளின் ஏழு நிழல்கள் என கற்பனை செய்யத் தோன்றியது. இவைகளில் அன்னையின் மௌனங்கள் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம். மற்றவைகளை எழுதத் தொடங்கி எல்லாம் ஒவ்வொரு பத்தியில் நிற்கிறது. ஆக, இப்படி வலைப்பதிவில் தினமும் எழுதினால் இதை எளிதாகவும், வேகமாகவும் எழுதி முடித்துவிடலாம் என்ற ஆசையில் இன்று முதல் இந்த எண்ண ஓட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இன்று நாம் தொடங்கவிருப்பது பயணங்கள். ஆம்! அன்னை மரியாளின் ஏழு பயணங்கள்!

பயணங்கள் முடிவதில்லை. அலைகள் ஓய்வதில்லை என்பார்கள்.

நம் வாழ்க்கையை ஒரு ரயில் பயணத்திற்கு ஒப்பிடலாம். எங்கோ புறப்பட்ட ரயில் எங்கோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு ஸ்டேஷனில் ஏறுகிறோம். நாம் ஏறுகின்ற பெட்டியில் ஏற்கனவே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் நமக்கு உறவினர்கள் என மற்றவர்கள் அறிமுகம் செய்து வைக்கின்றனர். மற்றும் சிலரை நாமாகவே பழகிக் கொள்கிறோம். அடுத்த ஸ்டேஷனில் சிலர். அதற்கடுத்து சிலர் என ஆட்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். புது முகங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர்களோடும் அறிமுகம் ஆகிறோம். சிலரோடு சேர்ந்து சாப்பிடுகிறோம். சிலரோடு அப்படியே வாக்கிங்கும் போகிறோம். வெளியில் வேடிக்கை பார்க்கிறோம். பொருட்கள் வாங்குகிறோம். பரிமாறிக் கொள்கிறோம். கூடவே வந்தவர்கள் திடீரென இறங்க ஆரம்பிக்கிறார்கள். தனிமை கொஞ்சம் வாட்ட ஆரம்பிக்கிறது. அடுத்த பெட்டிக்குப் போனால் தனிமை மறையும் என்கின்றனர் சிலர். நாம் போயும் பார்க்கிறோம். அங்கேயும் நம் உடன் வரும் சிலர் அடுத்தடுத்து இறங்க ஆரம்பிக்கின்றனர். நாமும் இறங்க வேண்டுமோ என்ற பயம் நம்மை தொற்றிக் கொள்கின்றது. இன்னும் யார் ஏறுவா என்ற ஏக்கம், யார் இறங்குவா என்ற கவலை, நாம எங்க எறங்கணும்கிற பயம் என்று டிரெய்ன் சென்று கொண்டே இருக்கிறது.

பயணத்தைப் பயணம் எனக் குறிக்கும் பண்புகள் மூன்று:

அ. இலக்கு. ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு இலக்கு இருக்கிறது. ஒரு பஸ்ல ஏர்றோம். கண்டக்டர் நம்மள எங்க போகணும்னு கேட்கிறார். தெரியலயே என்று நாம் பதில் சொன்னாலோ அல்லது ஏதாவது ஒரு டிக்கெட் கொடுங்க என்று சொன்னாலோ நம்மை ஏற இறங்கப் பார்ப்பார். 20 நிமிடங்கள் நாம் செல்லும் சின்னப் பயணத்திற்குக் கூட இலக்கு தேவைப்படுகிறது. நம் பயணங்களின் இலக்குகளாகப் பெரும்பாலும் மனிதர்களே இருக்கிறார்கள். நாம் யாரையாவது சந்திக்கப் போகிறோம். அல்லது அந்தச் சந்திப்பின் வழியாக ஏதாவது ஒன்றை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறோம். உதாரணத்திற்கு, வங்கிக்குப் போகிறோம். வங்கியின் காசாளரைச் சந்திக்கப் போகிறோம். அந்தச் சந்திப்பின் வழியாக நம் அக்கவுண்டில் பணம் போடப் போடுகிறோம்.

ஆ. இயக்கம். இலக்கு மட்டும் இருந்தால் பயணம் பயணமாகிவிடுமா? இல்லை. இயக்கம் அவசியம். ஒரு இடத்திலிருந்து நாம் மற்றொரு இடத்தை நோக்கி இயங்க வேண்டும். மருத்துவமனைக்கு நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். மருத்துவமனை என்ற இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை நோக்கிய இயக்கம் இருக்க வேண்டும். இயக்கத்திற்கு அவசியம் விடுதல். அதாவது, வீடு என்ற ஒன்றை விட்டு வெளியேறினால் தான் நாம் மருத்துவமனை என்ற இலக்கை அடைய முடியும். ஆக, ஒவ்வொரு பயணத்திலும் நாம் கண்டிப்பாக ஒன்றை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. ஒன்றிலிருந்து நாம் வெளியேறுகிறோம். மற்றொன்றினுள் உள் நுழைகிறோம். வீட்டை விட்டு வெளியேறி பேங்கிற்குள் நுழைகிறோம். பேங்கிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் நுழைகிறோம். ஆக, உள்ளும் வெளியே இயங்கும் இயக்கம் பயணத்தின் இரண்டாவது கூறு.

இ. இணைப்பு. இதை இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று, நாம் பயணம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தோடும், இடத்தோடும் நம்மையே இணைத்துக் கொள்கிறோம். இந்த இரண்டோடும் தொடர்பு இல்லாமல் நாம் பயணம் செய்ய முடியாது. காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரசில் நாம் பயணம் செய்கிறோம் என்றால், அந்த நேரத்தில் நாம் வைகை எக்ஸ்பிரசில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், நேரத்தோடும், இடத்தோடும் நம்மை இணைத்தால் தான் பயணம் செய்ய முடியும். இரண்டாவதாக, நாம் மற்ற பயணிகளோடு இணைகின்றோம். நாம் நடந்து சென்றால் கூட அந்தப் பயணத்தில் யாரோ ஒருவர் போட்ட சாலையைப் பயன்படுத்துகிறோம். யாரோ ஒருவர் நட்ட மரத்தின் அடியிலோ, கட்டிய சத்திரத்தின் நிழலிலோ இளைப்பாறுகிறோம். ஏதோ ஒரு வகையில் நாம் அந்த முகம் தெரியாத மனிதரோடு இணைந்திருக்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும் நாம் தெரிந்தவர்களோடும், தெரியாதவர்களோடும் இணைந்தே இருக்கின்றோம்.

இந்த மூன்று அம்சங்களும் எல்லாப் பயணங்களுக்கும் பொருந்தக் கூடியவை.

நம் வாழ்வில் சில பயணங்களை நாம் விரும்பி மேற்கொள்கிறோம். சிலவற்றில் நாம் கட்டாயப்படுத்தி அனுப்பப்படுகிறோம். சில பயணங்களை ரசிக்கிறோம். சில பயணங்களைக் கண்டு எரிச்சல் படுகிறோம். சில பயணங்கள் சீக்கிரம் முடிந்துவிட்டதாக வருந்துகிறோம். சில பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சில பயணங்களை மற்றவர்களோடு மேற்கொள்கிறோம். சில பயணங்களில் தனிமையே இன்பம் என நினைக்கிறோம். சில பயணங்களை நினைத்து நினைத்து அகமகிழ்கிறோம். சில பயணங்களை முயற்சி செய்து மறக்க நினைக்கிறோம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பயணத்திற்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. தொடங்கும் பயணம் கண்டிப்பாக முடிய வேண்டும். பயணம் என்னும் வட்டம் நிறைவு பெற வேண்டும். பிறக்கும் நாம் இறக்க வேண்டும். ஏறும் நாம் இறங்க வேண்டும். கை குலுக்கும் நாம் கையசைக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்.

ஒருசிலரைப் பார்த்து 'அவன் அங்கேயே போய் செட்டில் ஆயிட்டான்!' என்பார்கள். சில பயணங்கள் விபத்தினாலோ, இழப்பினாலா, இயற்கைச் சீற்றத்தாலோ பாதியிலேயே முடிந்துவிடுகின்றன. நாமாக பயணத்தை முடித்துக் கொண்டாலோ, விபத்தால் பயணம் தடைபட்டாலோ அங்கே அழுகையும், கண்ணீருமே மிஞ்சுகின்றது.

இன்னைக்கு நாம எவ்வளவோ பயணங்களை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பயணமும் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்போதுதான் நிறைவு பெறுகிறது. நம் பயணங்கள் அன்னை மரியாளின் பயணங்களோடு தொடர்புடையவையா? அன்னையின் பயணங்களின் நோக்கங்கள் என்ன என்பதை நாளை காண்போம்!

(இன்ட்ரோவே இவ்வளவு பெருசா வரும்னு நினைச்சு கூட பார்க்கல!)

(பயணம் தொடரும்)


4 comments:

  1. "பயணங்கள்"...அனைவருக்கும் பிடித்த வார்த்தை மட்டுமல்ல,ஏங்கி எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு செயலும் கூட..ஆனால் பல சமயங்களில் ஏன்,எங்கே,எதற்கு என்றே தெரியாமல் பயணிக்கும் போது அது அர்த்தமற்றதாகிவிடுகிறது,இதை அர்த்தமுள்ளதாக்க நம்மை சிந்திக்க அழைக்கும் ஒரு வேகத்தடைதான் தந்தையே தங்களின் "பயணங்கள்"தொடர்.ஆவலோடு காத்திருக்கிறோம்....எழுதுங்கள்.அன்னை மரயாளும்,பரிசுத்த ஆவியும் தங்களுக்குத் துணை வரட்டும்........

    ReplyDelete
  2. Waiting eagerly for the next part.

    ReplyDelete
  3. ஏலாக்குறிச்சி எனக்கு மிகவும் பிடித்த திருத்தலங்களில் ஒன்று. வீரமாமுனிவரது பணி இன்றும் என்னை மெய்சிலிா்க்க வைக்கும் விஷயஙகளில் ஒன்று!

    ReplyDelete
  4. Thanks a lot dear Sir. How are you?

    ReplyDelete