Friday, February 28, 2014

ஒரு மனிதனின் தற்கையளிப்பு

ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம். ஒரு இருண்ட சிறைச்சாலை. தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள். பல்வேறு வகையில் சாவு. வாழ்வா, சாவா என்பதே தினசரி கனவாகிப் போனது சிறைவாசிகளுக்கு. மறுபுறம் சண்டை சச்சரவுகள். கைதிகளுக்குள்ளே கலவரங்கள். புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கையில் சிக்கியும் துன்புற்றனர். எந்த நேரமும் குழப்பம். ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம். நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாலை வேளை. கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். ஒரு மண்வெட்டியைக் காணவில்லை. அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும். அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுடக் கட்டளையிடுகிறான். அனைவருக்கும் பயம். வரிசையாக நின்றவுடன் ஒரு கைதி மட்டும் முன்னே வந்து தான் திருடியதை ஒப்புக் கொள்கிறான். படைவீரர்கள் பாய்ந்தோடிப் பிடித்து அவனைச் சுட்டுக் கொள்கின்றனர். ஆழ்ந்த அமைதி. அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் ஆச்சர்யம். நிசப்தம். எதற்காக அந்த மனிதன் பிறருக்காகத் தனது உயிரை இழந்தான்? அன்றிலிருந்து ஒரு புதிய நிலை சிறைச்சாலையில்: கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகினர். படைவீரர்கள் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருந்தனர். புதிய கைதிகளை நன்முறையில் நடத்தினார்கள். எப்படி இவ்வளவு மாற்றம்? எல்லாம் அந்த ஒரு மனிதனின் தற்கையளிப்பு. அந்த மனிதனுடன் இருந்த அனுபவம். 

1 comment:

  1. Anonymous2/28/2014

    தற்கையளிப்பு...புதிதான ஆனால் அழகான வார்த்தை.மனுக்குலம் மீட்புபெற தன்னையே அர்ப்பணித்தவரின் கால்சுவட்டைப் பின்பற்றியுள்ள அந்தக் கைதி எனக்கு 'மறு கிறிஸ்து'வாகத்தான் தோன்றுகிறார்.இப்படி அதிகம்பேர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை இனம் காண்போம்...நாமும் 'மறு கிறிஸ்து'க்களாக மாறுவோம்.

    ReplyDelete