Tuesday, February 28, 2023

யோனாவைவிடப் பெரியவர்

இன்றைய இறைமொழி

புதன், 1 மார்ச் 2023

தவக்காலம் முதல் வாரம்

யோனா 3:1-10. லூக் 11:29-32

யோனாவைவிடப் பெரியவர்

இன்றைய இரு வாசகங்களையும் அலங்கரிக்கும் ஒரு நபர் யோனா. எபிரேயத்தில் 'யோனா' என்றால் 'புறா' என்பது பொருள். பல ரபிக்கள் யோனா நூலை மித்ராஷ் வகை இலக்கியம் (கதையாடல் இலக்கியம்) எனக் கருதுகின்றனரே அன்றி, இறைவாக்கு நூலாகக் கருதுவதில்லை. ஏனெனில், இஸ்ரயேல் மக்களை உருவமாகத் திகழ்கிறார் யோனா. யோனா நூல் மூன்று நபர்களைச் சுற்றிச் சுழல்கிறது: நினியே நகர மக்கள், கடவுள், யோனா. நூலின் தொடக்கத்தில் நினிவே மக்கள் பாவிகளாக இருக்கிறார்கள், கடவுள் கோபமாக இருக்கிறார், யோனா தயக்கம் காட்டுகிறார். நூலின் இறுதியில் மேற்காணும் மூன்று பேருமே மனமாற்றம் அடைகிறார்கள்: நினிவே மக்கள் சாக்கு உடை உடுத்தி மனம் திரும்புகிறார்கள், கடவுள் அவர்கள்மேல் இரக்கம் காட்டுகிறார், யோனா கடவுளின்மேல் கோபம் கொள்கிறார்.

அசீரியாவின் தலைநகரமே நினிவே. கி.மு. 723-722ஆம் ஆண்டில் வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகிறது அசீரியா. இதனால் இஸ்ரயேல் மக்கள் அசீரியாமேல் வெறுப்பும் கோபமும் கொள்கிறார்கள். கடவுள் யோனாவை முதன்முதலாக நினிவே நகர மக்களிடம் அனுப்பியபோது அவர்கள் அந்நகருக்கு எதிர்திசையில் செல்லக் காரணம் இதுவே. இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த இனவெறுப்பும் கோபமும் யோனா வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால், கடவுளின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த நிகழ்விலிருந்து இஸ்ரயேல் மக்கள் மூன்று பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது: (அ) கோபம் அல்ல, மாறாக, இரக்கமே மற்றவர்களுக்கு நலம் தரும், (ஆ) கடவுளின் வழிகள் தனித்துவமானவை. அவற்றை நம்மால் கேள்விக்கு உட்படுத்த இயலாது, (இ) இந்த உலகில் தீமை எல்லாக் காலங்களிலும் எதிர்க்கப்படுவதில்லை. தீமையுடனும் வாழ்வதற்குப் பழகிக்கொள்தல் அவசியம்.

நற்செய்தி வாசகத்தில், அடையாளம் கேட்டுச் சோதித்த தம் சமகாலத்து மக்களுக்கு இரு அடையாளங்களைத் தருகிறார் இயேசு: சாலமோன், யோனா. இவ்விருவருமே தங்களுடைய சமகாலத்து மக்களைத் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சாலமோன் மிகப்பெரும் ஞானியாகத் திகழ்ந்தார். யோனா ஆற்றல்மிகு போதகராகத் திகழ்ந்தார். இயேசு சாலமோனைவிடப் பெரியவர். ஏனெனில், அவர் கடவுளின் ஞானம். இயேசு யோனாவைவிடப் பெரியவர். ஏனெனில், போதிக்கும் பணியுடன் சேர்த்து, நலம்தரும் பணியையும் இயேசு செய்தார்.

தென்னாட்டு அரசி சாலமோனை நம்பினார். நினிவே மக்கள் யோனாவை நம்பினார்கள். ஆனால், இயேசுவின் காலத்து மக்கள் அவரை நம்பவில்லை. 

யோனாவைவிடப் பெரியவரான இயேசு நம்மிடம் விரும்புவதும் பெரிய மனமாற்றமே.


No comments:

Post a Comment