Wednesday, February 8, 2023

தனிமையாக இருப்பது

இன்றைய இறைமொழி 

வியாழன், 9 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 2:18-25. மாற் 7:24-30.

தனிமையாக இருப்பது

முதல் வாசகத்தில் இரண்டாம் படைப்புக் கதையாடலின் நிறைவுப் பகுதியை வாசிக்கின்றோம். 'மனிதனின் தனிமை' என்னும் எதிர்மறை நிகழ்வாகத் தொடங்கி, 'இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' என நேர்முகமாக நிகழ்வாக கதையாடல் நிறைவு பெறுகிறது. அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள் மனிதனின் (ஆணின்) தனிமையை 'நல்லதன்று' எனக் காண்கின்றார். 

தாம் படைத்த அனைத்தையும் மனிதனிடம் கொண்டு வருகின்றார். மனிதன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயரிடுகிறான். அங்கே இன்னொரு எதிர்மறை விடயமும் பதிவு செய்யப்படுகின்றது. மனிதனுக்கு (ஆணுக்கு) ஏற்ற துணை எதுவும் அவற்றில் இல்லை. இது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இன்று பல இடங்களில் ஆண்-பெண் உறவு நிலை மறுக்கின்ற பலர், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுநிலைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் திருமணம் என்றும் முன்மொழிகின்றனர். ஆணின் துணை ஆணிலிருந்து உருவாக்கப்படுகின்ற பெண்ணே அன்றி மற்றவை அல்ல.

கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கின்றார். அக்காலத்து ஆசிரியருக்குத் தெரிந்த மயக்க மருந்து உறக்கம் என்பதே. கடவுள் என்னும் மருத்துவர் கத்தியின்றி இரத்தமின்றி அறுவைச் சிகிச்சை செய்கின்றார். ஆணின் விலா எலும்பு ஒன்று பெண்ணாக மாறுகிறது. விலா எலும்பு ஆணின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது. இவ்வாறாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நெருக்கம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆணின் மென்மையான இதயத்தை பெண் என்ற வன்மையான விலா எலும்பு காப்பாற்றுகிறது. இவ்வாறாக, பெண் திடமானவள் என்பதையும் ஆசிரியர் மிக அழகாகப் பதிவு செய்கின்றார். பெண்ணாக மாறி நிற்கும் விலா எலும்பைக் கண்டவுடன், ஆதாம் அவளுக்குப் பெண் எனப் பெயரிடுகிறான். 

'இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' எனத் திருமணம் பற்றிய குறிப்புடன் நிகழ்வு நிறைவுபெறுகிறது.

பெண் வந்தவுடன் ஆணின் தனிமை நீங்குகிறதா? அது போல பெண்ணின் தனிமையை ஆண் போக்க இயலுமா? 'உமக்காகப் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் உம்மில் மற்றும் உம்மால் நிறைவு காணும் வரை அவை நிறைவைக் காண்பதில்லை' என்று அகுஸ்தினார் மொழிவது ஏன்?

ஆண் தனிமையாக இருந்தபோது அவனோடு முதன்முதலாக உடனிருந்து தனிமை போக்கியது கடவுளே. அதுபோல பெண் படைக்கப்பட்டு ஆண் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் தனிமை போக்கியவரும் கடவுளே. ஆகையால்தான், நாம் இன்னும் கடவுளால் மட்டுமே நிறைவுபெறுகிறோம். கடவுள் மட்டுமே நம் தனிமை போக்கக் கூடியவர். 

நற்செய்தி வாசகத்தில், பேய் பிடித்திருந்த தன் குழந்தைக்கு நலம் தரும்படி இயேசுவை நாடி நிற்கின்றாள் சிரிய பெனிசிய (புறவினத்து) பெண். அவள் ஒரு பெண், புறவினத்துப் பெண், பேய் பிடித்த குழந்தையின் தாய். இப்படி மூன்றுவகை நொறுங்குநிலையில் வந்த அவள், 'குழந்தையின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவதில்லை' என்று இயேசு சொன்னவுடன் சற்றே வதங்கி விடுகிறாள். குழந்தையும் நாய்க்குட்டியும் வேறு எனச் சுட்டிக்காட்டியவரிடம், அவை இரண்டும் இருக்கும் இடம்தான் வேறு, அவை சாப்பிடுகின்ற உணவு ஒன்றுதான் என்று மொழிகிறாள் அவள். 'நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்' என அனுப்புகிறார் இயேசு. 

தன் கையறுநிலையில் இயேசுவிடம் சரணாகதி அடைகின்றார் பெண். 

மேற்காணும் இரு வாசகங்களை இணைத்துப் பார்ப்பது எப்படி?

ஆணும் பெண்ணும் தங்களைப் படைத்தவர் முன் சரணாகதி அடையும்போதும் நலம் பெறுகின்றனர்.


No comments:

Post a Comment