Sunday, February 5, 2023

உம் வேலைப்பாடுகள்

இன்றைய இறைமொழி 

திங்கள், 5 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் வாரம்

தொநூ 1:1-19. மாற் 6:53-56.

உம் வேலைப்பாடுகள்

'ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!' (திபா 104:24).

இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர் இறைவனின் படைப்பைக் கண்டு வியந்து இவ்வாறு பாடுகின்றார். முதல் வாசகத்தில், படைப்பின் தொடக்க நிகழ்வுகளை வாசிக்கின்றோம். முதல் நான்கு நாள்கள் நிகழ்வில் நாம் காண்பவை இவை: (அ) கடவுள் சொன்னவுடன் அது உருவாக்கம் பெறுகிறது. 'ஒளி உண்டாகுக' என்று அவர் சொல்லும்போது ஒளி உண்டாகிறது. (ஆ) கடவுள் ஒழுங்கற்ற தன்மையை ஒழுங்காக, ஒருங்கியக்கமாக மாற்றுகின்றார். (இ)  ஒன்றை மற்றொன்றிடமிருந்து பிரிப்பதன் வழியாக ஒவ்வொன்றின் வரையறையை நிர்ணயிக்கின்றார். மற்றும் (ஈ) படைப்பின் காரணரும் முதற்பொருளமாக ஆண்டவராகிய கடவுளே இருக்கின்றார்

நற்செய்தி வாசகத்தில் இயேசு கரையில் இறங்கியவுடனே மக்கள் கூட்டம் அவரை இன்னார் என்று கண்டுகொள்கின்றனர். இயேசுவைக் கண்டவுடன் அவர்களை ஒரு பரபரப்பு பற்றிக்கொள்கின்றது. ஊருக்குள் ஓடுகின்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள், தீய ஆவி பிடித்தவர்கள் என அனைவரையும் அவரிடம் அள்ளிக் கொண்டு வருகின்றனர். அவருடைய மேலுடையையாவது தொடுமாறு வேண்டுகிறார்கள். தொட்ட அனைவரும் கண்டுகொள்கின்றனர்.

பெயரில்லா இந்த மக்கள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றனர்:

(அ) இயேசுவை இன்னாரென்று அறிதல்

இயேசு என்ற நபரை அறிதல் என்பது அவருடைய பெயரையோ, உருவத்தையோ, அடையாளத்தையோ அறிதல் அல்ல. மாறாக, இயேசு எனக்கு இவர் என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்தல். இயேசுவை மற்றவர்கள் இன்னாரென்று அறிந்துகொண்டனர். ஆனால், அவரோடு உடன் நடந்த திருத்தூதர்கள் அவரை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. இதுதான் மாற்கு நற்செய்தியாளர் முன்வைக்கும் முரண். இயேசு எனக்கு யார்? அவரை நான் எப்படி அறிந்துகொள்கிறேன்?

(ஆ) இயேசுவைப் பற்றிக்கொள்தல்

இயேசுவைக் கண்டவுடன், அவரைப் பற்றிக்கொண்டு அவரிடமிருந்து முழுமையாகப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். வழியில் சென்றுகொண்டிருந்த பால் வண்டி கவிழ்ந்தவுடன், சாலையில் ஓடும் பாலை எப்படியாவது அள்ளிக்கொண்டு போக வேண்டும் என அங்கலாய்க்கும் மக்கள் போல, தங்களருகில் இயேசுவைக் கண்டவுடன் ஊருக்குள் சென்று நோயுற்ற அனைவரையும் அள்ளிக்கொண்டு வருகின்றனர். மகதலா மரியா உயிர்த்த ஆண்டவரைப் பற்றிக்கொண்டு நின்றதுபோல, இவர்களும் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர். எந்த அளவுக்கு அந்த மக்கள் தேவையில் இருந்தால் இயேசுவை இப்படிப் பற்றிக்கொண்டிருப்பார்கள்? இன்று கடவுளுக்கான என் தேவை எப்படி இருக்கிறது? கொஞ்ச நேரம் அவரை நற்கருணையில், இறைவார்த்தையில் கண்டாலும் அவரைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேனா அல்லது அவர் என் விரல்களின் இடையே நகர்ந்துவிடுமாறு நானே இறுக்கத்தை விடுகிறேனா?

(இ) உடனடி செயல்பாடு

'இன்று விருப்பம், நாளை செயல்' என்னும் வழக்கம் அந்த ஊர் மக்களிடம் இல்லை. மாறாக, 'இன்றே விருப்பம், இன்றே செயல்' என்று உடனடி செயல்பாட்டில் இறங்குகின்றனர். செயல்பாடாக மாறாத விருப்பங்கள் அனைத்தும் வெறும் கனவுகளாகவே மறைந்துவிடுகின்றன. நாம் எண்ணும் எண்ணங்கள் அல்ல, மாறாக, ஆற்றும் செயல்களே மற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த உலகில் மாற்றத்தை உருவாக்கும். இயேசு ஊருக்குள் வந்த அன்று எத்தனை நோயுற்றவர்கள் நலம் பெற்றதால் மகிழ்ந்திருப்பார்கள். 


No comments:

Post a Comment