Sunday, February 19, 2023

நான் நம்புகிறேன்

இன்றைய இறைமொழி 

திங்கள், 20 பிப்ரவரி 2023

ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் வாரம்

சீஞா 1:1-10. மாற் 9:14-29.

நான் நம்புகிறேன்

'ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது' என்று சொல்லி ஞானத்தின் முதலும் தோற்றுவாயுமான கடவுளை நோக்கித் தம் வாசகர்களை அழைக்கிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர். 

நற்செய்தி வாசகத்தில் இயேசு இளவல் ஒருவரிடமிருந்து தீய ஆவியை ஓட்டுகிறார். தோற்றமாற்ற நிகழ்வுக்குப் பின்னர் இயேசு மூன்று திருத்தூதர்களுடன் சமவெளிக்கு இறங்கி வருகிறார் இயேசு. இதற்கிடையில் கீழே இருந்த திருத்தூதர்களிடம் தந்தை ஒருவர் பேய் பிடித்த தன் மகனை அழைத்துக்கொண்டு வருகிறார். திருத்தூதர்களால் பேயை ஓட்ட இயலவில்லை. இதற்கிடையில் கூட்டம் கூடுகிறது. தந்தை செய்வதறியாது நிற்கிறார். அங்கே வருகிற இயேசுவிடம் தந்தை தன் மகனுக்காக முறையிடுகிறார். 

'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார் தந்தை.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு. 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று சரணடைகிறார் தந்தை. 

இயேசுவின் பரிவை நாடி நிற்கிறார் தந்தை. நம்பிக்கையை நோக்கி அவரை அழைக்கிறார் இயேசு.

பரிவும் நம்பிக்கையும் சந்திக்கும் புள்ளியில் வல்ல செயல் நடக்கிறது.

'எங்களால் பேயை ஓட்ட ஏன் இயலவில்லை?' என்னும் திருத்தூதர்களின் கேள்விக்கு, 'இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது' என்று சொல்லி, இறைவேண்டலுக்கு அவர்களை அழைக்கிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடம் என்ன?

ஞானம், பரிவு, நம்பிக்கை, இறைவேண்டல் ஆகியவை நாம் விரும்பித் தேடுபவையாக இருக்கட்டும்.


No comments:

Post a Comment