Monday, September 30, 2019

உமக்கு விருப்பமா?

இன்றைய (1 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 9:51-56)

உமக்கு விருப்பமா?

நாம் இக்கட்டான சூழல் ஒன்றில் இருக்கும்போது அங்கே இறைவனின் குரல் நமக்குக் கேட்காதா என்று நாம் ஏங்குவதுண்டு. அப்படி ஒரு குரல் கேட்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில், அது இறைவனின் குரலா? அல்லது நம்முடைய குரலா? அல்லது எதிரியின் குரலா? என்ற கேள்வி எழும்பி நம் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. சில நேரங்களில் நாம் நம்முடைய குரலையே கடவுளின் குரல் என நினைத்துக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் நோக்கிப் பயணம் செல்கிறார்கள். கலிலேயாவில் இவர்களுடைய பயணம் தொடங்குகிறது. வழியில் இருப்பது சமாரியா. இவர்கள் எருசலேம் நோக்கிச் செல்வதால் சமாரியர்கள் இயேசுவையும் சீடர்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். உடனடியாக திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் கோபம் கொள்கின்றனர். 'ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?' என்று கேள்வி எழுப்புகின்றனர். தங்களுடைய கோபமே இயேசுவின் கோபம் என நினைத்துக்கொள்கின்றனர். அல்லது தாங்கள் சமாரியர்களை அழிக்க நினைப்பதை இயேசுவின் விருப்பம் போலக் காட்டுகின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள்:

ஒன்று, என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என் மனநிலை எப்படி இருக்கிறது?

இரண்டு, என்னுடைய விருப்பத்தை கடவுளின் விருப்பம் போல நினைத்து, என்னைப் போல அவரும் எண்ண வேண்டும் என்று அடம் பிடிக்கிறேனா?

'என்னை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்ற உணர்வு பெரும்பாலும் நம் அனைவருக்கும் இருக்கிறது. உறவினர் வீட்டில், பொதுவிடத்தில், விருந்தில் நம்மை யாராவது கண்டுகொள்ளவில்லை என்றால், நமக்குக் கோபம் வருகிறது. சில நேரங்களில் இந்தக் கோபத்தை நாம் வெளிப்படுத்திவிடுகிறோம். சில நேரங்களில் அடக்கிக் கொள்கிறோம். இது ஏன்?

காரணம், ரொம்ப எளிது: 'ஈகோ' அல்லது 'தான்மை.'

ஈகோ வரக் காரணம் நான் என்னுடைய அடையாளத்தை என்னில் காணாமல் எனக்கு வெளியில் காண்பதுதான்.

எடுத்துக்காட்டாக, நான் என்னுடைய வாசல் வழியாக வெளியே செல்கிறேன். வாயிலில் இருக்கும் வாட்ச்மேன் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். வழக்கமாக அப்படிச் செய்பவர் அன்றைய தினம் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். என்னைக் கண்டவுடன் கையை மட்டும் தூக்கிவிட்டு தொடர்ந்து எழுத ஆரம்பிக்கிறார். உடனே எனக்குக் கோபம் வருகிறது. 'அவர் என்னை மதிக்கவில்லை' என்று புலம்புகிறேன். இப்படிப் புலம்பினால் நான் என்னுடைய மரியாதையை அவருடைய செயலில் இணைத்துப் பார்க்கிறேனே தவிர, என்னில் நான் காண்பதில்லை.

என்னுடைய தன்மதிப்பு என்பது என்னைச் சார்ந்து இருக்க வேண்டும். இயேசுவின் மதிப்பு அவரிடம் மட்டுமே இருந்தது. ஆகையால்தான், அவர் தன்னைப் புகழ்ந்தவர்களையும் இகழ்ந்தவர்களையும் ஒன்றுபோலப் பார்த்தார்.

அடுத்ததாக, கடவுளுடைய குரலை நாம் எப்படித் தனியாகக் கண்டுபிடிப்பது?

அடுத்தவரின் வாழ்வைத் தேடினால் அது கடவுளின் குரல். அடுத்தவரின் வாழ்வைத் தேடுவோர் நடுவில்தான் கடவுள் குடிகொள்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் (காண். செக் 8:20-23) நமக்குச் சொல்கிறது.

இன்று நாம் வானிலிருந்து ரோஜா மலர்களை அள்ளித் தெளிக்கும் சின்ன ராணி குழந்தை தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தன் அடையாளத்தைத் தனக்கு வெளியில் தேடாத உள்ளமே குழந்தை உள்ளம். அந்தக் குழந்தை உள்ளம் எளிதில் இறைவனின் குரலைக் கேட்கும், இறைவனின் விருப்பத்தைக் கண்டுகொள்ளும்.

1 comment:

  1. ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் வரும் பதிவு.என்னை ஒருவர் கண்டுகொள்ள வேண்டுமென எண்ணும். எண்ணத்தில் இருப்பதே ஈகோ.மற்றபடி என்னை அனைவரும். ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவரால் மட்டுமே அவ்வாறு நினைக்க முடியும்.இயேசுவின் மதிப்பு அவரிடம் மட்டுமே இருந்ததால்தான் தன்னைப் புகழ்ந்தவர்களையும்,இகழ்ந்தவர்களையும் ஒன்றுபோல பார்க்க முடிந்தது. இந்த உண்மையைத் தன் வாழ்வில் பிரதிபலித்த குழந்தை தெரசாவும் கொண்டிருந்தது, தன் அடையாளத்தை தனக்கு வெளியே தேடாத குழந்தை உள்ளமே! இத்தகைய குழந்தை உள்ளத்தை இறைவனிடமிருந்து நமக்கும் பெற்றுத்தர அந்த ‘ சின்ன ராணியிடம்’ நாமும் வரம் கேட்போம்.இடைவெளியோடு வந்திடினும், இயல்பு மாறாமல் வந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete