Tuesday, October 1, 2019

அருள்கரம்

இன்றைய (02 அக்டோபர் 2019) நற்செய்தி வாசகம் (லூக் 9:57-62)

அருள்கரம்

இன்று நாம் காவல் தூதர்கள் திருநாளைக் கொண்டாடுகிறோம். சில வாசகக் குறிப்பேடுகளில் காவல் தூதர்கள் திருநாளுக்குரிய வாசகங்கள் இருக்கின்றன.

நம்முடைய சிந்தனைக்கு இன்றைய வழக்கமான வாசகங்களை எடுத்துக்கொள்வோம்.

தான் சமாரியர்களால் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன்னைப் பின்பற்றி வருபவர்கள் கொண்டிருக்க வேண்டிய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு.

சீடத்துவத்தின் மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு:

அ. 'நரிகளுக்கு பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை'

நாம் வசிக்கும் வீடு நமக்கு ஒரு முக்கியமான இடம். இந்த உலகத்தில் எங்கு நமக்கு இடம் இல்லை என்றாலும் நம்முடைய வீட்டில் நமக்கு இடம் உண்டு. பசியாய், தாகமாய் இருந்தாலும் வீட்டில் நாம் தங்கிக்கொள்ள முடியும். யாருடைய துணையும் இல்லாமல் வீட்டிற்குள் நம்மால் இருந்துகொள்ள முடியும். ஆக, வீடு நமக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், இயேசு தனக்கு உறுதித்தன்மையும், பாதுகாப்பு உணர்வும் இல்லை என்றும், தன்னுடைய சீடர்களும் அதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். ஏன்? வீடு நமக்கு எந்த அளவுக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறதோ அந்த அளவுக்கு நம்மைச் சிறைபிடித்தும் விடுகிறது. சிலர் தாங்கள் வீடு கட்டி விட்டதால் அந்த இடத்தை விட்டு புலம் பெயர வாய்ப்பு கிடைத்தாலும் புலம் பெயராமல் வீட்டை மட்டுமே பற்றிக்கொண்டு இருந்துவிடுகின்றனர். சீடராக இருப்பவர் வாழ்வின் உறுதியற்ற தன்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் அனுபவிப்பவராக இருக்க வேண்டும்.

ஆ. 'வருகிறேன். ஆனால், அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்'

இரண்டு அர்ப்பணங்கள் ஆபத்தானவை. இந்த நபர் இரண்டு மான்களை ஒரே நேரத்தில் விரட்ட முனைகின்றார். சீடத்துவத்திற்கான அர்ப்பணம் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.

இ. 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் கூடாது'

கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் உழுதலை தாமதமாக்கும், கோணல் மாணலாக்கும். அதைவிட, உழுபவரின் காலில் ஏர் பாய்ந்து கால் புண்படும். புளிப்பு மாவு போன்றது இது. புளிப்பு மாவை கலந்து மாவில் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அது தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லும். புளிக்காரத்தை நிறுத்தவோ, அதை திரும்ப சரி செய்யவோ இயலாது.

உறுதியற்ற தன்மையை ஏற்றல், முழுமையான அர்ப்பணம் தருதல், முன்னோக்கிச் செல்தல் - இவை மூன்றும் சீடத்துவத்திற்கான பண்புகள்.

இப்பண்புகளை இன்றைய முதல் வாசகத்தில் (காண். நெகே 2:1-8) நெகேமியா என்ற கதைமாந்தரில் காண்கின்றோம்.

நெகேமியா பற்றியும், அவருடைய மேலாண்மையியல் பற்றியும் இன்று நிறையப்பேர் பேசுகின்றனர். இவர் ஓர் ஆச்சர்யமான நபர். மன்னருக்குத் திராட்சை இரசம் ஊற்றிக்கொடுக்கும் பணியாளராக இருக்கும் இவர், எருசலேம் நகரையே கட்டி எழுப்பும் அளவுக்குப் பெரியவர் ஆகின்றார். இவருடைய இலக்குத் தெளிவு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. மேலும், தான் இருக்கும் இடத்தில் தன் பயத்தை விடுத்து தன் மன்னனிடம் பேசியதும், அதற்காக செபம் செய்ததும், மன்னனை வைத்து நிறைய காரியங்கள் சாதித்துக்கொண்டதும் அழகு.

'கடவுளின் அருள்கரம் என்னோடு இருந்ததால் மன்னரும் அவ்வாறே கொடுத்தார்' என மனம் திறக்கிறார் நெகேமியா.

கடவுளின் அருள்கரம் இருந்தால் எல்லாம் தானாக நடக்கும். அருள்கரம் விலகினால் நாம் முட்டி மோதினாலும் ஒன்றும் நடக்காது.

கடவுளின் அருள்கரத்தைப் பற்றிக்கொள்வதே சீடத்துவம்.


1 comment:

  1. தந்தை சீடத்துவம் பற்றி அடிக்கடி பதிவு செய்திருப்பினும் இன்று சீடத்துவத்தின் பண்புகளாக உறுதியற்ற தனமையை ஏற்றலையும், முழுமையான அர்ப்பணம் தருதலையும், முன்னோக்கிச் செல்வதையும் குறிப்பிடுகிறார்.கூடுதல் செய்தியாக வரும் நெகேமியா பற்றிய குறிப்பு இன்னும் ஒரு கூடுதல் டானிக்காக அமைகிறது. “கடவுளின் அருள்கரத்தைப் பற்றிக்கொள்வதே சீடத்துவம்” என ஒற்றை வரிக்குள் இன்றைய செய்திகளை அடக்குகிறார்.இன்றைக்கு நாம் திருவிழா எடுக்கும் காவல்தூதர்களும் இறைவன் கரத்தின் நீட்சிதானே! அவரின் கரம் பற்றுவதும் இறைவன் கரம் பற்றுவது போல்தானே! இறைகரம் பற்றுவோம்; எதையும் சாதிப்போம்.தந்தைக்கு நன்றிகளும் ! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete