Wednesday, April 25, 2018

பெரியவர் அல்ல

நாளைய (26 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 13:16-20)

பெரியவர் அல்ல

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு பணியாளர் தலைவர் உறவைப் பற்றிப் பேசுகின்றார்.

'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.
தூது அனுப்பப்பட்டவரும் அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல'

இது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த சொலவடைதான். ஆனால், இதைத் தொடர்ந்து இயேசு சொல்வதுபதான் வித்தியாசமாக இருக்கிறது: 'இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.'

பேறுபெற்றவர்கள் என்று வாழ்வதற்கு இயேசு சொல்லும் வழி ஒரு சிறந்த மேலாண்மை தத்துவமாக இருக்கிறது. எப்படி? தலைவர் தானே முடிவு செய்கின்றார். பணியாளர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். தலைவர் கொடுக்கும் நிலையில் இருக்கிறார். பணியாளர் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். தலைவர் தான் நினைத்ததை செய்ய முடியும். ஆனால், பணியாளரோ தலைவர் நினைப்பதை மட்டுமே செய்ய முடியும்.

இதே போலவே, தூது அனுப்பப்பட்டவரும். இயேசுவின் சமகாலத்தில் தூது அனுப்புதல் மிக முக்கியமான வேலை. இன்றைய குறுந்தகவல், மின்னஞ்சல், கடிதம், கூரியர் என அனைத்து வேலைகளையும் செய்தவர்கள் தூது அனுப்பப்பட்டவர்களே. இவர்களின் வேலை அனுப்பியவரின் செய்தியை அடுத்த பக்கம் இருப்பவருக்கு அப்படியே அறிவிப்பது. இப்படி செல்பவர் தூது அனுப்பியவரை விட சிறியவரே. ஏனெனில் இவர் அலைகிறார். அவர் அலைக்கழிக்கிறார். இவர் ஓடுகிறார். அவர் ஒரே இடத்தில் இருக்கிறார்.

சில நேரங்களில் தலைவரைப் போல அல்லது தலைவரை விட தான் பெரியவர் என்று நினைக்கும் பணியாளர் தன் எல்லையை மீறுகிறார்.

எல்லை மீறாதவர் பேறுபெற்றவர் என்கிறார். மேலும், இங்கே எல்லை மீறுபவராக மறைமுகமாக சொல்லப்படுபவர் யூதாசுதான்.

நிற்க.

ஆனால், ஜெயா-சசிகலா நிகழ்வை எடுத்துக்கொள்வோம். ஜெயா தலைவி. சசிகலா பணியாளர். இங்கே பணியாளர் தலைவியை விட பெரியவர் ஆகவில்லையா?


1 comment:

  1. " தலைவர் கொடுக்கும் நிலையிலும்,பணியாளர் பெற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கின்றனர்; தலைவர் தான் நினைத்ததைச் செய்கிறார்.பணியாளரோ தலைவன் நினைப்பதை மட்டுமே செய்ய முடியும்"... தலைவனையும்,பணியாளனையும் வேறுபடுத்திக் காட்டும் விஷயங்கள்.இதையறிந்து செயல்படுபவர்கள் பேறுபெற்றவரகள்.ஆனால் இன்றைய நடைமுறையில் இது ஒத்துவருமா? சாத்தியமா... கேள்விக்குறி.தலைவனுக்குக் கனிவும்,பணியாளனுக்குப் பணிவும் இருக்கும் வரைதான் " பேறுபெற்றவர்" எனும் வார்த்தைக்கே அர்த்தம் இருக்க முடியும்.ஆனால் இன்று நாமும்,நம்மைச்சுற்றி இருப்பவர்களுமே எல்லை மீறும் இலக்கணப்பிழைகள் தான். நாம் பேறுபெற்றவர்களா இல்லை எல்லை மீறுபவர்களா?.... யோசிப்போம்.யூதாசு...எல்லை மீறியுள்ளார்... எனும் தந்தையின் கூற்று சரிதான். ஆனால் சசிகலா?! எல்லை மீறும் தலைவிக்கு எல்லை மீறும் பணியாள்.சரிதானே!

    ReplyDelete