Monday, April 23, 2018

அர்ப்பண விழா

நாளைய (24 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவா 10:22-30)

அர்ப்பண விழா

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா மற்றும் நெகேமியா அவர்கள் தலைமையில் கட்டிய இரண்டாம் எருசலேம் ஆலயத்தின் அர்ப்பண விழா ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறப்பட்டது. இந்த நாளில் எல்லா யூதர்களும் எருசலேமில் கூடி வருவதுண்டு. அப்படி வந்தபோது நடந்த ஒரு நிகழ்வையே நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கவிருக்கின்றோம்.

குளிர்காலமாய் இருந்ததால் இயேசு சாலமோன் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தார் என யோவான் பதிவு செய்கின்றார். குளிர்காலத்தில் வழக்கமாக மண்டபத்தில்கூட யாரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் மண்டபம் என்பது மேற்கூரையை மட்டும் கொண்ட திறந்தவெளி. குளிர் மற்றும் குளிர்காற்றின் தாக்கம் மண்டபத்தில் அதிகமாகவே இருக்கும். மேலும், குளிரை சமாளிப்பதற்காக இயேசு ஒருவேளை நடந்துகொண்டே உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க முயன்றிருக்கலாம் என்றும் புரிந்துகொள்ளலாம்.

அவரிடம் வருகின்ற யூதர்கள், 'இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்' என்று கேட்கின்றனர்.

ஆனால் இயேசு அப்படிச் சொல்ல மறுக்கிறார். மாறாக, 'நம்பிக்கை' என்ற தலைப்பில் அவர்களோடு உரையாட ஆரம்பிக்கின்றார். ஏனெனில், ஒருவேளை 'நான்தான் மெசியா' என்று இயேசு சொல்லியிருந்தால் இவர்கள் கண்டிப்பாக அவரை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் இப்படி நிறையப்பேர் சொல்லிக்கொண்டு திரிந்தனர்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் அவரை மெசியா என ஏற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைப் பயணம். இந்த உள்ளொளிப்பயணத்தின் இறுதியில்தான் ஒருவர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த நம்பிக்கை என்பது அவரின் குரலைக் கேட்டு அவரை அடையாளம் காண்பதிலேயே அடங்கியுள்ளது.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில் பல நேரங்களில் கேள்விக்கான விடைகள் நம் உள்ளொளிப்பயணத்தில்தான் கிடைக்கின்றன.

ஆலயத்தை அர்ப்பணித்து விழா எடுத்தவர்கள் ஆலயத்தின் பிதாமகனாம் இயேசுவுக்குத் தங்களை அர்ப்பணம் செய்யத் தயங்கினர்.

1 comment:

  1. நம் வாழ்க்கைப்பயணத்தில் நம்மைக் கடந்து வரும் அனைவரையுமே நம்மவராக நம் மனம் ஏற்றுக்கொள்வதில்லை.ஆனால் ஒரு சிலரை அப்படியே அவர்களின் குறை,நிறைகளோடு ஏற்றுக்கொள்கிறோம்.ஏனெனில் அவர்கள் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கை.இதைத்தான் "உள்ளொளிப்பயணம்" என்கிறார் தந்தை.கடவுளுடனான இப்படிப்பட்ட பயணங்களில் தான் நம்முடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதெனில் அந்தப்பயணத்தை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்பது நாமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்தப்பயணத்தில் நாம் எப்படிப்பயணிக்கிறோம்? ஆலயத்தின் பிதாமகன் இயேசுவை மறந்து ஆலயத்துக்கு விழா எடுத்தவர்கள் போலவா? யோசிக்க வேண்டிய விஷயம்.. யோசிப்போம்!
    ஒரு குருவானவருக்கும்,அவரின் குருத்துவத்திற்கும் அழகு சேர்க்கும் 'அந்த' உடையில் தந்தையின் முகத்தில் அருள் நிரம்பி வழிவதைக் காண முடிகிறது.வாழ்த்துக்கள்!!! ஆனாலும் திருச்சிக்குத் தந்தை கொடுத்திருக்கும் 'மரியாதை' கொஞ்சம் ஓவர்தான்!

    ReplyDelete