Wednesday, April 18, 2018

பிலிப்பும் திருநங்கையும்

நாளைய (19 ஏப்ரல் 2018) முதல் வாசகம் (திப 8:26-40)

பிலிப்பும் திருநங்கையும்

'நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகின்றதா?'

'யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் புரிந்து கொள்ள முடியும்?'

(காண் திப 8:26-40)

திருத்தூதர் பணிகளில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் ஒன்றுதான் 'பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும்' (8:26-40).

திருத்தூதர் பிலிப்பு செய்த பற்றிய ஒரே குறிப்பு இதுவே. இவர் திருத்தொண்டர் பிலிப்பாகவும் இருக்கலாம் என்று சொல்கின்றனர்.

எத்தியோப்பிய அரசி கந்தகி நிதியமைச்சராக இருக்கிறார் திருநங்கை ஒருவர். 'கந்தகி' என்பது எத்தியோப்பிய அரசியின் பெயர் என்று சொல்வதைவிட, பட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 'கந்தகி' என்ற வார்த்தைக்கு 'அரசியான அம்மா' என்ற பொருளும் உண்டு. 'அலி,' 'அண்ணகர்,' 'திருநங்கை' என்று நாம் எந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தினாலும் பொருள் ஒன்றுதான். அரசர்கள் தங்கள் மனைவியரின் 'நலன்' கருதி, தங்கள் அரண்மனையில் தங்கி பணிபுரியும் அமைச்சர்களாக 'திருநங்கைகளை' மட்டுமே நியமித்தார்கள். நம் கதைமாந்தர் அரசியின் நிதியமைச்சர். ஆக, நன்றாகப் படித்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். படித்தவர் மட்டுமல்ல. பக்திமானும் கூட. பல நேரங்களில் படிப்பும், பக்தியும் இணைந்து செல்வதில்லை. எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு வீடு திரும்புகிறார். எருசலேம் சென்று வணங்கக்கூடியவர் ஒரு யூதராகத் தான் இருக்க வேண்டும். மேலும், அவரின் கைகளில் இருப்பதும் யூத இறைவாக்கு நூலின் ஒரு பகுதியே - எசாயா 53:7-8.

இவர் இப்படி வாசித்துக்கொண்டிருக்கும் நேரம், இவரின் தேரை ஒட்டி ஓடுமாறு பிலிப்புவுக்குக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். தேரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு பிலிப்பு ஆற்றல் பெற்றிருக்கின்றார். மேலும், அந்த ஓட்டத்திலும் தேரில் இருப்பவர் என்ன வாசிக்கிறார் என்பதைக் கேட்கவும் செய்கின்றார். திருநங்கை அமைச்சரே இந்த இறைவார்த்தையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் தேரில் உடன் வந்த அவரின் செயலரோ, அல்லது குருவோ, அல்லது லேவியரோ வாசித்து இவர் கேட்டிருக்கலாம்.

'நீர் வாசிப்பது உமக்குப் புரிகிறதா?' என பிலிப்பு கேட்க, 'யாராவது விளக்கிச் சொன்னால்தானப்பா புரியும்' என்கிறார் திருநங்கை அமைச்சர். அத்தோடு, பிலிப்பையும் தன் தேரில் ஏற்றிக்கொள்கின்றார். தொடர்ந்து அந்த இறைவாக்குப் பகுதி பற்றி நிறைய கேள்விகள் கேட்கின்றார் அமைச்சர். பிலிப்பு அவர் வாசித்த இறைவார்த்தையில் தொடங்கி, இயேசுவைப் பற்றி எல்லாவற்றையும் அறிவிக்கின்றார்.

வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடம் வருகின்றது.

'இதோ, தண்ணீர் உள்ளதே. நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா?' எனக் கேட்கின்றார் அமைச்சர்.

பிலிப்புவும், அமைச்சரும் தண்ணீருக்குள் இறங்குகின்றனர்.

பிலிப்பு அமைச்சருக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார்.

ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் ஆண்டவர் பிலிப்பை அப்படியே 'தலைமுடியைப் பிடித்து' தூக்கிச் சென்று விடுகிறார். அமைச்சர் மகிழ்ச்சியுடன் தன் வீடு திரும்புகிறார்.

திருநங்கை-அமைச்சர் எனக்குச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. 'குழந்தை உள்ளம்.' தான் ஒரு நிதியமைச்சர் என்றாலும், தனக்குத் தெரியாததும் இந்த உலகில் உண்டு என்பதை உணர்ந்து, 'எனக்கு இது புரியவில்லையே?' என்று மறைநூலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

ஆ. 'உடனடி மனமாற்றம்.' 'அப்படியா? நாளைக்குப் பார்க்கலாம்!' என்று தன் மனமாற்றத்தைத் தள்ளிப்போடாமல், தண்ணீரைக் கண்ட இடத்திலேயே திருமுழுக்குப் பெறுத் துடிக்கின்றார் அமைச்சர். யூதராக வீட்டை விட்டு புறப்பட்டவர், கிறிஸ்தவராக வீடு திரும்புகின்றார். என்னே ஒரு தலைகீழ் மாற்றம்! அவரின் தேரின் வேகம் போலவே இருக்கின்றது அவரின் மனமாற்றமும்.

இ. 'மகிழ்ச்சி.' இதுதான் அவரின் இறுதி உள்ளுணர்வு. மனமாற்றத்தின் வெளி அடையாளம் மகிழ்ச்சி. இயேசுவை அறிந்து கொண்டவர்கள் கொண்டிருக்க வேண்டிய ஒரே உணர்வு இதுதான்: மகிழ்ச்சி.

பிலிப்பு எனக்குச் சொல்லும் மூன்று பாடங்கள்:

அ. 'தயார் நிலை.' பிலிப்பு இருப்பது எருசலேம். அமைச்சரின் தேர் ஓடிக்கொண்டிருப்பது அதற்கு நேரெதிர் திசையின் ஒரு பாலைவனப்பாதை. 'நீ அங்கே போ!' என்று ஆண்டவர் சொன்னவுடன் எழுந்து ஓடுகின்றார் பிலிப்பு. ஆண்டவர் நேரடியாகப் பேசியிருப்பாரா? அல்லது பிலிப்பு ஆண்டவரின் குரலை தன் உள்ளத்தில் கேட்டிருப்பாரா? எந்த மன தைரியத்தில் அவ்வளவு தூரம் ஓடியிருப்பார்?

ஆ. 'கையிலிருப்பதை வைத்து தொடங்குவது.' நற்செய்தி அறிவிப்பதற்கான மிக எளிய மந்திரத்தை பிலிப்பு கடைப்பிடிக்கின்றார். அமைச்சர் வாசித்துக் கொண்டிருந்த இறைவார்த்தையை புள்ளியாகக் வைத்து, அதில் இயேசு என்ற கோலத்தை வரைகின்றார். 'அத மூடி வைங்க! நான் உங்களுக்கு இதைவிட பெரிய ஆளைப் பற்றிச் சொல்கிறேன்!' என்று அவர் தொடங்கியிருந்தால், 'தம்பி, நீ தேரை விட்டு கீழே இறங்கு!' எனச் சொல்லியிருப்பார் அமைச்சர்.

இ. 'முடியைப் பிடித்து தூக்கிச் செல்கிறார் ஆண்டவர்.' முதல் பகுதியில் பிலிப்பு ஓடினார். இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவரைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். இந்த வார்த்தையில் மிகப் பெரிய பொருள் இருக்கிறது. அதாவது, நிதியமைச்சர் திருமுழுக்கு பெறத் தயாராகிவிட்டார் என்று நினைத்ததும் பிலிப்புவின் உள்ளத்தில் நிறைய கற்பனை எண்ணங்கள் ஓடியிருக்கும்: 'ஆகா! எவ்வளவு பெரிய சாதனை இது! நிதியமைச்சரையே நான் மனம் மாற்றியிருக்கிறேன்! பேதுருவும், யோவானும் சும்மா எருசேலம் நகரத்துக்குள்ளேயே இருந்து சாதாரண மக்களை மனம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அவங்க எல்லாம் சுஜூபி பாய்ஸ். கிணற்றுத் தவளைகள்! வெளியே வந்து நாலு ஜனங்கள பார்த்தாதான நல்லா இருக்கும்! நாளைக்கு போய் நான் இதைப் பற்றி அவர்களிடம் சொல்லணும்! திருமுழுக்கு கொடுத்துவிட்டு, இவர் வண்டியிலேயே இவர் ஊருக்குப் போய், இவர் அரசியையும் மனம் மாற்றணும். அரசியை மனம் மாற்றிவிட்டால் மக்களையும் மனம் மாற்றிவிடலாம். மேலும் அரசியை வைத்து நிறைய காரியங்கள் சாதிக்கலாம். நம்ம மக்களுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்கலாம்!' - இப்படி நிறைய எண்ணங்கள் ஓடியிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றார் கடவுள். 'அவரின் வழிகள் நம் வழிகள் அல்ல' என்பது இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 'முடியைப் பிடித்து' அலேக்காகத் தூக்கிக் கொண்டு போகிறார் கடவுள். அருள்பணி நிலையில் இப்படி ஒரு உடனடி மகிழ்ச்சி வந்துவிட்டால் உடனே தேக்கநிலை வந்துவிடும். 'நான் செய்வதுதான் சரி' என்ற மனநிலையும், தற்பெருமையும் உடன் ஒட்டிக்கொள்ளும். இந்த நேரத்தில் கடவுள் என் தலையைப் பிடித்து தூக்கிச் செல்வதே சால்பு.

இறுதியாக, இறைவனின் நற்செய்தி முதலில் திருநங்கை ஒருவருக்கே அறிவிக்கப்படுகிறது என்பதையும் நாம் இங்கே அடிக்கோடிட வேண்டும்.


1 comment:

  1. " இறைவனின் நற்செய்தி முதலில் திருநங்கை ஒருவருக்கே அறிவிக்கப்படுகிறது" என்ற தந்தையின் இறுதி வரி நம் சிந்தனையைத் தூண்டிவிடுவது மட்டுமல்ல; "உங்கள் எண்ணங்கள் என் எண்ணங்கள் அல்ல" என்ற விவிலிய வரிகளுக்கும் பொருள் தருகிறது.தனக்குத் தெரியாததை ஒத்துக்கொள்ளும் எளிமை படைத்த திருநங்கை அமைச்சரும்,அமைச்சர் வாசித்துக்கொண்டிருந்ததைப் புள்ளியாக வைத்து அதில் இயேசு எனும் கோலத்தை வரையும் பிலிப்புவும் என் மனம் கவர்ந்தவர்கள்.தந்தை கோடிட்டுக் காட்டும் பல விஷயங்களில் ஒன்றையேனும் கடைபிடித்தால் நாமும் இறை மனிதரே!
    இன்று தன் குருத்துவத்திருப்பொழிவின் 9 ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும்,அவருக்குத்தேவையான உடல்,உள்ள சுகம் தந்து தன் கண்ணின் கருவிழியாய்க் காத்திடவும் வேண்டுகிறேன்.தந்தைக்கு என் செபங்களோடு கூடிய இனிய வணக்கங்களும்! வாழ்த்துக்களும்!!

    ReplyDelete