Friday, January 19, 2018

மதிமயங்கி இருக்கிறார்

நாளைய (20 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:20-21)

மதிமயங்கி இருக்கிறார்

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் இயேசுவைப் பார்க்க நமக்கு பரிதாபமாகவும், பாவமாகவும் இருக்கிறது.

அவருக்கு சாப்பிடக்கூட நேரமில்லை. அந்த அளவுக்கு வீட்டில் மக்கள் கூட்டம்.

இயேசுவை 'மதிமயங்கி இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை, 'இயேசு தனக்கு வெளியே இருக்கிறார்' என்பதுதான்.


எனக்கு வெளியே இருக்கும்போது நான் மதிமயங்குகிறேன்.காதலில் இருப்பவர்களை மதிமயங்கியவர்கள் என்று சொல்ல நான் கேட்டதுண்டு. இதன் லாஜிக் ரொம்ப சிம்பிள்: 'ஒருவர் தனக்கு வெளியே சென்றுவிடுகின்றார். அடுத்தவர் உள்ளே வந்து குட்டி சேர் போட்டு அமர்ந்து கொள்கின்றார்.' இயேசுவைப் பொறுத்தவரையில் அவரது பணிதான் அவரின் முழு எண்ணத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

'அவர் மதிமயங்கி இருக்கிறார்' என மக்கள் சொல்லக் கேட்டு அவரை அழைத்துக்கொண்டு போக அவருடைய உறவினர்கள் அவரிடம் வருகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டும்:

அ. மக்களின் பார்வை
நாம என்னதான் மாங்கு மாங்கு என்று மக்களுக்காக பாடுபட்டு உழைத்தாலும், நம் நேரம், ஆற்றல், பணம் என அனைத்தையும் தியாகம் செய்தாலும், மக்கள் நம்மை 'மதிமயங்கியவர்,' 'லூசு,' 'முட்டாள்' என பார்க்க வாய்ப்புண்டு. இயேசுவுக்கு இதுதான் நிகழ்கிறது. அவரின் பணிகள், குணமாக்குதல்கள் அனைத்தும் அவரைப் பொறுத்தவரையில் அது இறையரசுப் பணி. ஆனால் அடுத்தவரின் பார்வைக்கு அது 'மதிமயங்குதல்.' ஆக, நாம் நம்மைப் பற்றியும், நாம் செய்யும் செயல்களைப் பற்றியும் மிகவும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஆ. உறவினர்களின் பார்வை

இயேசுவின் உறவினர்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே இயேசுவின் அன்னையும் வந்தாரா என்பது நமக்குத் தெரியவில்லை. உறவினர்களின் வருகை இயேசுவைக் காப்பாற்றுவதற்காக அமைந்ததா, அல்லது மக்கள் சொல்வதை ஆமோதிப்பதாக அமைகிறதா என்பதும் நமக்குத் தெரியவில்லை. 'நீங்களுமா என்னை அப்படி நினைத்துவிட்டீர்கள்?' என்று இயேசுவே தம் உறவினர்களிடம் கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.



1 comment:

  1. " நீங்களுமா என்னை அப்படி நினைத்து விட்டீர்கள்?" இயேசுவே தம் உறவினர்களிடம் கேட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எத்தனை நிர்க்கதியான நிலமை ஒரு மனிதனுக்கு? தன் இறுதித் துளிக்குறுதியையும் இந்த மானுடம் உய்ய அளித்தவருக்கு கிடைத்த பட்டம் " மதி மயங்கியவர்." " நாம் என்னதான் மாங்கு மாங்கு என்று மக்களுக்காக பாடுபட்டு உழைத்தாலும், நம் நேரம்,ஆற்றல் ,பணம் என அனைத்தையும் தியாகம் செய்தாலும் மக்கள் நம்மை 'மதிமயங்கியவர்', 'லூசு', 'முட்டாள்' எனப்பார்க்க வாய்ப்புண்டு" என்கிறார் தந்தை. இதைக்குறித்துப் பெரிதாக கவலைப்படவோ,அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை என்றும் பரிந்துரைக்கிறார். ஏனெனில் இப்படிப்பட்ட பட்டங்களை ஏற்கனவே ஒருவர் பெற்று நமக்கு பாதை வகுத்து விட்டார் என்ற நினைப்பே நம்மை ஆற்றுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.எளிய வார்த்தைகளில் பெரிய விஷயத்தைக் கூறிய தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete