Wednesday, January 17, 2018

பிடிவாத உள்ளம்

நாளைய (17 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:1-6)

பிடிவாத உள்ளம்

ஓய்வுநாள் பற்றிய மற்றொரு சர்ச்சைய நாளைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

தொழுகைக்கூடத்தில் நுழைகிறார் இயேசு. சூம்பிய கை உடைய ஒருவரை அங்கே காண்கின்றார். அது ஓய்வுநாள். இவர் குணப்படுத்துவாரா? மாட்டாரா? எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம்? என்று அவரை நோட்டம் விடுகின்றனர் 'சிலர்.'

ஓரமாக நின்றிருந்த கைசூம்பியவரை, 'எழுந்து நில்லும்!'  என்று விளிம்பை மையப்படுத்துகிறார் இயேசு.

இதுவரை மையத்தில் இருப்பவர்கள் எல்லாம் விளிம்பிற்குச் செல்லவே, அல்லது எல்லா விளிம்புகளும் மையத்தில் இடம் பிடிக்கவே இப்படிச் செய்தார் இயேசு.

அவர்கள் குணப்படுத்துவாரா? மாட்டாரா? என்று கேள்விகளை தங்கள் உள்ளங்களில் கேட்டுக்கொண்டிருக்க, இயேசுவோ கேள்விகளை வெளிப்படையாகக் கேட்கிறார்: 'குணப்படுத்துதல் சரியா? இல்லையா? ஓய்வுநாளில் உயிரை அழிப்பதா? எடுப்பதா?'

இந்தக் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.

அவர்களின் பிடிவாத உள்ளத்தை நினைத்து வருந்துகின்ற இயேசு நலமற்ற அவருக்கு நலம் தருகிறார்.

'பிடிவாத உள்ளம்' என்பது 'உறைந்த உள்ளம்.'

உறைநிலையில் உள்ள ஒரு பொருள் எந்த நிலையில் இருந்ததோ அப்படியே தங்கிவிடுகிறது. நேப்பிள்ஸ் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை ஒன்று வெடித்துச் சிதற, போம்ப்பே என்ற நகரை லாவா குழம்பு நிரப்புகிறது. அந்த நேரத்தில் யார் யார் எப்படி இருந்தார்களோ அப்படியே உறைந்து போகின்றனர். தொட்டிலில் தூங்கும் குழந்தை, பாத்திரம் தூக்கும் பெண், வாள் ஏந்திய வீரன் என எண்ணற்ற லாவா சிற்பங்கள் இன்னும் அங்கே காணக்கிடக்கின்றன. ஆக, அவரவர் இருக்கின்ற நிலையிலேயே உறைந்துவிடும்போது அவர்களின் வளர்ச்சிக்கு அங்கே இடம் இல்லை.

இயேசுவின் வருத்தம் அவர்கள் தன் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்பதில் அல்ல. மாறாக, இப்படி வளர்ச்சி தடைப்பட்டு, உறைந்துபோயிருக்கின்றார்களே என்பதில்தான் உள்ளது.

இன்று என் உள்ளம் உறைந்து போயிருக்கின்றதா?

உறைந்து போன நான் எவற்றில் எல்லாம் பிடிவாதமாக இருக்கிறேன்?

1 comment:

  1. சூம்பிய கைக்குரியவரை குணப்படுத்த விரும்பினார் இயேசு என்பதை 'இதுவரை மையத்தில் இருந்தவரை விளிம்பிற்கு அனுப்பவும்,விளிம்பில் நின்றவரை மையத்துக்கு அனுப்பவும் அவர் சித்தம் கொண்டார்" என்று தந்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம் புதிது; அழகு. நாமே விரும்பினால் ஒழிய உறைந்து போன எந்த உள்ளத்தையும் இறைவனாலும் கூட உருக வைக்க இயலாது என்பது இன்றையப் பதிவு எனக்குச் சொல்லும் பாடம்.தவிர்க்க முடியாத சில சமயங்களில் பிடிவாதத்தால் உறைந்து போகும் உள்ளத்தை இயேசுவின் அருள் எனும் சூரியக்கதிர்கள் மட்டுமே உருக வைக்க முடியும்....அதற்கு நானும் தயார் நிலையில் இருப்பின்.சில விஷயங்களை,சூழ்நிலைகளைப் புரிய வைக்க தந்தை தன் அறிவுக்களஞ்சியத்தில் சேர்த்து வைத்து, அவற்றைத் தேவைப்படும்போது அவிழ்த்து விடும் விஷயங்கள் ...... இன்றைய "நேப்பிள்ஸ் நகரத்தின் எரிமலைக்குழம்பு" ஒரு உதாரணம்....என்னைப்போல சாமான்யனின் புத்திக்கு அப்பாற்பட்டது; என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.இன்னும் கூடத் தந்தை பல உயரங்களைத்தொட ஆண்டவன் அருள் புரியத் தங்களை வாழ்த்துகிறேன்.!!!

    ReplyDelete