Wednesday, January 17, 2018

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய (18 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:7-12)

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது: 'நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்'

இந்த வரியை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இன்னும் ஆச்சர்யம் மேலோங்குகிறது.

இந்தப் பக்கம் கடல். அந்தப் பக்கம் மக்கள் கூட்டம். நடுவில் இயேசு.

கூட்டத்தில் நீங்கள் நெரிசல் பட்டதுண்டா? கூட்டநெரிசல் எல்லாம் நம்மை அறியாமல் நிகழும் நெரிசல்கள். மேலும், நெரிப்பவர்கள் நம்மை வேண்டுமென்றே அவ்வாறு செய்வதில்லை. ஆனால், இயேசு அனுபவிக்கும் நெரிசல் சற்று வித்தியாசமானது. அவரையே மையமாக வைத்து அவர்மேல் வந்து விழுகிறார்கள் மக்கள்.

நிற்க.

கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு நடந்ததாக என் நண்பர் பகிர்ந்து கொண்டார்.

கணவன், மனைவி, மகள். இவர்கள்தாம் போட்டியாளர்கள். போட்டி என்னவென்றால், கணவன் மற்றும் மகளை ஒரு அறையில் வைத்துவிட்டு மனைவியை மற்ற நான்கு பெண்களோடு இன்னொரு அறையில் வைப்பர். அவர்களின் கைகள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பக்கம் உள்ள கணவன் மற்றும் மகளின் கண்களைக் கட்டிவிடுவர். இந்தக் கணவர் அந்த நான்கு கைகளையும் பிடித்துப் பார்த்து தன் மனைவியின் கை எது என்பதை சரியாகச் சொல்ல வேண்டும். அதே போல மகளும் தன் அம்மாவின் கை எது எனச் சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் இறுதியில் என்ன வியப்பு என்றால், கணவனால் தன் மனைவி யாரென்று சரியாகச் சொல்லவில்லை. (அவருக்கு வீட்டில் அன்றிரவு என்ன நேர்ந்ததோ அது நமக்குத் தெரியாது!) ஆனால் குழந்தை சரியாகச் சொல்லிவிட்டது.

'நீ எப்படி பாப்பா சரியாகச் சொன்னாய்?' என்று கேட்டதற்கு அந்த மகள், 'அது எங்க அம்மா கை. அவ்வளவுதான்' என்றது சற்று புன்னகையோடு.

இதுதான் உணர்வு.

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். இந்த தோல் வழியாகவே நாம் உணர்கிறோம். நம்மை உணர்த்துகிறோம்.

இயேசு பலரை குணமாக்கியதால் அவரைத் தொட்டு அவரின் உணர்வைத் தங்கள் உணர்வாக்கக் துடிக்கின்றனர் மக்கள். நம் அனைவரிடமும் இந்த தொடுவுணர்வு, குணமாக்கும் உணர்வு இருக்கின்றது. நம் நெருங்கிய வட்டத்திற்குள் நம்மால் ஒருவர் மற்றவரின் வாழ்வைத் தொட்டு மாற்ற முடிகிறதென்றால் அது எல்லாரையும் நோக்கியிருப்பதும் சாத்தியம்தானே!

இயேசுவைத் தொட வேண்டுமென்று அவர்மேல் விழுந்துகொண்டிருந்த கூட்டத்தினர் ஒருவரைப் போல இயேசுவுக்கான என் தேடல் இருக்கிறதா?
நான் இன்று நலம் பெற வேண்டுமா?
இந்த நலம் பெறுதலுக்காக நான் அவரை நெரித்துக்கொண்டு தேடத் தயாரா?
அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதே போதும்! என நினைக்கிறேனா?


1 comment:

  1. சற்று முன்னர்தான் லொயோலா டெக்னிக்கல் இன்ஸ்டிடுயூட்டில் திருப்பலி கண்டு வந்தேன்.யாரோ புதுகுருவானவர்.தமிழருக்கு அந்நிய முகம்.ஆனால் அசந்து போனேன் அவரின் மறையுரை கேட்டு. இதே...இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு அவரளித்த விளக்கம் என்னை மிகவும் தொட்டது. திருப்பலி முடிந்து வீட்டிற்கு வந்தால் தந்தையின் பதிவு என்னை வேறுவிதமாக அசத்துகிறது. விஷயம் ஒன்றுதான்.ஆனால் அதைப்புரிந்து கொள்வதில்; வாழ்வாக்குவதில் எத்தனை வகைகள்! தந்தையின் விஷயத்திற்கு வருவோம்." இயேசுவிடமிருந்த அந்த தொடு உணர்வு, குணமாக்கும் உணர்வு நம்மிடமும் இருக்கிறது; நம்மாலும் மற்றவரைக் குணமாக்க முடியும்" என்பதில் எனக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதை செயலாக்கியும் உணர்ந்திருக்கிறேன்."நம் நெருங்கிய வட்டத்திற்குள் நம்மால் ஒருவர் மற்றவரின் வாழ்வைத்தொட்டு மாற்ற முடிகிறதென்றால் அது எல்லோரையும் நோக்கியிருப்பதும் சாத்தியம் தானே!" என்கிறார் தந்தை.உண்மையிலும் உண்மையே! என் வாழ்வை மாற்றக்கூடிய,எனக்கு நலம் தரக்கூடிய ' தொடல்' எங்கே இருப்பினும் அதைத்தேடி எந்த ஒரு நெரிசலையும் சகித்துக் கொண்டு போகலாம் தப்பில்லை. தந்தைக்கு ஒரு வார்த்தை. தொலைக்காட்சி நிகழ்வு பற்றிக் கூறினீர்கள்..... என்னதான் அந்நியோன்னியத் தம்பதிகள் என்றாலும் ஒரு கணவன்- மனைவி உறவு என்பது வேறு; தாய்- மகள் உறவு என்பது வேறு.ஒரு மகள் என்பவள் தாயின் இரத்தம், சதை,உடல்,உணர்வு எல்லாமே.ஆனால் கணவன் அப்படியா? " இல்லை" எனப்பளிச்செனப் பதில் வரும் எந்தப் பெண்ணிடமிருந்தும்.அதனால் அம்மா யாரெனக் குழந்தை கண்டு பிடித்ததும், மனைவி யாரெனக் கணவன் விழி பிதுங்கி நிற்றதும் மிகச்சரியே! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்ன தந்தையே! என் கூற்று சரிதானே!

    ReplyDelete