Thursday, January 11, 2018

நீர் விரும்பினால்

நாளைய (11 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 1:40-45)

நீர் விரும்பினால்

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!'

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்!'

'ஆனால் அவர் இந்தச் செய்தியை எல்லாரிடமும் சொன்னார்!'

(காண்க மாற்கு 1:40-45)

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று அழைக்கப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என்னும் மூன்று நற்செய்தியாளர்களும் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவை நாடி நலம் நாடும் நிகழ்வை எழுதுகின்றனர்.

'மிரகிள் ஸ்டோரிஸ்' என்று சொல்லப்படும் 'அற்புதங்கள் அல்லது அறிகுறிகள்' இயேசுவின் வாழ்விலும் அவரது பணியிலும் மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு நலம் கொடுக்க முடியுமா? நலம் கொடுப்பவர் யார்? மருத்துவரா? போதகரா? கடவுளா? என நாம் எதிர் கேள்விகளையும் எழுப்பலாம். 'நலம் கொடுப்பது' என்பது இயேசு மட்டும் செய்த நிகழ்வு அல்ல. இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பலரும் நலம் கொடுக்கும் கொடை பெற்றிருந்ததாக வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

கடைசியில் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை தான்!

ஒரு சில செபக்கூட்டங்களின் இறுதியில் போதகர்கள் இத்தனை பேர் இந்த வியாதியிலிருந்து இன்று விடுதலை பெற்றிருக்கிறார்கள். இத்தனை பேரின் உடல் வாதை, உள்ள வாதை ஆறுகின்றது என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவருக்கே அப்படி குணமானதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நிரூபிக்க முடியுமா என்றும் தெரியவில்லை! இது எப்படி நடக்கிறது என்றும் புரியவில்லை.

ஆக, இந்த மூளை சார்ந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு நாளைய நற்செய்தியை பார்க்க விழைவோம்.

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். லேவியர் நூலின் பரிந்துரைப்படி தொழுநோயாளர்கள் இருக்க வேண்டிய இடம் ஊருக்கு வெளியே. இயேசுவைச் சந்திக்கிறார் என்றால் ஒன்று இயேசு ஊருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும். அல்லது இயேசுவைச் சுற்றி யாரும் இல்லாத நேரத்தில் இயேசுவை அணுகி வந்திருக்க வேண்டும். இயேசுவின் பணிவாழ்வில் அவர் தனியாக இருந்தது என்னவோ செபிக்கும் வேளையில் மட்டும் தான். எது எப்படியோ, நம்ம நண்பர் இயேசுவைத் தனியாகப் பார்த்துவிட்டார். சந்தித்தும் விட்டார்.

'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்!'

நம் நண்பரின் அப்பீல் கொஞ்சம் யோசிச்க வைக்கிறது. 'என் நோயைக் குணமாக்குங்க!' என்று கேட்டிருக்கலாம். அல்லது, 'என் மேல் இரக்கம் வையும்!' என்று கேட்டிருக்கலாம்.

இரண்டு மோடல் வெர்ப்களை பயன்படுத்துகின்றார் நண்பர்: 'டு யு வில்? இஃப் யு வில், யு கேன்.'

இறையியலில் தியோடிசி என்று ஒரு ஏரியா உண்டு. அதாவது கடவுளுக்காக வாதிடுவது. அங்கே கடவுளைப் பற்றி வைக்கப்படும் கேள்வி இதுதான்: கடவுள் எல்லாம் வல்லவராயிருந்தால் எதற்காக அவரால் தீமையை அழிக்க முடியவில்லை? கடவுள் நிறைவான அன்பானவராயிருந்தால் எதற்காக தீமையை நமக்குத் தர விரும்புகிறார்? முதல் கேள்வியில் 'கேன்', இரண்டாவது கேள்வியில் 'வில்' அடங்கியுள்ளது.

'விருப்பம்' என்பதற்காக மாற்கு பயன்படுத்தும் 'தெலோ' என்ற சொல் அவருடைய நற்செய்தியில் மூன்று இடங்களில் உள்ளது: ஒன்று, தொழுநோயாளர் இயேசுவிடம் கேட்பது, இரண்டு, ஏரோது நடனமாடிய சலோமியிடம் கேட்பது, மூன்று, இயேசு கெத்சமேனித் தோட்டத்தில் தன் தந்தையிடம் கேட்பது.

இயேசுவின் வார்த்தை தொழுநோயாளர் சொன்ன வார்த்தைகளின் மறு வாக்கிய அமைப்பாக இல்லை. 'நான் விரும்புகிறேன். என்னால் உன்னைக் குணமாக்க முடியும்!' என்று சொல்லாமல், 'விரும்புகிறேன்! குணமாகு!' என்கிறார்.

இயேசுவின் செயலும் இங்கே கவனிக்கத்தக்கது:

பரிவு கொண்டு, கையை நீட்டி, தொட்டு என்று மூன்று வார்த்தைகளில் வர்ணிக்கின்றார் மாற்கு.

உள்ளத்தில் தொடரும் இரக்கம், கை வழியே நீண்டு நம் நண்பரைத் தொடுகிறது.

'கையை நீட்டுதல்' என்பதற்கு விவிலியத்தில் 'தன் வலிமையைக் காட்டுதல்' என்பது பொருள். 'உம்மால் முடியும்' என்ற நம் நண்பரின் வார்த்தையை வெறும் கையை நீட்டி உறுதி செய்கின்றார் இயேசு. மோசே கையை நீட்ட செங்கடல் பிரிகின்றது. யோசுவா கையை நீட்ட போரில் வெற்றி கிடைக்கிறது. இயேசு கையை நீட்ட தொழுநோய் நீங்குகிறது.

'நீ இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே!' என்று நண்பரிடம் சொல்கின்றார் இயேசு. கிரேக்கத்தில் இந்த இடத்தில் கட்டளையைக் காட்டும் 'இம்பரடிவ்' பயன்படுத்தப்படவில்லை. மாறாக, சப்ஜங்டிவ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, இந்த சப்ஜங்டிவை வைத்தே வாசகர் சொல்லி விடலாம். நம் நண்பர் இயேசுவின் கட்டளையை மீறப்போகின்றார் என்று.

கடவுள் கூட தன்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார் போல. ஆனா, இன்னைக்கு நாம தான் கடவுளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கடவுள் என்ற கோட்பாடு 'கான்செப்ட்', 'இன்ஸ்டிடியூசன்' என்ற இரண்டில் அடங்கியுள்ளது.  தனிப்பட்ட நம்பிக்கை என்பது கான்செப்ட். ஆனால், நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை என்பது நிறுவனம். சில நேரங்களில் நிறுவனம் தன் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்காக, 'கான்செப்டில்' கூட மாற்றம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இன்று ஒரு மதத்திற்கும், மற்ற மதத்திற்கும் சண்டை என்றாலோ, அல்லது ஒரே மதத்திற்குள் இருக்கும் குழுக்களுக்குள் சண்டை என்றாலோ அங்கே 'கான்செப்ட்கள்' மோதிக்கொள்வதில்லை. நிறுவனங்களே மோதிக் கொள்கின்றன.

'வேண்டாம்!' என்று சொன்னாதான் நம்ம ஆட்கள் செய்வாங்க என்பதுமாதிரி, நம்ம நண்பரும் போய் எல்லாரிடமும் சொல்லி விடுகின்றார்.

கடைசியில் வருவதுதான் டுவிஸ்ட்.

அதாவது தொழுநோயாளராய் இருந்த நண்பர் கடைசியில் இயேசுவைத் தொழுநோயாளராக்கிவிட்டார். அதாவது, ஊருக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டார்.

எல்லாருக்கும் தன்னைப் பற்றி தெரிந்தால் நல்லதுதானே. எதற்காக இயேசு இந்த எளிதான பப்ளிசிட்டியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை? எல்லாரும் நலம் பெற்றால் நல்லது தானே! எல்லாருக்கும் அவர் நலம் கொடுத்திருக்கலாமே?

கடவுளைப் போல இந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை!

1 comment:

  1. விவிலியத்தை மட்டுமின்றி, தன் பன்மொழிப் புலமையையும் உள்ளடக்கிய தந்தையின் பதிவின் 'அத்தனையையும்' புரிந்து கொள்ள என் சிறிய மூளைக்கு சக்தி இல்லை.எனவே எனக்கு நெருக்கமான பகுதிகளை மட்டுமே இங்கு சிலாகிக்க விழைகிறேன்."நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" எனக்கூறிய தொழுநோயாளியிடம் " நான் விரும்புகிறேன்.என்னால் உன்னை குணமாக்க முடியும் என்று சொல்லாமல் " விரும்புகிறேன்; குணமாகு! " என்கிறார் இயேசு. "பரிவு கொண்டு,கையை நீட்டி, தொட்டு" எனும் மூன்று வார்த்தைகள் இயேசுவின் உள்ளத்தில் சுரக்கும் இரக்கத்தையும்,அது கைவழியே நீண்டு தேவையில் இருப்போரைச் சென்றடைகிறது என்பதையும் காட்டுகிறது என்பது தந்தையின் கூற்று.இன்றையப் பதிவின் மையப்பொருளும்,என்னைக்கவர்ந்த பகுதியும் இதுவே! இயேசுவின் கட்டளையை மீறி நலமடைந்தவர் அவரைப்பற்றி ஊருக்குள் செய்தியைப்பரப்பிவிட்டதால் இயேசுவால் ஊருக்குள் நுழைய முடியவில்லை என்பதை வெளிப்படுத்த " தொழுநோயாளராய் இருந்த நண்பர் கடைசியில் இயேசுவைத் மொழுநோயாளராக்கிவிட்டார்" என்பது தந்தையின் 'டச்.'இறுதி வரிகள் ' இயேசு ஏன் ப்ப்ளிசிட்டியை விரும்பவில்லை? எல்லோரும் குணமடைவதில் அவருக்கு உடன்பாடு இல்லையா?'.அவருக்கே வெளிச்சம்.ஆனாலும் இந்தப்பதிவில் பளிச்செனத்தெரியும் ' அந்த இரக்கம் சுரக்கும் இதயத்தையும்,அதன் விளைவாக நீளும் அந்தக் கைகளையும் நாம் நினைவு கொண்டால் நாமும் கூட மறு இயேசுவாகலாம். அழகானதொரு பதிவு....ஆழமான கருத்துக்கள்.... அங்கங்கே தந்தையின் முத்திரைகள்.ஒரு 'பளிச்' பதிவு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete