Thursday, January 18, 2018

தாம் விரும்பியவர்களை

நாளைய (19 சனவரி 2018) நற்செய்தி (மாற்கு 3:13-19)

தாம் விரும்பியவர்களை

'இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்.
அவர்களும் அவரிடம் வந்தார்கள்.'

நாளைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் தொடக்கவரிகள் இவை. இயேசு பன்னிருவரை அழைக்கும் நிகழ்வில் அதிகமாக கண்டுகொள்ளாமல் விடப்படும் வரிகள் இவை.

சீடர்களை அழைக்குமுன் இயேசு மலைமேல் ஏறுகின்றார். 'மலைமேல் ஏறுதல்' என்பது இயேசுவைப் பொறுத்த வரையில் 'தனிமையில் இருத்தல்,' 'செபித்தல்,' 'தந்தையோடு ஒன்றித்திருத்தல்.' மேலும், உருவகமாகப் பார்த்தோமென்றால் மலைமேல் ஏறும்போது ஒருவரின் பார்வை விசாலப்படுகிறது. நாம் கீழே நின்று மற்றவர்களைப் பார்ப்பதற்கும், மொட்டை மாடியில் நின்று பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. கீழிருந்து பார்க்கும்போது ஒருவரின் பகுதிதான் தெரிகின்றது. ஆனால் மேலிருந்து பார்க்கும்போது ஏறக்குறைய முழுவதும் தெரிகிறது.

இயேசுவின் அழைப்பு இரண்டு நிலைகளில் இருக்கின்றது: 'அவர் அழைக்கின்றார்.' 'அவர்கள் வருகிறார்கள்.' ஆக, அழைப்பும், பதில் தருதலும் அடுத்தடுத்த தொடர்நிகழ்வாக இருக்கிறது. இயேசுவின் அழைப்பிற்கு யாரும் 'இல்லை' என்ற பதில் தராதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் அவர்கள் 'இல்லை' என்று சொல்லவில்லை? இயேசுவின் அழைப்பிற்காக தவம் கிடந்ததுபோல உடனே 'ஆம்' என்று அவர்பின் வந்துவிடுகின்றனர்.

இயேசு 'தாம் விரும்பியவர்களை' அழைக்கின்றார்.

இறையழைப்பிற்கான ஒரே தகுதி இதுதான்: 'அவரின் விருப்பம்.'

'அருள்பணியாளராக இருந்து என்ன சாதித்தோம்?' என்று ஒருநாள் அருள்தந்தை விமி சார்லி அவர்களைக் கேட்டேன்.
'அருள்பணியாளராக இருப்பதே சாதனைதான்' என்று புன்முறுவலோடு சொன்னார்.

அதாவது, அவரின் கண்கள் நம்மேல் படுவதுதான் அழைத்தல்.

இந்த அழைப்பிற்காக ஒருவர் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம். அழைக்கப்பட்ட 12 பேரும் - யூதாசு உட்பட - மிகக் கொடூரமான முறையில் தங்கள் உயிரைக் கையளிக்கின்றனர். இந்த விலை தெரிந்துதான் இவர்கள் முன்வந்தார்களா? என்பது அடுத்த ஆச்சர்யம்.

நாளைய தினம் அவரின் அழைத்தலுக்கு 'ஆம்' என்று சொன்ன அனைத்து அருள்நிலை இனியவர்களுக்காகவும் வேண்டுவோம்.

அதே வேளையில், அவரின் பணிக்கான அழைப்பு இன்று அரிதாகிவரும் காலத்தில் அவரின் குரலைக் கேட்கின்ற, அந்தக் குரலுக்கு பதில் தருகின்ற நிறைய இளவல்கள் தூண்டப்படவேண்டும் எனவும் மன்றாடுவோம்.

1 comment:

  1. 'இயேசுவின் அழைப்பை' எடுத்தியம்பும் ஒரு பதிவு. அவர் மலைமேல் ஏறித்தனிமையில் இறைவேண்டல் செய்தே தான் விரும்பியவர்களைத் தன் சீடர்களாக அழைக்கிறார் என்கிறது இன்றையப்பதிவு."அவரின் கண்கள் இவர்கள் மேல் படுவது இவர்கள் செய்த பாக்கியம்" எனினும் அந்த அழைத்தலுக்காக இவர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம் என்கிறார் தந்தை.உண்மையே! இந்த அருள்பணியாளர்கள் நம் மத்தியில் வாழ்ந்தாலும் நம்மைச்சாராதவர்கள். "அவர் திருப்பொழிவு செய்தவர் மேல் கைகளை வைக்காதீர்கள்" என்கிறது இன்றைய முதல் வாசகம். அருள்பணியாளராக இருப்பதே சாதனையாகிப்போன இந்நாட்களில், அழைத்தலே அரிதாகிப்போன இந்த காலகட்டத்தில் இந்த அருள்பணியாளர்கள் மேல் கைவைக்காதது மட்டுமின்றி இவர்களைப் பாதுகாப்பதையும் நம் கடமையெனக் கொள்வோம். அவர்களுக்காக இறை வேண்டலும்,நம்மால் இயன்ற உதவிகளையும் செய்வோம்; அவர்களைத் தட்டிக்கொடுப்போம்; இத்தனையும் செய்ய முடியவில்லை எனினும் கூடப்பரவாயில்லை...அவர்கள் மீது சேற்றை அள்ளிப்பூசுவதைத் தடுப்போம்இன்னும் பல இளவல்கள் அவரின் குரலால் தூண்டப்பட வேண்டுமென செபிப்போம்.அதே வேளையில் நம்/ என்னைப் போன்றவர்களும் அழைக்கப்பட்டவர்கள் தான் என்பதை உணருவோம்; அதற்காக நன்றி சொல்வோம்; பெருமை கொள்வோம்." அவரின்" அழைத்தலுக்கு "ஆம்" என்று சொன்ன அனைத்து அருள்நிலை இனியவர்களுக்கும் என் செபங்களையும்,வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்! அன்புடன்....

    ReplyDelete