Friday, February 28, 2014

ராஜா வந்திருக்கிறார்

'ராஜா வர்றாரு போல. எல்லாத் தயாரிப்பும் ரொம்ப வேகமா நடக்குது!'

இந்த வார்த்தைகளை இன்று என் அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது கேட்டேன். போனை வைத்து விட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு திடீரென ஆறாம் வகுப்பில் படித்த 'ராஜா வந்திருக்கிறார்' கதை நினைவிற்கு வந்தது.

'ராஜா வந்திருக்கிறார்' சிறுகதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதை எழுதியவர் கு. அழகிரிசாமி. இவரின் மற்றொரு அழகிய படைப்பு 'அன்பளிப்பு'. நேரமிருந்தால் நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள்.

என் நினைவிற்கு எட்டியதை இப்போது கதையாகவே பகிர்கிறேன். கதாபாத்திரங்கள் நினைவில்லை. ஆகையால் நாமே பெயர் கொடுத்துக்கொள்வோம். சரியா?

ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இரண்டு குழந்தைகள்: இனியா மற்றும் பாலு. இனியாவின் குடும்பம் அந்தக் கிராமத்தில் ரொம்ப வறுமையான குடும்பம். பாலுவின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். இனியாவின் குடும்பச் சூழலை பாலு தினமும் கிண்டல் செய்வான். இருவரும் அந்த ஊரில் இருந்த ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர். 'எந்தக் கலர் பாவாடைக்கு எந்தக் கலர் சட்டை போடவேண்டும்' என்று கூட இனியாவிற்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மேட்சாகப் போட வசதியில்லாதவள் அவள். இனியா அவள் வீட்டிற்கு ஒரே பொண்ணு. அவளுக்குத் தேவையானதை அவர்கள் பெற்றோர்கள் தங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொடுத்தனர். தீபாவளி நெருங்கி வர ஆரம்பித்தது. 'எனக்கு புது டிரஸ் வேணும்' என்று இப்பவே அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள்.

பாலுவிற்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ராஜா. பாலுவின் குடும்பத்தின் மூத்த மகன் இவனே. பண்ணையார் சொத்தெல்லாம் ராஜாவுக்கே என்று சொன்னது ஊர். படிப்பு அவ்வளவாக வராது. இருந்தாலும் அப்படி இப்படி முயற்சி செய்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று விட்டான். 'என்ன வேலை செய்கிறான்?' என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு தீபாவளிக்கு வருவதாகச் சொன்னதை அடுத்த பண்ணையார் குடும்பமே களை கட்டியது.

தீபாவளி நெருங்கிக் கொண்டே இருந்தது. பாலு தன் தந்தை வாங்கிய போலீஸ் டிரசையும், பளபளக்கும் ஜிப்பாவையும் பள்ளிக் கூடத்தில் காட்டி மகிழ்ந்தான். இனியாவிடமும் காட்டி அவளை வம்பிழுத்தான். அழுது கொண்டே வந்த இனியா தனக்கும் இந்தத் தீபாவளிக்கு போலீஸ் டிரஸ் வேணும் என வீட்டில் அடம் பிடித்தாள். அவளின் அப்பாவும் எப்படியோ போராடி மிச்சம் பிடித்து அவள் விருப்பப்படியே போலீஸ் டிரஸ் வாங்கிவிட்டார்.

தீபாவளிக்கு முந்தைய தினம்.

ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. பெண்கள் ஒருவர் மற்றவரிடம் தாங்கள் வாங்கிய புடவைகளைக் காட்டி மகிழ்ந்தனர். ஒரு சில சிறுவர்கள் இப்போதே வெடி வெடிக்கத் தொடங்கி விட்டனர். இரண்டு சிறுவர்கள் தாங்கள் வாங்கிய துப்பாக்கியை வைத்து திருடன் போலீஸ் விளையாட ஆரம்பித்து விட்டனர். மேள தாளத்துடன் ராஜா வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஊரின் முகப்பிலிருந்தே வரவேற்பு கொடுக்கப்பட்டது. நல்ல வாட்ட சாட்டமாக ராஜா மாதிரியே வந்திறங்கினார் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாலுவுக்கு நிறைய ஸ்வீட்ஸ் வாங்கி வந்தார் ராஜா.

இரவானது. தன் புதிய போலீஸ் டிரசை மீண்டும் ஒருமுறை தடவிப் பார்த்துவிட்டு தூங்கப் போனாள் இனியா. விடிந்ததும் அதை அணிந்து கொண்டு பாலு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

விடிந்தது. வீட்டைக் கூட்டி தண்ணீர் தெளிப்பதற்காக வெளியே வந்தாள் இனியாவின் அம்மா. விடிந்தும் விடியாமல் இருந்தது. 'அடித்து விரட்டினாலும் போக மாட்டேன்' என்பது போல மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது இருள். வீட்டிற்கு வெளியே யாரோ நிற்பது போல இருந்தது. 'யாரது?' என்று கேட்டாள். பதில் வரவில்லை. அருகில் சென்று பார்த்தாள். ஒரு சிறுவன் வெற்றுடம்போடு, இப்பவோ அப்பவோ என்று கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த கால்சட்டையோடு நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் சென்றவுடன் ஏதோ ஒரு கெட்ட வாடை. 'யாரப்பா நீ?' என்று கேட்டாள் அம்மா. பதில் இல்லை. சிறுவன் ஏதோ முனகினான். 'எங்கிருந்து வருகிறாய்?' என்றாள். அதற்கும் ஏதோ முனகினான். அவனை விரட்டவும் மனதில்லை. உள்ளே அழைக்கவும் தயக்கமாய் இருந்தது.

நன்றாக விடிந்து விட்டது. இனியா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே நின்ற சிறுவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இனியாவின் அம்மா இட்டிலி மாவைக் கொப்பரையில் ஊற்றிக் கொண்டிருந்தாள். மாற்றுப் பாத்திரம் எடுக்க வெளியே வரும்போது அந்தச் சிறுவன் இன்னும் அங்கே நின்று கொண்டிருந்தான். அவளின் தாயுள்ளம் கேட்கவில்லை. உடனே அவனை வீட்டிற்குள் அழைத்தாள். அவனின் தலையில் நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைத்து சீயக்காய் வைத்து நன்றாகத் தேய்த்தாள். சிறுவன் அழுதான். இருந்தாலும் விடவில்லை. அவனை நன்றாகக் குளிக்க வைத்து தன் வீட்டில் இருந்த ஒரு துண்டை எடுத்து அவனைத் துவட்டினாள். துவட்டியதும் தான் நினைத்தாள். இப்போ இவன் என்ன டிரஸ் போடுவான்? தன் கணவரின் உடைகள் இவனுக்குப் பெரியதாக இருக்கும். சட்டென்று இனியாளின் போலீஸ் டிரஸ் நினைவிற்கு வந்தது. அதை எடுத்து அணிவித்தாள். ஒரு தட்டில் மூன்று இட்டிலிகளும் வைத்துக் கொடுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் இனியாவும் எழுந்து விட்டாள். தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு யார் இருக்கிறார் யார் இல்லை என்றே தெரியவில்லை. நேராகக் குளிக்கப் போனாள். அவளின் அம்மாவை அழைத்தாள். அம்மாவும் குளிக்க வைத்து வீட்டிற்குள் அழைத்துப் போனாள். அப்போதுதான் இனியா அந்தச் சிறுவனைக் கவனித்தாள். அவன் போலீஸ் டிரஸ் அணிந்ததைப் பார்த்து விட்டு, 'இரு...நானும் போய் அணிந்து வருகிறேன்' என உள்ளே போனாள். அப்போதுதான் அவள் அம்மா சொன்னாள். 'உன் டிரசைத் தான் இவன் போட்டிருக்கிறான்!' இனியாவிற்கு வந்தது பாருங்கள் கோபம். விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அம்மா. 'அவனுக்கு யாருமேயில்லை செல்லம். உனக்கு அண்ணன் மாதிரி வந்திருக்கிறான். அவன் போட்டுக் கொள்ளட்டும். உனக்கு வேறு வாங்குவோம்' என்று ஒரு வழியாகச் சமாதானப்படுத்தினாள். இனியாவின் இந்தக் கலவரத்தினால் பயந்தே விட்டான் சிறுவன்.

கையிலிருந்த இனிப்பை அவனுக்குக் கொடுத்து உன் பெயர் என்ன? என்று கேட்டாள் இனியா. 'ராஜா' என்றான் சிறுவன்.

மதிய வேளை பாலு இனியாவின் வீட்டிற்கு ஒரு சாக்லேட் பெட்டியோடு வந்தான்.

சாக்லேட்டைக் கொடுத்து விட்டு அவளைக் கிள்ளினான்.

'எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்!' என்றான் பாலு.

'எங்க வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார்' என்றாள் இனியா.


2 comments:

  1. Anonymous3/01/2014

    அழகான ஆரம்பம்.அழகான முடிவு.நம்மைத் தேடி, நம் வீடு தேடி வரும் யாரையும் " ராஜாக்களாக" நினைத்தோமெனில்,அவர்களையும் மனிதர்களாக நினைத்து உபசரித்தோமெனில் நம் வீட்டிலும் எந்நாளும் " தீபாவளி" தான்.

    ReplyDelete