Thursday, February 13, 2014

வாழ்க்கைப் புத்தகம்

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு ஃபெராரி கார் என்றால் மிகவும் பிடிக்கும். எந்நேரமும் அந்தக் கார் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான். தன் நண்பர்களோடு பேசும் போதும் அதைப் பற்றியே பேசுவான். அந்த காரைப் பற்றி எங்கே செய்தி இருந்தாலும் அதை வெட்டி எடுத்துக் கொள்வான். தன் அறை முழுவதும் அந்தக் காரின் ஃபோட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடிக்கும் தறுவாயில் பெரிய தொழிலதிபராய் விளங்கிய தன் தந்தையிடம் ஃபெராரி வாங்கித் தருமாறு கேட்கிறான். 'நீ கல்லூரிப் படிப்பை முடிக்கும் இறுதி நாளில் உனக்கு கார் நிச்சயம்!' என்கிறார். கல்லூரிப் படிப்பின் இறுதி நாள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிந்து வீடு திரும்புகிறான். வீட்டின் கேட்டைத் திறந்தவுடன் கார் நிற்கும் என நினைக்கிறான். ஆனால் ஏமாற்றம். கார் நிறுத்தத்தில் சென்று பார்க்கிறான். அங்கும் ஃபெராரி இல்லை. கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் வீட்டிற்குள் செல்கிறான். அவனை ஆரத்தழுவும் தந்தை ஒரு பார்சலை அவனிடம் தருகின்றார். வேகமாகத் திறக்கிறான் மாணவன். உள்ளே ஒரு புதிய டைரி. கோபம் அதிகமாகிவிட, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்! நான் இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறான். தனியாக வீடு எடுத்துத் தங்கி, நல்லதொரு வேலை, திருமணம் என்று செட்டில் ஆகி விடுகிறான். தன் சம்பளத்தில் தன் கனவுக் காரையும் வாங்கி விடுகிறான். ஒரு நாள் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு: 'உங்கள் தந்தை இறந்து விட்டார்!' கோபத்தில் தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்ல மறுத்து விடுகிறான். சில வருடங்கள் கழித்து தந்தைதான் இல்லையே, தான் இருந்த வீட்டையாவது பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துப் புறப்படுகிறான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்த போது, தன் தந்தையின் அறைக்குள் நுழைகிறான். அங்கே அவன் கல்லூரி பட்டவிழா அன்று தந்தை பரிசளித்த டைரியும் இருக்கின்றது. அதில் என்னதான் இருக்கும்? என எண்ணி அதைத் திறக்கிறான். உள்ளேயிருந்து ஒரு கார் சாவி கீழே விழுகின்றது. அந்த டைரிக்குள் கார் வாங்கியதற்கான பில்லும் இருக்கின்றது. அந்த பில்லில் இருந்த ஃபோன் நம்பரைத் தொடர்பு கொண்டு அந்தக் கார் கம்பெனியை விசாரிக்கிறான். 12 வருடங்களாக அந்தக் கார் டெலிவரி எடுக்கப்படாமல் நிற்பதாகச் சொல்கின்றனர் அவர்கள். ஒரு நிமிடம் நின்று அன்று டைரியைத் திறந்து பார்த்திருந்தால் இவ்வளவு மனவருத்தம் வந்திருக்காதே என்ற நினைவுடன் தன் வீடு திரும்புகிறான்.

பல நேரங்களில் நாம் வாழ்க்கை என்ற புத்தகத்தை திறந்தே பார்ப்பதில்லை தானே. திறந்து பார்க்காமல் வாழ்க்கை புரியவில்லை என்று புலம்புவது தகுமோ?

2 comments:

  1. Anonymous2/13/2014

    நூற்றுக்கு நூறு உண்மை.எங்கும் வேகம் எதிலும் வேகம் என்று இருக்கும் இந்த கால கட்டத்தில் யாருக்கும் சிறிது நேரம் எடுத்து தங்கள் வாழ்க்கையைப்பற்றி படிக்கவோ அதைப் புரட்டிப் பார்க்கவோ நேரம் இல்லைதான்.காரணம் நம்முடைய முக்கியத்துவங்கள் ( priorities) மாறிவிட்டன.ஒரு வேளை அது சாத்தியமானால்....எப்படி இருக்கும் நம் வாழ்க்கை...?? தங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  2. Anonymous2/14/2014

    ஆம் உண்மை தான், நம்மிடம் இருக்கும் பல புத்தகங்களை சில நேரங்களில் இட நெருக்கடி, அல்லது போனது வரவில்லை என்ற... வாழ்வு எனும் புத்தகம் திறந்தே கிடக்கிறது, பிறகென்ன புத்தகம்?

    ReplyDelete