Wednesday, February 19, 2014

அன்னாவின் கண்ணீர்

ஆண்டவர் அன்னாவை மலடியாக்கியிருந்ததால் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.

(1 சாமுவேல் 1:6)

இன்றும் நாம் அன்னாவைச் சந்திப்போம். பெனின்னாவிடம் இருக்கும் ஒன்று அன்னாவிடம் இல்லை - குழந்தை பாக்கியம். அந்த வெறுமை அவரின் கண்ணீருக்குக் காரணமாகின்றது. அன்னாவின் வலுவின்மையைத் தெரிந்து கொண்ட பெனின்னா அதையே தன் ஆயுதமாக எடுத்து அவரை அச்சுறுத்துகின்றாள்.

நாம் ஒவ்வொருவருமே கடவுளால் தனிப்பட்ட முறையில் படைக்கப்பட்டவர்கள். நமக்கென்று திறமைகள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதே போல அனைவருக்கும் திறமைகள், ஆற்றல்கள் இருக்கின்றன. பிறரிடம் இருக்கும் திறமைகள் நம்மிடம் இருப்பதில்லை. இந்த 'வெறுமை' நம்மில் ஒப்பீட்டைத் தூண்டுகிறது. அந்த ஒப்பீடு தாழ்வு மனப்பான்மையாக மாறி விடுகிறது. நம்மிடம் உள்ள நிறைகள் மறைந்து குறைகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. இந்த நிலையில் நம் திறமைகளையும், ஆற்றல்களையும் கூட நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

'ஒரு ரோஜாவை மல்லிகையோடு அல்ல மற்றொரு ரோஜாவுடன் கூட ஒப்பிட்டுப் பேசாதீர்கள்' என்பார் வைரமுத்து. ரோஜாவுக்கே தனித்தன்மை இருக்கின்றது என்றால் நமக்கு இன்னும் அதிகமாகத் தானே இருக்கின்றது.

மற்றொரு விஷயம். நம்மைத் தவிர வேறு யாரும் நம்மை தாழ்த்தி விட முடியாது. நாம் அனுமதித்தால் ஒழிய மற்றவர்கள் நம்மை அழ வைக்க முடியாது.

தாழ்வு மனப்பான்மை அழியாத ஒரு நோயாக நம் உடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. சின்னச் சின்ன ஒப்பீடுகள் கூட நம்மை அழவைத்து விடலாம்.

நம் திறன்களை உணர்ந்தால், நம் ஆற்றல்களை வளர்த்தால் அதுவே போதும்.

நாம் ஒவ்வொருவருமே தனிப்பட்டவர்கள்.

நம் வலுவின்மை மற்றவர்களின் ஆயுதமாகி விட்டால் நாமும் அன்னாவைப் போல கண்ணீர் விட நேரிடும். நம்மை அறிதலும், நம் வெறுமையை ஏற்றுக்கொள்தலும், ஒப்பீட்டைத் தவிர்த்தலும் அழாமல் இருக்க ஒரு வழி.

1 comment:

  1. Anonymous2/20/2014

    சில சமயங்களில் நம் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் 'ஒப்பீடு' பல சமயங்களில் நமக்குப் பொறாமையையும் எரிச்சலையும் தருகிறது.இதைத் தவிர்க்க...நம் குறை நிறைகளை ஏற்றுக்கொள்ள கொள்வது போலவே பிறரின் குறை நிறைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வோம்.பி.கு..அந்தக் கண்களின் கண்ணீர் என் நெஞ்சத்தைக் பிசைகிறது.யாருக்கு சபாஷ்......?

    ReplyDelete