Saturday, June 22, 2013

சூது கவ்வும்


இன்று 'சூது கவ்வும்' திரைப்படம் பார்த்தேன். ரொம்ப நாட்களுக்குப் பின் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தமிழ்ப்படம். இது ஒரு பின்நவீனத்துவப் படம் (போஸ்ட்மாடர்ன்) என்றே சொல்வேன். பின்நவீனத்துவத்தின் முதல் பண்பு: 'வரம்புகளை மீறுவது'. ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் நிறைய வரம்புகள் வைத்திருக்கிறோம். கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். முடிவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து 'இருக்க வேண்டும்'களையும் மீறுவதுதான் இப்படத்தில் நான் முதலில் கண்டது.

'டெய்லி ஏன் பேப்பர் படிக்கணும். ஒரே செய்தியைத்தான டேட் மாத்தி போடறாங்க' என்ற ஒற்றை வாக்கியம் நம் நாட்டின் இன்றைய நிலையை எதார்த்தமாக எடுத்து வைக்கின்றது.

'ஏன் வேல செய்யணும்?' என்ற கேள்வி ஒரு சிலருக்கு நெருடலைத் தந்தாலும் இது சிந்திக்க வைக்கும் கேள்வி. நம்ம வாழ்க்கையில எதையுமே நாம இன்னைக்காக செய்றதில்லை. சாப்பிடுறோம்? எதுக்கு? உயிர் வாழனும்ல. சம்பாதிக்கிறோம். சேர்த்து வைக்கிறோம். ஏன்? நாளைக்குத் தேவைப்படும்ல. இன்னைக்கு நாம படிக்கிறது நாளைக்கு நாம வேலை பாக்குறதுக்கு. இன்னைக்கு நாம வேலை பார்க்குறது நாளைக்கு நாம நல்லா இருக்குறதுக்கு. டெய்லி நாம வாழறது அடுத்த நாளைக்கு. ஒரு நாள் அந்த அடுத்த நாளும் இல்லாம போயிடும்! எங்க தாத்தா இறந்த போது அவரது எதிர்த்த வீட்டில் இருந்த ஒரு பாட்டி ஒப்பாரி பாடியது என்னில் மிக ஆழமாகவே பதிந்து விட்டது: 'டெய்லி காலைல 5 மணிக்கு கடை திறக்கணும், கடை திறக்கணும்னு ஓடுவியே ... இப்ப எந்த கடைய போயி திறப்ப?!' இந்த வார்த்தைகளில் ஒரு நக்கல் நையாண்டி இருந்தாலும் இதுதான் எதார்த்தம். நாம செய்யற காரியங்களை 'ஏன் செய்றோம்'னு தெரியாமலதான் நிறைய நேரம் செய்றோம். சாப்பிடுவதை சாப்பிடுவதற்காகவும், வேலையை வேலைக்காகவும், பாசத்தை பாசத்திற்காக மட்டும் செய்யும்போதுதான் அதில் நம் முழுத்திறனும் வெளிப்படும்.

என் இ;த்தாலிய நண்பி வலேரியா ஒரு டூரிஸ்ட் ஏஜன்சியில் வேலை செய்கிறாள். இந்தப் புதன்கிழமை அவளை எங்களுக்கு எதிரில் இருக்கும் ஒரு பாரில் (பார் என்றால் இத்தாலியில் டீக்கடை) பார்க்க நேர்ந்தது. 'என்ன வலேரியா வேலைக்குப் போகலயா?' என்றேன். 'திங்கள், செவ்வாய் வேலை பார்த்தேன். அதிக டிக்கட் புக் பண்ணினதுனால அதிக கமிஷன் கிடச்சது. இந்த வீக்என்ட் பார்ட்டிக்கு இது போதும். அதனால மூணுநாள் லீவு போட்டுட்டேன்' என்று சொல்லிவிட்டு காஃபியை சிப் பண்ண ஆரம்பிச்சாள். 'நல்ல பாலிசி!' பாலிசின்னவுடனேயே ஞாபகத்திற்கு வருவது இன்சூரன்ஸ் பாலிசி. நாம போடற லைப் இன்சூரன்ஸ் பாலிசியெல்லாம் எப்படினா...வாயக்கட்டி வயி;த்தக்கட்டி நம்மள ஏழையா வாழ்ந்து பணக்காரனா இறப்பதற்கு நம்மள அழைக்கிறது என்பதுதான் உண்மை.

'சர்ரியலிசம்'. நாம வாழ்க்கையில ஐம்புலன்களால் உணர்வதற்குப் பெயர் 'ரியலிசம்'. ஐம்புலன்களையும் கடந்த நிலை 'சர்ரியலிசம்'. இத்திரைப்படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்த இந்த டெக்னிக்கை பயன்படுத்தியிருக்காங்க. கதாநாயகி கதாநாயகனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் காட்சியாக, அவன் காதுக்கு மட்டுமே கேட்கும் குரலாக, அவன் தொடுதலுக்கு மட்டுமே தெரியும் ஸ்பரிசமாக நிற்கிறாள். இந்தக் கதாநாயகி கதாநாயகனின் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கேற்கிறாள்: பாரில் (நம்மூர் சாhரயாக்கடை) அவனோடு அமர்கிறாள். காரில் அவனோடு பயணிக்கிறாள். சண்டை போடுகிறாள். அடிக்கிறாள். திட்டுகிறாள். கிண்டல் பண்ணுகிறாள். சவால் விடுகிறாள். சப்போர்ட் பண்ணுகிறாள். நான் இந்தக் கதாநாயகி வழியாக புரிந்துகொள்வது நம்மோடவே வாழும் நம் 'குட்டி' பெர்சனாலிட்டையத்தான். நாம் எப்போதும் இரண்டு நபர்களாகவே இருக்கிறோம். இதை இப்போதுள்ள சைக்காலஜியில் 'இன்னர் சைல்ட்' என்கிறார்கள். நாம் தனியாக அமர்ந்திருக்கும்போதுதான் அவன்(ள்) நம் கண்ணில் படுவான்(ள்). அவன்(ள்) தான் நம் சக்தி. பெண்ணுக்கு அவள் ஒரு ஆண்மை. ஆணுக்கு அவன் ஒரு பெண்மை. நம்மில் ஆண்மைiயும், பெண்மையையும், அறிவையும், உணர்வையும் சமமாக்கும் ஆற்றலே அது. இது நாம் அன்பு செய்யும் நபராக, நட்பு கொள்ளும் நண்பராக, நண்பியாக, காதலியாக, காதலனாக, கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். யாரோ ஒருவர் நம் வாழ்வில் நம்மை இயக்குவார். கடவுள் அப்படின்னு சொல்லி பயமுறத்த வேண்டாம்...மனிதர்களை மட்டும் நினைத்துப் பார்க்கலாம். நம் அழுகைக்கும், நம் கண்ணீருக்கும் காரணமாய் நம் வாழ்வில் இருக்கும் அந்த நபரை இந்தக் கதாநாயகி பிரதிபலிக்கிறாள்.

'விளிம்புகள் மையமாவதும், மையம் விளிம்பாவதும்' மற்றொரு பின்நவீனத்துவக் கோட்பாடு;. தந்தையின் அரசியல் வாழ்வு விளிம்பாகி, மகனின் ஏமாற்றும் வாழ்வு அரசியலாகி மையமாகிறது. ஹீரோ வில்லனாக மாறுகிறார். ஹீரோவின் நண்பர் இறுதியில் ஹீரோவாகிறார். சாப்ட்வேர் இன்ஜினியர் சாதாரண நபராகிறார். சாதாரண நபர் சாதிக்கிறார். கிட்னாப்பிங் - ஸ்பெல்லிங் முக்கியமல்ல செய்வதுதான் முக்கியம். எண்ணற்ற புரட்டிப்போடுதல்களை எதார்த்தமாகக் காட்டுகிறது இத்திரைப்படம். அதை அழகாக எடுத்துக்காட்டுகிறது இதன் இறுதிப்பாடல்: 'எல்லாம் கடந்து போகுமடா. இதை அறிந்தவன் என்றும் ஞானியடா!'

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...'

அறம் பிறழ்ந்து அரசியலாகிவிட்டது நம் நாட்டில்...

'தர்மத்தின் வாழ்வுதனை 'சூது கவ்வும்;;'

ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்...'

No comments:

Post a Comment