Monday, June 17, 2013

கனவு சுமை



ஒரு ஊர்ல ஒரு அண்ணனும், தம்பியும் இருந்தாங்க. இவங்களோட வீடு 80 ஆவது மாடியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. ஒருநாள் மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தாங்க. லிப்ட் வழியா மாடிக்குப் போகலாமென்று பார்த்து லிப்ட் அருகில் செல்கின்றார்கள். அங்கே ஒரு போர்ட் 'லிப்ட் பழுது. தயவு செய்து படிக்கட்டுக்களை உபயோகிக்கவும்.' முனங்கிக் கொண்டே படிகளில் இருவரும் ஏறத் தொடங்குகின்றனர். 20ஆவது மாடிக்கு வந்தவுடன் அவர்கள் சுமந்த வந்த புத்தகப் பைகள் கனமாக இருந்ததால் அதை இறக்கி அங்கேயே வைத்தனர். இன்னும் 60 மாடிகள் ஏற வேண்டுமே. இப்போதே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. 40 வது மாடிவரை இரண்டுபேருக்குள்ளும் போட்டி – யார் வேகமாக ஏறுகிறார்கள் என்று. 40 வது மாடிக்கு வந்தவுடன் போட்டி சண்டையாகவும், முனுமுனுப்பாகவும் மாறுகிறது. 'இந்த லிப்டே இப்படித்தான், அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடும். இந்தக் குடியிருப்பில் இருக்க வேண்டாம் என்றால் யார் நம்ம பேச்ச கேட்கிறா' என்ற சலசலப்புடன் நடக்க 60வது மாடியும் வந்து விடுகிறது. 80வது மாடிவரை இரண்டுபேருக்குள்ளும் மௌனம். 80வது மாடியும் வந்தாயிற்று. கதவிற்கு முன் நின்றுகொண்டு யார் கதவைத் திறப்பார் என்று ஒருவர் மற்றவரை பார்க்கின்றனர். இரண்டு பேரிடமும் சாவி இல்லை. சாவியை 20வது மாடியில் தாங்கள் 'சுமை' என்று விட்ட ஸ்கூல் பேக்கில் வைத்திருந்தனர். 


80 வயது வரை வாழ்கின்ற நமது வாழ்க்கையும் இப்படித்தான். நமது கனவுகள், எண்ணங்களையெல்லாம் 20வது வயதிலேயே விட்டுவிட்டு, சலனங்கள், சண்டைகள் என்று 60வரை கடந்து யாரிடமும் பேச்சு கொடுக்காமல், நாம், நமது என்ற குறுகிய வட்டத்திற்குள் முடிந்துவிடுகிறது. பின்னால் திரும்பி வரவும் முடியாமல், வீட்டிற்குள் நுழையவும் முடியாமல் - அந்தோ பரிதாபம். 

1 comment:

  1. Father,
    ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன், தாங்கள் எழுதிய,இந்த பதிவை, மீண்டும் தாங்கள் வாசிக்க நேர்ந்தால்,

    Do you agree with the same conclusion?
    I mean last paragraph.( even now,particularly with respect to you)

    When I look back my life,I feel content that I haven't lost my dreams yet.

    I thank you very much for this blog.

    ReplyDelete