Tuesday, April 12, 2022

ரபி நானோ?

இன்றைய (13 ஏப்ரல் 2022) நற்செய்தி (மத் 26:14-25)

ரபி நானோ?

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: முதலாவது, ஏற்கெனவே யூதாசு பணத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆக, பணத்திற்கான தேவை அவருக்கு அதிகம் இருந்திருக்காது. இரண்டாவது, அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தன் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். 'ஓசன்னா!' பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், 'ஓசன்னா!' பாடிய கூட்டம் 'சிலுவையில் அறையும்!' என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, 'அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!' என்கிறார். 

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று.

நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம்.

நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!' என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் பதில் சொல்வதைக் கவனித்தீர்களா?

சீடர்கள் ஒவ்வொருவரும், 'ஆண்டவரே, நானோ?' என்கின்றனர்.

ஆனால் யூதாசு மட்டும், 'ரபி, நானோ?' என்கின்றார்.

உடனே இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்!' என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்?

'ரபி' என்று சொன்னார்.

மற்றவர்கள் எல்லாம், 'ஆண்டவரே!' என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் 'போதகர், ஆசிரியர், ரபி' என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து வாசிக்கின்றோம். தான் இழிநிலையை அடைந்தாலும் தன்னுடன் தன் ஆண்டவராகிய கடவுள் இருப்பதாக உணர்கிறார் ஊழியன். 

'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்' என்கிறார் துன்புறும் ஊழியன்.

நம் நாவு கற்றோனின் நாவாக இருந்தால் இறைவனை ஏற்று அறிக்கையிட முடியும். 

இயேசுவை, 'ஆண்டவர்' என அறிக்கையிட மறுத்த யூதாசு, 'ரபி!' என்கிறார். 

அது அவருடைய கடின உள்ளமா?

அல்லது இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பா?

அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளமா?

நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.


2 comments:

  1. யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்? இதன் பின்னனி அலசப்படுகிறது. 30 வெள்ளிக்காசுகளை வாங்கிக்கொண்டு காட்டிக்கொடுத்தவனுக்கு பணத்தேவை இருக்கவில்லை. இயேசு முன்னெடுத்த அவரது வாழ்வின் போக்கும் ஒரு காரணமல்ல. இயேசுவின் பணியைத் துரிதப்படுத்தவே எனில், பணியைத் துரிதப்படுத்துவதற்கு காட்டிக்கொடுத்தலா வழி? என்று ஒரு கேள்வியை எழுப்புகிறது மனம். கூட்டத்தினர் பாடிய “ஓசன்னா’’ ஒன்றை வைத்தே தன் காட்டிக்கொடுத்தல் வேலையைத் தொடங்கியவன் “ சிலுவையில் அறையும்” என்ற கூக்குரல் கேட்டுப் பதறிப்போகிறான். தான் போட்ட கணக்கு தப்பானதை உணர்ந்தவன் வாங்கிய காசை வீசிவிட்டு விரக்தியின் உச்சத்தில் தன்னை மாய்த்துக்கொள்கிறான்.எதிர்பார்ப்புகள் அங்கே ஏமாற்றங்களாகிப்போகின்றன.ஆண்டவரை “ரபி” என்று மட்டுமே பார்த்ததன் விளைவு அவன் செய்த மாபெரும் துரோகத்தின் ஆரம்பம்.
    “ நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெறாவிடினும்… ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்குத் தராவிடினும்…..பரவாயில்லை.” ஆனால் என்னைப்பார்த்து என் இறைவன் “ அவள் பிறவாமல் இருந்திருந்தால் அவளுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்ற வார்த்தைகளை உதிர்த்துவிடாமல் ஒரு வாழ்க்கை வாழ்வதே எனக்கு நலம்! இன்றைக்கு என்னைக்குறித்த என் செபம் “இறைவா! என்னிடமுள்ள என் கடின உள்ளத்தையும், உம்மைக்குறித்த என் தவறான எதிர்பார்ப்பையும் நீக்கி, உம் இறைத்திருவுளம் என்னில் நிறைவேற அருள்தாரும்! “ என்பதே! இறைவன் நம்மில் விரும்புவது ஒரு புதிரையல்ல… திறந்த புத்தகத்தையே என்ற புரிதலைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. யூதாசு என்னும் |கதை மாந்தர் | என்ற சொல்லாடலை தவிர்த்திருக்கலாம்.. காரணம் அவன் வரலாற்று மனிதன்

    ReplyDelete