Tuesday, November 16, 2021

உமது மினா

இன்றைய (17 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 19:11-28)

உமது மினா

மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் தாலந்து எடுத்துக்காட்டைத் தழுவியது போல இன்றைய நற்செய்திப் பகுதி இருந்தாலும், மத்தேயுவுக்கும் லூக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு: (அ) மத்தேயு நற்செய்தியாளர், 'தாலந்து' கொடுக்கப்பட்டதாக எழுதுகிறார். லூக்கா, அதை, 'மினா' என்று குறிப்பிடுகின்றார். மினா தாலந்தை விட மதிப்பு குறைவானது. (ஆ) மத்தேயு நற்செய்தியாளர் ஐந்து, இரண்டு, ஒன்று வௌ;வேறு அளவில் தாலந்துகளைக் கொடுக்கின்றார். லூக்கா நற்செய்தியில், பத்து பேர், ஆளுக்கு ஒரு மினா வழங்கப்பட்டதாகக் காண்கிறோம். (இ) மத்தேயு நற்செய்தியில் வீட்டுத் தலைவர் நெடுந்தொலைவு பயணம் செய்கின்றார். லூக்கா நற்செய்தியில் அவர் அரசுரிமை பெறுவதற்காகச் செல்கின்றார். (ஈ) தாலந்துகளைப் பணியாளர்களுக்குக் கொடுக்கின்ற தலைவர் அவர்களுக்கு எந்தவொரு அறிவுரையும் சொல்வதில்லை. ஆனால், மினாக்களைக் கொடுக்கின்ற தலைவர், அவற்றை வைத்து வாணிபம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். (உ) லூக்கா நற்செய்தியில் மூன்று பேரிடம் மட்டுமே கணக்குக் கேட்கப்படுகின்றது. (ஊ) மூன்றாவது பணியாளர் மத்தேயு நற்செய்தியின்படி, தாலந்தை மண்ணில் புதைக்கின்றார். லூக்கா நற்செய்தியின்படி, மினாவை கைக்குட்டையில் முடிந்து வைக்கிறார் பணியாளர். (எ) மத்தேயு நற்செய்தியில் தலைவர் நல்ல பணியாளர்களை வெறும் சொற்களால் பாராட்டுகின்றார். லூக்கா நற்செய்தியில் அவர்களை வாழ்த்துவதோடல்லாமல் உடனடியாக அவர்களை நகரங்களுக்கு மேற்பார்வையாளர் ஆக்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற மூன்றாவது பணியாளர், 'இதோ! உமது மினா!' என்று தன் தலைவரிடம் ஒப்படைக்கின்றார்.

இவர் செய்த தவறு என்ன?

(அ) தலைவரைப் பற்றிய புரிதலைச் செயல்படுத்தாமல் இருக்கின்றார்.

தன் தலைவர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிந்துள்ளார் பணியாளர். ஆனால், அறிதலுக்கேற்ற செயல்பாடு அவரிடம் இல்லை. எடுத்துக்காட்டாக, சர்க்கரை நோய் உள்ளவர் சர்க்கரை எடுத்தல் கூடாது என்பது அறிதல். அறிதலுக்கு ஏற்ற செயல்பாடு இருந்தால்தான் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிதல் மட்டும் அல்லாமல் செயலும் இணைந்து நிற்றல் வேண்டும்.

(ஆ) எளிதானதைச் செய்கின்றார்.

எளிதானதைச் செய்யலாம், அல்லது சரியானதைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, காலையில் நான் எழுந்து உடற்பயிற்சி செய்தால் என் உடல்நலத்துக்கு உகந்தது என உணர்கிறேன். ஆனால், காலையில் மணி அடித்தவுடன் நான் எழாமல் தொடர்ந்து உறங்குகிறேன். அப்படிச் செய்யும்போது நான் எளிதானதைச் செய்கிறேனே அன்றி, சரியானதைச் செய்யவில்லை. மினாவைக் கைக்குட்டையில் முடிந்துகொள்வது எளிது. வியாபாரத்தில் முதலீடு செய்வது சரியானது. அந்த நபர் எளிதானதைச் செய்யவே விரும்புகிறார்.

(இ) புதிய முயற்சிகள் பற்றிய அச்சம்.

வியாபாரத்தில் மினாவை இழந்துவிடக் கூடும் எனப் பயப்படுகின்றார் பணியாளர். ஆனால், அதற்கு மாற்றாக வட்டிக்கடை இருப்பதை அவர் மறந்துவிடுகின்றார். யோசிக்கும்போது புதிய முயற்சிகளும், முயற்சிகளுக்கான வழிகளும் பிறக்கவே செய்யும். நம் கதைமாந்தர் கொண்டிருந்த அச்சம் புதிய முயற்சிகளை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது.

லூக்கா நற்செய்தியில், இறையாட்சிக்கான நேரடியான உவமையாக இது இல்லை என்றாலும், சீடர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கின்ற பாடமாக இது இருக்கிறது.  

ஆண்டவராகிய கடவுள் என்னும் நம் தலைவர் பற்றிய நம் புரிதல் என்ன? நான் எளிதானதையே செய்ய விழைகிறேனா? சீடத்துவத்தில் நான் எடுக்கும் புதிய முயற்சிகள் எவை?

1 comment:

  1. தந்தையின் விவிலியம் பற்றிய அறிவுக் கூர்மை லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்தியாளர்களின் படைப்புத்தன்மையை ஒப்பிட்டுக் காட்ட வைக்கிறது.ஓரிரு சிறிய விஷயங்கள் தவிர அவர்கள் எடுத்து வைக்கும் கருத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.என் கண்களை உறுத்துவது பணியாளர்களின் செயல் அல்ல; ஆனால் அந்த தலைவரின் குணமே! “அவர் வைக்காததை எடுக்கிறவர்; விதைக்காததை அறுக்கிறவர்” என்று சொல்கிறது விவிலியம். மூன்றாவது பணியாள் தன் தாலந்தைத் மண்ணில் புதைக்கிறாரெனில் எத்துணை பயம் அவருக்குத் தன் தலைவர் மீது இருந்திருக்கவேண்டும்! தந்தை சொற்படி ஒருவரின் செயல் சரியானதாகவும், எளிதாகவும் இருக்கவேண்டுமெனில் அவருக்குக் கைக்குட்டையில் முடிவதோ…மண்ணில் புதைப்பதோ சரியாகவும்,எளிதாகவும் இருந்திருக்க வேண்டும்.

    இன்னொரு நெருடலான விஷயம்…. வட்டி கொடுப்பதும்,வாங்குவதும் தவறு என அனைத்து மதங்களும் போதிக்க, இங்கே எப்படி வியாபாரத்திற்கு மாற்றாக வட்டிக்கடை வரமுடியும்? இருப்பினும் தலைவன் மனதறிந்து நடப்பதே ஒரு நல்ல பணியாளனுக்கு அழகு என்பதை எடுத்துக்கொண்டால் தன் தலைவனின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரிந்து வைத்திராத அந்த மூன்றாவது பணியாளன் தண்டனைக்குரியவனா….தெரியவில்லை.ஆனால் ஒரு ‘அறிவிலி’ என்று கூறலாம்.

    ‘என் தலைவராகிய ஆண்டவர் இத்தனை கண்டிப்பானவர் இல்லை’ என்பது என் திண்ணமான எண்ணம்.ஆனாலும் நம்மில் அவருக்கிருக்கும் எதிர்பார்ப்புகள் என்னவென்று அறிந்து…தெளிந்து அதன்படி நடப்பதே என் சீடத்துவம்.
    வாதத்திற்காக சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருப்பினும் தலைவரின் எண்ணம் அறிந்து நடப்பதே ஒரு சீடனின் கடமை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete