Thursday, October 31, 2019

புனிதர் அனைவர் பெருவிழா

இன்றைய (1 நவம்பர் 2019) திருநாள்

புனிதர் அனைவர் பெருவிழா

திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி 'மகிமைபெற்ற திருஅவையில்' இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள் என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக் கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நடந்த மறுநாளில் இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர், 'மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க முடியும்?' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின் பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில் ஏற்புடையதாக இருக்காது.

'நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்' என்று சொன்ன இயேசு, 'அனைத்துப் புனிதர்கள் விழா' கொண்டாட விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை நம்மோடு இருந்தால் 'அனைத்துப் பாவிகள் விழா' தான் கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.

புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர் நிலையில், நம்மிடம் 'ஆர்டர்' எடுத்து, அதைக் கொண்டு வந்து நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக் கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

ஒன்று,

'உங்களுக்குப் புனிதராக விருப்பமா?' என்று நம்மிடம் யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

புனிதர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட அவர்கள் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' செய்தார்கள். அந்தக் கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா' தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து சென்றார்கள்.

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார்கள் - செபஸ்தியார் போல!

தன் திறமை மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை காத்தார்கள் - பதுவை அந்தோனியார் போல!

சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தார்கள் - பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார் போல!

இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும் கொடுத்தார்கள் - அன்னை தெரசா போல!

இப்படி இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் - அவர்களும் இன்று புனிதர்களே!

ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும், எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.

இரண்டு,

இருப்பது அல்ல, மாறுவது.

இருப்பது அல்ல, மாறுவதே மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது.

பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால் இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது.

ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல.

இந்த மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத் தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும், மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட வேண்டும்.

புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம் இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் மதிப்பு இருக்கிறது.

பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, 'பிகமிங்' என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். 'நான் என்னவாக மாற விரும்புகிறேன்' என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும் என்கிறார்.

'அவரால் முடியும், அவளால் முடியும். என்னால் ஏன் முடியாது?' என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார் மாற்றத்தின் கருவியாகிறார்.

ஆக, நாம் எப்படி மாற வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.

மூன்று,

எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என்பர். சரி! கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு.

'எல்லாம் கடந்துவிடும்' என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக முடியாது.

'துன்பம் கடந்துவிடும்' என்று செபஸ்தியார் நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா?

எதிர்நோக்கு கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்கின்றார்.

நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றனர் புனிதர்கள்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம் மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு - இதுவே புனிதம்!

2 comments:

  1. “திரு அவையின் அட்டவணையில் வராதவர்கள்,ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திரு அவையின் போதனைப்படி ‘மகிமை பெற்ற திரு அவையில்’ இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று” இன்றைய நாளுக்கான தெளிவான தொடக்க வரிகள்.இந்த திருவிழாவின் பின்னனியைப் புரிந்து கொள்வதில் தந்தைக்கும்,அவரது நண்பர்களுக்கும் வேண்டுமானால் ஆயிரம் சந்தேகங்கள் எழலாம்.ஆனால் எங்களைப்போன்ற ‘people of simple faith’ க்கு திருச்சபை (தங்களையும் சேர்த்தேதான்) எனன சொன்னாலும் நம்புவதில் எந்த சிரமும் இல்லை.’யார் இந்தப் புனிதர்கள்?’ எனும் கேள்விக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையில் யார் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடந்தார்களோ....ஒரு செபஸ்தியார் போல.. ஒரு பதுவை அந்தோணியார் போல...ஒரு பிரான்சிஸ் அசிசி போல என்கிறார் தந்தை.... அருமை! “நம்மிடைய வாழ்ந்து மறைந்த நம் அப்பா, அம்மா போன்றவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடந்தவர்கள் தாம்; அவர்களும் புனிதர்கள் தாம்!” அருமையிலும் அருமை!! “இருப்பதில் அல்ல..மாறுவதில் தான் சிறப்பு” எனும் தன் அழகான கண்டுபிடிப்பிற்கு பாலையும்,மிஷல் ஒபாமாவையும்,லொயோலா இஞ்ஞாசியாரையும் உதாரணம் காட்டியிருப்பது சொல்ல வந்த கருத்தில் எவ்வளவு தெளிவாக உள்ளார் தந்தை என்பதைப் புரிய வைக்கிறது.கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடப்பதும்,இருக்கும் நிலைவிட்டு மாறுவதும்,கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்பதும் என்னையும் ஒரு ‘புனிதை’ யாக்குமெனில் நான் ஏன் அவ்விஷயங்களை என் வாழ்வில் முயற்சி செய்யக்கூடாது? நம் வாழ்வில் ‘எதிர்நோக்கு’ எனும் மெழுகுதிரியை அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத்தூண்டும் புனிதர்கள் வழி நடக்க அவர்களின் உதவியை நாடுவோம்.
    வலைப்பூவின் ஆரம்பத்தில் பல குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு, சிந்தனையைக் குழப்புவது போல் சிந்திக்கவிட்டுப், பின் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவைத்தரும் தந்தையை இறைவன் ஒரு அகுஸ்தினார் போல...ஒரு லொயோலா இஞ்ஞாசியார் போல...ஒரு ‘புனிதர்’ எனும் நிலைக்கு உயர்த்துவாராக!!! தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete