Friday, October 25, 2019

கதையாடல்கள்

இன்றைய (26 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:1-9)

கதையாடல்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு கதைகள் (13:1-5), ஒரு உவமை (13:6-9) என்று மூன்று கதையாடல்களைக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கதைகளின் இறுதியில், 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே மடிவீர்கள்!' என்ற எச்சரிக்கையும், உவமையின் இறுதியில், 'ஆண்டவர் நம்முடைய நீதித்தீர்ப்பின் நாளைத் தள்ளிப் போடுகிறார்' என்ற நம்பிக்கையும் தரப்படுகிறது. இன்னும் சிலர், இரண்டு கதைகளும் தனிநபர் மனமாற்றத்தை வலியுறுத்த, உவமை குழு அல்லது சமூக மனமாற்றத்தை வலியுறுத்துகிறது என்று சொல்கின்றனர்.

அ. இரண்டு கதைகள்

'சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்' என்று சொல்கின்றனர். கடவுளுக்குப் பலி செலுத்தச் சென்றவர்களுக்கா இப்படி நடக்க வேண்டும்? என்று நாம் கேட்போம். கடந்த உயிர்ப்பு பெருவிழாத் திருப்பலியின்போது கொழும்பில் குண்டு வெடித்தபோது நாம் இப்படித்தான் கேட்டோம். பிலாத்து இப்படிச் செய்ததாக வரலாற்றுப் பதிவு இல்லை. ஆனால், முதலாம் அக்ரிப்பா தான் கலிகுலாவிற்கு எழுதும் கடிதம் ஒன்றில், 'பிலாத்து இரக்கமற்ற முரடன், காட்டுமிராண்டி' என்று சொல்வதைப் பார்க்கும்போது இந்நிகழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த சோகமான நிகழ்வை இயேசுவிடம் சொல்கின்றனர் மக்கள். 'ஐயயோ! அப்படியா! பாவம்! உரோமை அரசு ஒழிக! அப்பாவி உயிர்கள் காக்கப்பட வேண்டும்! என்ன கொடுமை! அச்சச்சசோ!' இப்படி ஏதாவது ஒரு எதிர்வினையை மக்கள் இயேசுவிடம் எதிர்பார்க்க, இயேசுவோ, அவர்கள் எதிர்பாராத ஒன்றைச் சொல்கின்றார்: 'இவர்கள் மற்ற எல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?' இதைச் சொன்ன இயேசுவை அவர்கள் எப்படி சும்மா விட்டார்கள் என்று தெரியவில்லை! 'நாங்க ஒன்னுமே நினைக்கலயேப்பா! நீ பாட்டுக்க எதையோ சொல்ற?' என்று மனதிற்குள் கேட்டிருப்பார்கள். இயேசுவின் சமகாலத்தில் விபத்து அல்லது திடீர் மரணம் போன்றவற்றிற்கு ஒருவரின் பாவமே காரணம் என்று மக்கள் நினைத்தனர். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்!' என்கிறார். 'அவர்கள் இறந்தது பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனம் மாறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' எனச் சொல்கிறார் இயேசு. இரண்டாவது நிகழ்வும் இதையொத்ததே - சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே! - இந்நிகழ்வு ஓர் இயற்கைப் பேரிடர். முந்தையது மனித வன்முறை.

ஆக, 'வன்முறை, பேரிடர், விபத்து, நோய் எதுவும் எந்நேரமும் நடக்கலாம். ஆகையால் எப்போதும் தயாராய் இருங்கள்' என்று சொல்வதுபோல இருக்கிறது. 'மனம் மாறுதல்' என்பது லூக்காவில் அடிக்கடி வரும் ஒரு கருத்துரு (காண். 3:3, 3:8, 5:32, 13:3, 5, 15:7, 16:30, 17:3, 24:47). 'மனம் மாற்றம்' என்றால் என்ன? பாவத்திலிருந்து மாறுவதா? அப்படி என்றால், பாவம் செய்யாதவர்களுக்கு மனமாற்றம் தேவையில்லையா? இந்தக் கேள்விக்கு இன்றைய முதல் வாசகம் (காண். உரோ 8:1-11) விடை தருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஊனியல்பின் செயல்கள் மறைந்து ஆவிக்குரிய இயல்பு மலர்தலே மனமாற்றம். இது ஒருநாள் நிகழ்வு அன்று. கொஞ்சம் கொஞ்சமாக நிகழும் நிகழ்வு.

ஆ. ஒரு உவமை

'ஒருவர் திராட்சைத் தோட்டத்தில் அத்த மரம் வைத்திருக்கிறார் ... அத்திமரத்தில் கனிகள் இல்லை ... இதை வெட்டிவிடும் என்கிறார் ... தொழிலாளர் இன்னும் ஒரு வருடம் காத்திருப்போம் என்கிறார்.' திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரயேல் மக்களையும், அத்திமரம் என்பது அவர்களின் திருச்சட்டத்தையும் குறிக்கிறது. தொழிலாளர் இயேசுவாகவும் தோட்ட உரிமையாளரைக் கடவுளாகவும் எடுத்துக்கொள்ளலாம். இங்கே இறுதியில் தோட்டக்காரர் காத்திருக்க அனுமதித்தாரா அல்லது மரம் வெட்டப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. ஆனால், காத்திருக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது.

இந்த மரம் ஏன் பலன் கொடுக்கவில்லை? (அ) அது தேவையற்ற இடத்தில் இருந்ததாலா? அல்லது (ஆ) அதனுடைய மண் இறுகிப் போனதாலா? அல்லது (இ) ஊட்டச்சத்து குறைவினாலா? வாசகரே விடை காண வேண்டும்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் செய்தி இன்று ஏதோ பெந்தேகோஸ்தே பாஸ்டரின் பயமுறுத்தும் செய்திபோல இருக்கிறது. 'சுனாமி வரப்போகிறது. உலகம் அழியப் போகிறது. 666 என்ற எண்ணோடு அந்திகிறிஸ்து பிறந்திருக்கிறான். இதோ இயேசு சீக்கிரம் வருகிறார்' என்று பயமுறுத்தி, இன்றே நீங்கள் மனம் மாறுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது. மனம் மாறியவர்களும் இறந்து போவதை நாம் எப்படி நியாயப்படுத்துவது? இறப்பு எந்த நேரமும் வரலாம். அதற்கேற்ற ஆயத்தநிலையைத்தான் இயேசு மனமாற்றம் என்று அழைக்கிறார். என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நான் எச்சரிக்கையாகப் பார்க்கிறேனா? அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கிறேனா?

ஆ. 'இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்று தலைவர் அத்திமரத்தைக் காட்டிக் கேட்கின்றார். இன்று நான் என்னுடைய குருத்துவக் கல்லூரியில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? என்னுடைய வகுப்பறையில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறேனா? அல்லது என்னுடைய இருப்பால், இயக்கத்தால் கனி தருகிறேனா?

இ. ஊனியல்பு என்னை இறுக்கிவிட வாய்ப்புண்டு. காற்று புகாத அளவிற்கு மண் இறுகினால் மரம் வளர்வதில்லை. இன்று நான் கொத்தி எருப்போட வேண்டிய இடம் எது? என் உள்ளம் கடினமாகிவிட்டதா? என் மனம் ஊட்டம் அற்றுவிட்டதா?

1 comment:

  1. மிகவும் கெடுபிடியானதொரு வலைப்பூ.ஆனால் காலத்தின் கட்டாயம் கருதி இத்தகைய செய்திகளை நம் செவிகளில் போட்டு வைக்கத்தான் வேண்டும்.” நம்மிடம் இருக்கின்ற ஊனியல்பின் செயல்கள் மறைந்து, ஆவிக்குரிய இயல்பு மலர்தலே மனமாற்றம்” எனகிறார் தந்தை. மனமாற்றம் என்பது ஒருவரின் சாய்ஸ்.ஆனால் இறப்பு? அப்படி இல்லையே! அது மனம் மாறியவர்,மாறாதவர், நல்லவர்,தீயவர்,சிறியவர்,பெரியவர் எனும் பேதம் பார்த்து வருவதல்லவே! அப்படியாயின் வாழும் நாட்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்; எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும் என்று வழி சொல்ல வருகிறது இன்றைய வலைப்பூ. நமக்கு ஒரு வேலைக்கு அழைப்பு வரப்போகிறது எனத்தெரியும்போது நாம் நம்மை எந்நேரமும் ஆயத்த நிலையில் வைத்திருப்பது போல்,இறைவன் அழைப்பிற்கும் கால நேரம் பாராது நம்மைத் தயார் நிலையில் வைத் திருப்பதும், இன்று எனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் அது வீடானாலும் இல்லை வேலைத்தளமாயினும் எனனுடைய இருப்பும்,இயக்கமும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு பயனளிக்கவும், என் உள்ளத்தின் இன்றைய நிலையறிந்து,தேவையறிந்து அதைக் கொத்தவும், எரு போடவும் அழைக்கப்படுகிறேன். நாம் இருக்கும் தளத்தில் நம் இருப்பு நாலு பேருக்கு பயனளிப்பதாய் இருந்தாலே போதும்...நாம் தயார் நிலையில் இருக்கிறோம் என்றுதானே பொருள்?
    கொஞ்சம் பயமுறுத்துவது போலிருப்பினும் “கோல் எடுத்தால்தான் குரங்கும் ஆடும்” எனும் பழமொழிக்கு நியாயம் சேர்க்கும் ஒரு பதிவு.ஒருவர் நெருப்பேற்றி பலர் குளிர் காய்வது போல் தந்தை தனக்கு விடுக்கும் சுய சோதனை என் போன்ற பலருக்கும் பயனளிப்பதில் மகிழ்ச்சியும்! நன்றியும்!! இறைவன் தந்தையை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete