Monday, October 21, 2019

காத்திருக்கும் பணியாளர்

இன்றைய (22 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:35-38)

காத்திருக்கும் பணியாளர்

நான் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்த ஒரு பங்கில் ஒருநாள் மதிய உணவு வேளை. பங்குத்தந்தை வருவதற்கு கால தாமதம் ஆகிவிட்டது. நான் மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். சாப்பிடத் தொடங்கிய சற்று நேரத்தில் பங்குத்தந்தை வந்தார். வந்தவர், 'நான் எல்லாம் உதவிப் பங்குத்தந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரமானாலும் பங்குத்தந்தை வருவதற்காகக் காத்திருப்பேன்' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார். உடனே நான் மனதிற்குள்ளேயே, 'நான் எல்லாம் பங்குத்தந்தையாய் இருந்தால் அப்படி யாரையும் காத்திருக்க வைக்க மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டேன்.

இன்று யாரும் யாருக்காகவும் காத்திருக்க தயாராக இல்லை.

கணவன் சாப்பிட்டபின் அவனுடைய தட்டில் சாப்பிடலாம் என்று மனைவி காத்திருப்பதில்லை.

மனைவி வந்தவுடன் தூங்கச் செல்லலாம் என்று கணவன் காத்திருப்பதில்லை.

பெற்றோர்கள் வந்தவுடன் டிவி பார்க்கலாம் என்று குழந்தைகள் காத்திருப்பதில்லை.

குழந்தைகள் வந்தவுடன் செபம் செய்யலாம் என்று பெற்றோர்கள் காத்திருப்பதில்லை.

பணம் சம்பாதித்து செலவழிக்கலாம் என்ற மனநிலையை மாற்றி, செலவழித்துப் பின் பணம் கட்டலாம் என்ற மனநிலையில் கிரெடிட் கார்ட் நம்மைக் காத்திருக்க விடுவதில்லை.

காய்கறி வாங்கி, கழுவி, சமைத்து உண்ணக் காத்திருத்தலை ஸ்விக்கி அனுமதிப்பதில்லை.

கடிதம் தந்த காத்திருத்தலை இன்றைய வாட்ஸ்ஆப்பின் இரட்டை புளுடிக் தருவதில்லை.

'காத்திருத்தல்' இன்று 'காலவிரயம்' என்று பார்க்கப்படுகிறது.

ஆனால், சில தொழில்கள் காத்திருத்தலை மூலதனமாகக் கொண்டே இருக்கின்றன. பெரிய இல்லத்தின் வாயில் காப்போன், நான்குவழிச் சாலையில் செய்யும் வாகனங்களுக்குப் பச்சைக் கொடி காட்டி உணவுக்கு அழைப்போன், எல்கையில் துப்பாக்கி பிடித்திருப்போன் என்று நிறைய வேலைகளுக்குக் காத்திருத்தல் தேவைப்படுகின்றன.

இப்படிப்பட்ட தொழில்தான் வீட்டு வேலைக்காரன் அல்லது பணியாளன். இவருடைய தொழிலை உருவகமாக வைத்துத் தன்னுடைய இரண்டாம் வருகைக்கான தயாரிப்பை தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. பணியாளர்கள் தங்களுக்கென்று எந்த நேரமும் இல்லாதவர்கள். ஏனெனில், அவர்கள் தங்களுடைய நேரத்தை பணத்திற்காக தங்களுடைய தலைவனுக்காக விற்றவர்கள். ஆக, அவர்கள் தலைவன் சொல்வதைக் கேட்டே ஆகவேண்டும்.

இந்தப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும்? மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

அ. இடையை வரிந்து கட்டியிருக்க வேண்டும்

'இடையை வரிந்து கட்டுதல்' என்பது வேலைக்கான தயார்நிலையையும், கூர்நோக்குத் தன்மையையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில், 'டு புல் அப் ஒன்ஸ் ஸாக்ஸ்' என்பார்கள். நாம் ஓய்வெடுக்கும் போது முதலில் செய்வது இடையைத் தளர்த்துவது. அதற்கு எதிர்மாறாக, இடையைக் கூட்டிக் கட்டும்போது வேலைக்குத் தயாராகிறோம். இதையே இன்று 'பிஸினஸ் ஸூட்' என்கிறோம். இந்த ஸூட்டில் இருப்பவர் தான் தயார் என்பதைத் தான் இறுகக் கட்டியிருக்கும் இடைக்கச்சை (பெல்ட்) வழியாக மற்றவருக்குத் தெரிவிக்கிறார். மேலும், இடைக்கச்சையானது வாள் (காண். இபா 3:8), கரண்டி, சாவிக்கொத்து, வாக்கிடாக்கி, டூல் கிட் போன்ற தொழிற்கருவிகளை கைக்கு அருகில் வைத்துக்கொள்ளவும் பயன்படுகிறது. ஆக, இடையை வரிந்துகட்டியிருக்கும் ஒருவர் பணிக்குத் தயார்நிலையில் இருக்கிறார்.

ஆ. விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும்

அணைந்த விளக்குகள் ஓய்வைக் குறிக்கின்றன. எரியும் விளக்குகள் வேலையைக் குறிக்கின்றன. நாம் தயாராய் இருக்கிறோம் என்பதைத் தக்கவைக்கும் நிலையே விளக்குகளை எரியவிடுவது. வீட்டில் விளக்குகள் எரியும்போது நாம் மற்றவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர்களுக்குக் காட்டுகிறோம். இன்று விளக்குகளை எரித்துக்கொண்டிருந்தால் அது 'மின் ஆடம்பரம் அல்லது அழிவு' என்று கருதப்படும். இயேசுவின் சமகாலத்தில் விளக்கை ஏற்றுவதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆக, ஏற்றிய விளக்கை அவர்கள் அணையாமல் பார்த்துக்கொண்டனர்.

இ. காத்திருக்கும் இதயம் வேண்டும்

இதில்தான் எதிர்நோக்கு இருக்கின்றது. நன்றாக ஆடை அணிந்து, விளக்கை ஏற்றினால் போதாது. தலைவர் வருவார் என்ற எதிர்நோக்கு பணியாளருக்கு இருக்க வேண்டும். காத்திருக்கும் இதயம்தான் கதவு திறக்கும். கதவு திறந்தே வைக்கப்பட்டால் திருடர் வந்துவிட வாய்ப்புண்டு. கதவும் பூட்டியிருக்க வேண்டும். தட்டப்பட்டவுடன் அது தலைவர்தான் என்று அறியும் தெளிவும், உடனே திறக்கும் திறமையும் வேண்டும். மேலும், கோபம் அல்லது பயம் இருப்பவர் காத்திருப்பதில்லை. கோபமாய் இருக்கும் மனைவி கணவருக்குக் காத்திருப்பதில்லை. பயம் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆசிரியருக்காய் காத்திருப்பதில்லை. கோபமும் பயமும் இல்லாத ஒருவரே காத்திருக்க முடியும்.

இப்படி ஒரு பணியாளர் இருந்தால் தலைவர் அவரை வாழ்த்துவார், பாராட்டுவார், நிறையக் கூலி கொடுப்பார்.

இங்கே அவர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் தலைவர் பணியாளர்களை அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றார். இதையே இயேசு காத்திருக்கும் நமக்கும் செய்வார்.

ஆக, இந்த உவமை நாம் பணியாளர்கள்போல இருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. மாறாக, தலைவராகிய இயேசுவும் நமக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்போல இருப்பார் என்று சொல்கிறது. இதையே பவுல் இன்றைய முதல் வாசகத்தில், 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்கிறார். ஆக, 'பணியாளர்' என்ற பாவத்திற்கு, 'அருள்' என்ற தலைவர் பணிவிடை செய்கிறார்.

இந்த விழிப்புநிலையையே பேறுபெற்ற நிலை என்கிறார் இயேசு.

சில கேள்விகள்:

அ. இன்று பணியாளருக்குரிய பண்புகள் - இடையை வரிந்து கட்டுதல், விளக்கை ஏற்றிவைத்தல், காத்திருக்கும் இதயம் கொண்டிருத்தல் - என்னில் எப்போதெல்லாம் குறைவுபடுகின்றன? இறைவனைத் தலைவராகக் கொண்டு நான் பணியாளர் ஆவதில் எனக்கு நிறைய சுதந்திரம் இருக்கின்றது. நான் வெறும் பொறுப்பாளர் என்ற உணர்வு என் வாழ்வை இனிதாக்குகிறது - ஏனெனில், நான் என் தலைவருக்கு உரிமையானவன்.

ஆ. இயேசுவே எனக்கு ஒரு பணியாளராக பணிவிடை செய்கிறார் என்றால், அதே பணிசெய்யும் மனநிலை எனக்கு இருக்கிறதா?

இ. 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' என்பது என் வாழ்வியல் அனுபவமாக இருக்கிறதா? என்னுடைய வலுவின்மையை இறைவன் செயலாற்றும் வல்லமையாகப் பார்க்கிறேனா?

2 comments:

  1. 🙏
    Amen.

    அது தான் அருட்பணியாளரோ???

    ReplyDelete
  2. ஒரு அருள் பணியாளருக்கென்று எழுதப்பட்ட வலைப்பூ எனினும் “ என் கடன் பணி செய்து கிடப்பதே!” எனும் உள்ளம் கொண்ட ,என்னுடன் இருக்கும் என் அயலானைக் கொண்டாட வேண்டுமெனும் எண்ணம் கொண்ட யாருக்குமே பொருந்தும்.இடையை வரிந்து கட்டுதலும்,விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், காத்திருக்கும் இதயமும் அருள்பணியாளர்களிடம் மட்டுமல்ல.... தங்கள் இன்பம் மறந்து,சுகம் துறந்து, சுற்றியிருப்பவர்களின் நலம் காப்பதையே கருத்தாக கொள்ளும் இல்லத்தரசிகளுக்கும் பொருந்தும்.அந்தப் “ பணியாளர” என்ற பாவத்திற்கு “ அருள்” என்ற தலைவர் பணிவிடை செய்கிறார்.இதுமட்டுமே கொஞ்சம் பொருந்தாமல் தள்ளி நிற்கிறது. தந்தை அருள்பணியாளர்களை நோக்கி வைக்கும் கேள்விகளுக்கு நானும் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன்.விழிப்பு நிலை எனும் பேறுபெற்ற நிலையை அனைத்து அருட்பணியாளர்களும் தங்களுக்கு சொந்தமாக்கிட வாழ்த்துகிறேன்!
    இந்த வலைப்பூவில் என்னைத் தொட்ட இரு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.1. “காத்திருக்கும் இதயம் தான் கதவு திறக்கும்.” 2.”என்னுடைய வலுவின்மையில் இறைவன் செயலாற்றுவதைப் பார்க்கிறேனா?”....... அருமை! தன்னைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட வாசித்து, யோசித்துப், பின் உள்வாங்கி, அவற்றைத் தன் அனுபவங்களோடு இணைந்த கலவையாய் வாசகருக்கு சுவையான விருந்து படைக்கும் தந்தைக்கு இறையருள் நிரம்பக் கிடைக்க வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete