Thursday, October 17, 2019

புனித லூக்கா

இன்றைய (18 அக்டோபர் 2019) திருநாள்

புனித லூக்கா

இன்று நாம் நற்செய்தியாளரும், பவுலின் உடனுழைப்பாளருமான புனித லூக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' - என்று இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்' என்ற இந்த வாக்கியத்தில் பவுல் அனுபவிக்கும் தனிமை, இயலாமை, ஆட்கள் பற்றாக்குறை, மற்றும் லூக்காவின் நீங்காத உடனிருப்பு என அனைத்தையும் ஒருசேர நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


இதையே இன்று நாம் தனிப்பட்ட கேள்வியாகக் கேட்டுப் பார்க்கலாம்.

'இன்றைக்கு என்னுடன் இருப்பது யார்?'

அல்லது 'யார் மட்டுமே என்னோடு இருப்பதாக இன்று நான் உணர்கிறேன்?'

லூக்கா நற்செய்தியாளர் நீங்காத உடனிருப்பை நற்செய்திப் பணிக்கு எப்படித் தர முடிந்தது? இன்று லூக்கா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

அ. இரக்கத்தின் நற்செய்தி

லூக்காவின் நற்செய்தியை நாம் இரக்கத்தின், மகிழ்ச்சியின் நற்செய்தி என்று சொல்கின்றோம். 'கடவுளின் முகம் இரக்கம்' என்ற புதிய புரிதலைத் தந்தவர் லூக்கா மட்டுமே. இவரின் இந்தப் புரிதல் இயேசுவைப் பற்றி மட்டுமல்ல, கடவுளைப் பற்றியே நாம் புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவுகிறது. இன்று கடவுளை நாம் இரக்கம் என்று பார்க்கத் தொடங்கினால், ஒருவர் மற்றவரையும் இரக்கத்தின் கண்கொண்டு நம்மால் பார்க்க முடியும்.

ஆ. இலக்கியத்திறன்

லூக்காவின் கிரேக்க எழுத்து நடையும், வாக்கியப் பயன்பாடும் மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களின் கிரேக்க எழுத்து நடை மற்றும் வாக்கியப் பயன்பாட்டைவிட நேர்த்தியாகவும், மேன்மையாகவும் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். தன்னுடைய வாழ்க்கைக்கு தான் தேர்ந்துகொண்டது மருத்துவப் பணி என்றாலும், எழுத்துப்பணியிலும், இலக்கியத் திறத்திலும், சிறந்து விளங்கியதோடல்லாமல், அதை நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தியதால் இறவாமைக்குச் சென்றுவிடுகிறார் லூக்கா. இன்று நாம் நம்முடைய திறன்கள் மற்றும் திறமைகளை நற்செய்தி அறிவிப்புக்குப் பயன்படுத்துகிறோமா? எந்த அளவிற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நினைக்கிறோம்?

இ. பயணமும் தொடர்பும்

திருத்தூதர் பணிகள் நூலில் பெரும்பாலும் லூக்கா பவுலோடு உடனிருக்கிறார். மேலும், அவருடைய தொடர்பு மேன்மக்களோடும் அரச அதிகாரிகளோடும் இருக்கிறது. சென்றவிடமெல்லாம் தன்னுடைய மருத்துவப் பணியாலும் பலரை இவர் தன்னிடம் ஈர்த்திருக்க வாய்ப்பு உண்டு. அயராமல் பயணம் செய்வதிலும், மிகுதியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் இவர் சிறந்தவராக இருக்கிறார். 'நீ பலரால் பார்க்கப்படவில்லை என்றால், உன்னை எளிதாக மறந்துவிடுவார்கள்' என்பது ஆங்கிலப் பழமொழி. பல இடங்களுக்குப் பயணம் நம் பார்வையை அகலமாக்குகிறது. நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளும், அத்தொடர்பில் உள்ளவர்களுக்கு நாம் தரும் மதிப்பீடுகளும் நமக்கு பன்மடங்கு பலனைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-9) இயேசு தன்னுடைய சீடர்கள் 72 பேரை இருவர் இருவராக அனுப்புகிறார். அங்கேயும் மேற்காணும் மூன்று பாடங்களே வலியுறுத்தப்படுகின்றன. (அ) சீடர்கள் தங்களுடைய கடவுள் அனுபவத்தை நற்செய்தியாக அறிவிக்க வேண்டும், (ஆ) தங்களுடைய திறனைப் பயன்படுத்த வேண்டும், (இ) நிறையத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்'

இதே வார்த்தைகளை நம் அன்புக்குரிய யாராவது நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமா? அந்த அளவிற்கு நம் உடனிருப்பு இருக்கிறதா?


1 comment:

  1. அடிப்படையில் மருத்துவரான லூக்கா இன்றும் இறவா நிலையில் பார்க்கப்படுவதாக கருதும் தந்தை அதற்கு சில,பல காரணங்களை முன்வைக்கிறார். கடவுளின் இன்னொரு அவதாரமான ‘ இரக்கத்தின் முகத்தை’ மக்களுக்குப் புரியவைத்ததாலும்,அவரிடமிருந்த அத்தனை திறமைகளையும் நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தியதாலும்,தன்னுடைய சிறந்த குணங்களாலும்,மருத்துவப்பணியாலும் மேன்மக்களைத் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்ட காரணத்தாலும் அவர் இறவாமைக்குச் சென்று விட்டதாக கூறும் தந்தை இந்த எல்லா காரணங்களையும் விட, சவுலுடனான அவரின் உடனிருப்பே அவரை ஒரு மாமேதையாக முன்னிறுத்தியது என்கிறார். “ எனனுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்”.... இன்றைய வலைப்பூவின் மையச் செய்தியாக விஞ்சி நிற்கும் இந்த வரி எந்த அளவிற்கு லூக்காவின் உடனிருப்பு பவுலின் தனிமை,இயலாமை இன்னும் அவரின் பிற சங்கடங்களையும் நீக்கி, அவரின் வாழ்விற்கு இனிமை சேர்த்திருக்க வேண்டுமெனப் புரிய வைக்கிறது.நம்மோடு நம் எண்ணங்களிலும்,உள்ளங்களிலும் பயணிக்கும்...நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் உடருப்புகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வதோடு நாமும் யாரோ ஒருவரின் இனிய உடனிருப்பாக மாற,அவர்களின் வாழ்க்கைக்கு சுவைகூட்ட இறைவனிடம் வரம் கேட்போம். லூக்காவின் பன்முகங்களை எடுத்துவைக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete