Wednesday, October 30, 2019

தள்ளிப் போ!

இன்றைய (31 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 13:31-35)

தள்ளிப் போ!

'நீ இங்கிருந்து போய்விடு! நீ எங்களுக்கு வேண்டாம்!' என்று சொன்ன மக்களைப் பார்த்து, எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் வடிக்கின்றார். நாம் புனித நாடுகளுக்குச் சென்றோம் என்றால், எருசலேம் மதில்களுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கைத் தாண்டி, பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் 'தோமினுஸ் ஃப்ளேவிட்' ('ஆண்டவர் அழுதார்' அல்லது 'ஆண்டவர் கண்ணீர் வடித்தார்') என்ற ஆலயம் உண்டு. அந்த ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து மீண்டும் இந்தப் பக்கம் பார்த்தால் எருசலேம் நகரின் அழகையும், அதன் கிரீடம் போல இருக்கும் ஆலயத்தையும் பார்க்கலாம். அந்த ஆலயத்தில் உள்ள ஒரு கதவு 'மெசியாவின் வருகைக்கு' என்று இருக்கும். 'மெசியாவின் வருகைக்கு' என்று பெயரிட்டு வைத்திருக்கின்ற ஆலயம், மெசியாவைக் கண்டும் கதவைத் திறக்க மறுக்கிறதே என்பதுதான் இயேசுவின் ஆதங்கமாக இருக்கிறது. இந்த ஆதங்கமே, இந்தக் கையறுநிலையே இயேசுவின் கண்களை வியர்க்க வைக்கின்றன.

'எருசலேமே! எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன்னை அரவணைத்துக்கொள்ள விரும்பினேன்! உனக்கு விருப்பமில்லையே!' என்று கண்ணீர் வடிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்லத் தேடுகிறான்!' என்கின்றனர். வழக்கமாக, பரிசேயர்கள் இயேசுவுக்கு எதிராகச் செயல்படுவார்கள். ஆனால் இங்கே அவர் சார்பாக, அவரைக் காப்பாற்றும் நோக்குடன் பேசுகிறார்கள். அல்லது, 'ஏரோதின் பெயரைச் சொன்னால் பயந்து ஓடிவிடுவான்' என்று நினைத்துக்கூடச் சொல்லியிருக்கலாம். திருமுழுக்கு யோவானைக் கொன்ற ஏரோது இயேசுவையும் கொல்லத் தேடுகிறான். ஆகையால்தான், எருசலேம் இறைவாக்கினரைக் கொல்லும் நகரம் என்றழைக்கிறார் இயேசு. இயேசு பயந்துவிடவில்லை. ஏரோதுவை 'குள்ளநரி' என்றழைக்கின்றார். இந்தப் பெயர் ஏரோதுக்கு இயல்பாகவே வழங்கப்பட்ட பெயர். ஏனெனில், பல தந்திர வேலைகளைச் செய்பவர் ஏரோது. 'மூன்று நாள் பொறுத்துக்கொள்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. 'மூன்று நாள்' என்பது '72 மணி நேர' அளவை அல்ல, மாறாக, இயேசுவின் இறையாட்சிப் பணி நிறைவை அடையாளமாக இங்கே குறிக்கிறது.

இங்கே இரண்டு விடயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:

(அ) நாம் ஒவ்வொருவரும் எருசலேம் ஆலயம்தான். இந்த ஆலயத்தில் இறைவன் நுழைவதற்கென்று கதவு ஒன்று இருக்கிறது. ஆனால், நாம் எத்தனை முறை அதை நாம் பூட்டி வைக்கின்றோம்? கதவு மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரிய பள்ளத்தாக்கும் இருந்து இறைவனை நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. இந்தப் பிளவை நாம் எப்படி சரி செய்வது? அவரை ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரிடம் தஞ்சம் அடைவதன் வழியாகவுமே.

(ஆ) என்னுடைய இலக்கிற்கு தடைகள் வரும்போது நான் அவற்றை எப்படிக் கையாளுகிறேன்? பயந்து பின்வாங்குகிறேனா? அல்லது துணிந்து முன்னேறுகிறேனா? இயேசு துணிந்து முன்னேறுகின்றார். ஏரோதுவோ, எருசலேம் மக்களின் கல்மனமோ அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.

இந்த இரண்டு விடயங்களையும் ஒரே புள்ளியில் நிறுத்துகிறது இன்றைய முதல் வாசகம்:

'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?' என்ற கேள்வியைக் கேட்கும் கடவுள், தானே விடையளிக்கிறார்: 'வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு' எதுவும் நம்மை அவரிடமிருந்தும், கிறிஸ்துவின் அன்பினின்றும் பிரிக்க முடியாது. அப்படி இவை வந்தாலும் 'அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்' என்கிறார்.

இது எப்படி சாத்தியமாகும்?

இதுதான் பவுலின் ஆழமான இறையனுபவம்.

'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்று உணர்வது மிகவும் ஆழமான இறையனுபவம். அதாவது, என் வாழ்வில் நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் நான் அவருடைய கைவன்மையைக் காண வேண்டும்.

இதையொட்டிய திருப்பாடல் 124 இக்கருத்தை இன்னும் சிறப்பாக விளக்குகிறது:

'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - எதிராளிகள் நம்மை விழுங்கியிருப்பார்கள்! பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்! ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'

சில கேள்விகள்:

அ. இயேசுவின் முகம் என்னைப் பார்த்து அழுகிறதா? புன்முறுவல் பூக்கிறதா?

ஆ. என்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் நான் எவற்றால் பின்வாங்குகிறேன்?

இ. 'கடவுள் என் சார்பாக இருக்கிறார்' என்று உணர்ந்த வாழ்வியல் அனுபவங்கள் எவை?


2 comments:

  1. அழகானதொரு,உள்ளத்தை ஊடுருவும் வலைப்பூ.நான் சென்ற புனிதப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தையும்,நிகழ்வையும் அசைபோட வைத்த தந்தைக்கு நன்றிகள். ஆம்! “ கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச்சேர்ப்பது போல,நானும் உன்னை அரவணைத்துக்கொள்ள விரும்பினேன்.உனக்கு விருப்பமில்லையே!” கூட வந்த அருட்பணியாளர் இவ்வரிகளை விளக்கிச்சொல்கையில் அன்று இயேசுவின் கண்களைப்போலவே எங்கள் அனைவரின் கண்களும் வியர்த்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
    இந்த ஏரோது என்னவோ இயேசுவின் பிறப்பிலிருந்தே அவருக்கு எதிராக செயல்படுகிறார்.இன்றும் நம்மைச்சுற்றி ஏரோதுகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.அவர்களைக்கண்டு ஓடி ஒளிகிறோமா...இல்லை எதிர்த்து நிற்கிறோமா? தந்தையே பதிலையும் முன்வைக்கிறார். “ கிறிஸ்து என் சார்பில் இருக்கும்போது நான் யாருக்கு அஞ்ச வேண்டும்?” என்பதே அந்த பதில். இன்றையச் செய்திகளின் பின்னனியில் தந்தையின் கேள்விகள், என்னை நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றன.கடந்த காலங்கள் எப்படி இருந்திருப்பினும்,இனி வரும் காலங்களில் இயேசு என்னைப்பார்த்து புன்முறுவல் பூக்கவும், ஒருமுறை எனக்கென்று வகுத்துக்கொண்ட இலக்குகளிலிருந்து எதுவும் என்னைப் பின்வாங்க விடாமல் தடுக்கவும்,’ கடவுள் என் சார்பில் இருக்கிறார்’ எனும் என் அனுபவத்தை நாளும் அசைபோட்டு முன்னேறவும் இன்றைய வலைப்பூ வழி சொல்கிறது. புரிந்தும் புரியாமலும் நாம் சொல்லும் பல செபங்களை விட, இத்தகைய இயேசுவின் வாழ்க்கை அனுபவங்கள் தான் நாம் கரை சேர நமக்குக் கை கொடுக்கும் என்பதை அழுத்தமுற விளக்கிச்சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete