Tuesday, October 22, 2019

வீட்டுப் பொறுப்பாளர்

இன்றைய (23 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 12:39-48)

வீட்டுப் பொறுப்பாளர்

நேற்றைய நற்செய்தியில் தன்னுடைய வருகையை 'வீட்டுத் தலைவர்' என்று உருவகம் செய்த இயேசு, இன்றைய நற்செய்தியில் 'திருடன்' என்று உருவகம் செய்கின்றார். கடவுளர்களைத் திருடன் என்று வர்ணிப்பது இந்து மரபில் ('கோகுலத்துக் கண்ணன் வெண்ணெய் திருடுவது') உள்ளது போல கிறிஸ்தவ மரபிலும் உண்டு எனலாம். ஆயத்தமாய் இருந்தால் திருடன் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கலாம். ஆனால், ஆயத்தமாய் இருந்தாலும் மானிடமகனின் வருகையைத் தடுக்க முடியாது. அவர் வரும்போது நாம் அவருடைய கொள்ளைப் பொருளாய் மாறிவிடுவோம். நம் அன்பிற்குரியவர்களே, 'பொன்னே, புதையலே' என்று நாம் கொஞ்சுவது போல, அவர் நம்மைக் கொஞ்சிக்கொண்டே அள்ளிச் சென்றுவிடுவார்.

இது நற்செய்தியின் முதல் பகுதி.

இரண்டாம் பகுதி பேதுருவின் ஒரு கேள்வியோடு தொடங்குகிறது: 'ஆண்டவரே, இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?' என்கிறார். இயேசுவும் கேள்வியாலே விடை தருகிறார்: 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யர்?'

இந்தக் கேள்வியின் பின்புலத்தில்தான் அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தன்னுடைய 'எஜமானனே' என்ற பாடலை எழுதுகின்றார்.

எல்லாரையும் 'பணியாளர்' என்று அழைக்கின்ற இயேசு, திருத்தூதர்களை 'பொறுப்பாளர்கள்' என்று அழைக்கின்றார். இவர்கள் இரண்டு நிலைகளில் முதன்மை பெறுகிறார்கள்: ஒன்று, தலைவரின் விருப்பத்தை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இரண்டு, இவர்களிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்.

இங்கே இயேசு நம்முடைய பொருளாதார மற்றும் இயற்பியல் விதிகளை ஒட்டிப் பேசுகின்றார். 'அதிகமான பொருளுக்கு அதிகமான பொருள்' என்பது பொருளாதார விதி. 'அதிக உயரத்திலிருந்து விழுந்தால் அதிக ஆபத்து' என்பது இயற்பியல் விதி.

இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: 'நம்பிக்கைக்கு உரியவர்,' 'அறிவாளி.' நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, 'வீட்டுப் பொறுப்பாளர்' இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவைகளின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன.

இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.

மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 6:12-18), 'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள்' என்று சொல்கிறார் பவுல். அடிமைகள் தங்களுடைய சுதந்திரத்தை விற்றவர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்றுக்கு அடிமையாகிவிட்டால் அது நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். இதையே, புனித அகுஸ்தினார், 'கட்டுப்படுத்தப்படாத எந்தப் பழக்கமும் தேவையாக மாறிவிடும்' என்கிறார்.

சில கேள்விகள்:

அ. இயேசுவின் இரண்டாம் வருகையை விட்டுவிடுவோம். அன்றாடம் அவர் என்னிடம் வரும் மூன்றாம் வருகைக்கு - இறைவார்த்தை, அருளடையாளம், இறைமக்கள் வழி - நான் ஆயத்தமாய் இருக்கிறேனா?

ஆ. என் அருள்பணித்தளம், என் குடும்பம் என அனைத்திலும் நான் 'பொறுப்பாளராக' இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைக்குரிய நிலையும், அறிவும் சரியான திசையில் இருக்கின்றனவா? என்னுடைய மனம், உடல், ஆன்மா தூய்மையாக இருக்கிறதா?

இ. என் தேவையாக மாறிவிட்ட என்னுடைய பழக்கங்கள் எவை? அல்லது இன்று நான் எதற்கெல்லாம் என்னையே அடிமையாக்கி இருக்கிறேன்? பொறுப்பாளர்கள் தங்களுடைய தலைவருக்கு மட்டுமே உரித்தானவர்கள்!


1 comment:

  1. இல்லறமோ,துறவறமோ.....’பொறுப்பாளர்’ எனும் நிலை வந்திடின் அனைவருக்குமே பொறுப்பு ஒன்றுதான். அதிலும் நாமெல்லாம் அதிகம் பெற்றவர்கள்.ஆகவே அதிக கணக்குக்கொடுக்கக்கடமைப்பட்டவர்கள்.என்நம்பிக்கைத்தன்மையும்,அறிவாளித்தனமும் சரியானமுறையிலும்,திசையிலும் என்னோடு பயணிக்கிறதா என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பது இன்றைய வாசகத்தின் ஒரு பகுதி எனில் பழக்கங்கள் பற்றிப்பேசுகிறது அடுத்த பகுதி.” நாம் ஒன்றுக்கு அடிமையாகி விட்டால் அதுவே நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும “ உண்மையே! “Habits seldom die” என்பது முதுமொழி.
    தந்தையின் கேள்விகள் என்னை சுயசோதனைக்கு இட்டுச்செல்கின்றன. இல்லறத்தை எனதாக்கிக் கொண்ட நான் தினம் இறைவனை சரியான ஆயத்த முறையில் உட்கொள்ளவும், ஒரு பொறுப்பாளரான என்னிடம் மன,உடல்,ஆன்மாவின் தூய்மையோடு நம்பிக்கையும்,அறிவுத்திறமையும் சேர்ந்தே பயணிக்கவும், என்னிடமுள்ள என் பழக்கங்கள் என் கட்டுக்குள் இருக்கவும் இறைவன் துணை வேண்டி நிற்கிறேன். .சமயங்களில் பதில் தேடக் கடினமாக இருப்பினும் நம் வாழ்க்கை முறையைத் திரும்பிப் பார்த்து,திருத்திக்கொள்ள உதவும் கேள்விகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete