Thursday, December 18, 2014

உனக்கு இங்கு இடம் இல்லை!

இன்று மாலை ஊருக்குப் போகிறேன். இன்னும் 21 நாட்களுக்கு வலைப்பதிவில் எழுத முடியுமா என்று தெரியவில்லை.

எழுதலாம். ஆனாலும் இந்த கம்ப்யூட்டர், இண்டெர்நெட் என 21 நாட்கள் இருந்து பார்க்க ஆசை.

கிறிஸ்து பிறப்பு விழா மிக அருகில் வந்துவிட்ட வேளையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு என்ன மறையுரை வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

சத்திரக்காரனின் கிறிஸ்துமஸ் என்ற மையக்கருத்தில் மறையுரை வைக்கலாம் என நினைத்தேன்.

இயேசுவின் பிறப்பு மாடடைக் குடிலில் நடக்க ஒரு காரணம் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லை.

'உனக்கு இங்கு இடம் இல்லை!' - இதுதான் மனித வரலாறு நம் கடவுளுக்குச் சொன்ன வார்த்தைகள். மிகவும் சோகமான வார்த்தைகள்.

பாலூட்டி, சீராட்டி நாம் உறங்க வேண்டும் என்பதற்காக விழித்திருந்து, கடைசிப் பருக்கையை உண்டு வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு தூங்கப் போகும் நம் வீட்டு அம்மாக்களை நாம் எளிதாக ஒரு கட்டத்தில் 'நீ எனக்கு வேண்டாம்!' என்று சொல்வது எவ்வளவு வேதனை தருமோ அந்த அளவு வேதனையை கடவுள் கண்டிப்பாக அனுபவித்திருக்க வேண்டும்.

'சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லை!'

இடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்ம வீட்டை நமக்குப் பிடிச்சுருக்கு? நம்ம ரூமை நமக்குப் பிடிச்சுருக்கு? ஏன்? இடம் தான் நம்மை அடையாளப்படுத்துகிறது. நம்ம வீட்டுல தான் நாம நாமலா இருக்க முடிகிறது. ஏன். நம்ம கையில வச்சிருக்கிற மொபைல் கூட நம்ம ரூம் மாதிரி தான். அந்த ரூமுக்குள் நாம் எல்லாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை.

உனக்கு இங்கே இடமில்லை.

இந்த வார்த்தைகளை இன்னும் இரண்டு கோணங்களில் பார்ப்போம்.

உனக்கு இங்கே இடமில்லை.
எனக்கு இங்கே இடமில்லை.
அவருக்கு இங்கே இடமில்லை.

எனக்கு இங்கே இடமில்லை - இந்த வார்த்தைகளை நாம் நம் வாழ்வின் இக்கட்டான சூழலில் சொல்லத்தான் செய்கின்றோம். என்னிடம் ஒன்றுமில்லை. எனக்கு அழகில்லை. எனக்கு படிப்பில்லை. எனக்கு உறவு இல்லை. இப்படியெல்லாம் நாம் சொல்லும் போது நமக்கு நாமே உரிய இடத்தை நாம் கொடுக்க தவறிவிடுவதில்லையா?

உனக்கு இங்கே இடமில்லை - இதுதான் நம்மைச் சுற்றியிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சந்தை செய்வது. நீ இதைக் குடித்தால் மட்டும் தான் இங்கு இருக்கலாம். இப்படித் தான் சாப்பிட வேண்டும். இதைத் தான் நீ டிவியில் பார்க்க வேண்டும். எங்களோடு ஒத்திராதவர்களுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லிக் கொள்வது.

அவருக்கு இங்கே இடமில்லை - கடவுளுக்கு இங்கே இடமில்லை என்று நாம் சொல்வது. நாம் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகள். நாம் வைத்துக் கொண்டிருக்கும் குட்டிக் கடவுள்கள் கடவுளின் இடத்தை எடுத்துவிடுகின்றன.

நம் உறவுகளில் 'உனக்கு இங்கே இடமில்லை' என்று உதாசீனப்படுத்தும் போதும் வலிக்கிறது.

எங்க ஊருல கண்ணான்னு ஒரு அண்ணன் இருந்தாங்க. ரொம்ப வாட்டசாட்டமா இருப்பாங்க. நாயுடு குடும்பம். மிலிட்டரில சேரப்போறதா சொல்வாங்க. ஒரு நாள் அவங்களுக்கு அவங்க அப்பாவுக்கும் ஒரு சின்ன சண்டை. இந்த அண்ணன் சிகரெட் பிடிச்சதை அவர் கண்டிச்சார். ரொம்ப ஈசியா கண்டிச்சுருக்கலாம். ஆனா, அவரு பெரிய திருவிழா நேரத்துல மைக் பிடிச்சி ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். அந்த அண்ணன் அன்னைக்கு ஊரை விட்டுப் போனவங்கதான். இன்னும் அவங்க எங்க இருக்காங்கனு தெரியல. அவங்க அப்பா இப்போ படுத்த படுக்கையாய் ஆயி;ட்டார். எனக்கு எங்கும் இடமில்லை என்று அன்றாடம் காணாமற் போய்க்கொண்டே இருக்கின்றனர் பலர்.

இரண்டு நாட்களுக்கு பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் கருத்தியலும் இதுதான்: 'உங்களுக்கு இங்கு இடமில்லை!' என்று தீவிரவாதிகள் மற்றவர்களைச் சொல்வது.
யாருக்கு எங்கே இடமிருக்கிறது என்பதை யார் உறுதி செய்வது.

கடவுளுக்கே இடமில்லை என்று சொல்லப்பட்ட இந்த உலகில் அன்றாடம் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்லிக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமில்லையே.

இனிய கிறிஸ்து பிறப்பு திருவிழா நல்வாழ்த்துக்கள்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

அடுத்த ஆண்டில் சந்திப்போம்.




2 comments:

  1. இன்றையப் பதிவைப் படித்து முடிக்குமுன் மனம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டன.அகில அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவனுக்கே சத்திரத்தில் இடமில்லை என்றால் நாம் எம்மாத்திரம்? தந்தைக் குறிப்பிட்டுள்ள கண்ணா மாதிரி எத்துணையோ கண்ணாக்களும், கண்ணம்மாக்களும் தேடுவாரற்று இருக்கிறார்கள்.கிறிஸ்து பிறப்புக்காக பலவகைகளில் நம்மைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நாம் ஆளுக்கு குறைந்த பட்சம் ஒருவரையாவது தேடிப்பிடித்து அவர்களுக்கு நம் உள்ளத்தில் 'இடம் இருக்கிறது' என்பதை உணர்த்துவோம். இந்த நாட்களில் அவர்களின் கண்களில் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் பிறக்கச் செய்வோம்.தந்தையே! தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு எங்களின் செபங்களும், வாழ்த்துக்களும்.....

    ReplyDelete