Monday, December 1, 2014

சாரை சாரையாக...

திருவருகைக்காலத்தின் ஒவ்வொரு நாள் வாசகமும் மிகவும் அழகாக இருக்கும். ஆகையால் நேரம் இருந்தால் முதல் வாசகத்தையாவது தினமும் வாசிக்க நாம் முயற்சி செய்யலாம்.

என் வாழ்க்கைப் பேட்டரி டவுண் ஆகிப் போகும் போதெல்லாம் நான் சார்ஜ் செய்யும் இடம் திருவருகைக்கால வாசகம் தான். ஒவ்வொரு வாசகத்திலும் ஒரு நம்பிக்கைத் துளி இருக்கும்.

'மக்களினங்கள் உன்னை நோக்கி சாரை சாரையாய் வருவார்கள்!' (காண். எசாயா 20:1-5)

இந்த வரிதான் நாளைய முதல் வாசகத்தின் மையம். எருசலேம் நகரம் உயர்த்தப்படும் என்றும் அதை நோக்கி மக்கள் சாரை சாரையாக வருவார்கள் என்றும் இறைவாக்கு உரைக்கிறார் எசாயா.

உணர்வுகளில் மிகவும் கொடுமையான உணர்வு என்னவென்றால் நம்மைத் தேடுவதற்கு யாரும் இல்லை என்ற உணர்வும், நம்மிடம் யாரும் வரமறுக்கிறார்கள் என்ற உணர்வும் தான்.

நாம செய்யும் எல்லாக் காரியத்தையும் பாருங்களேன். நாம காலையில் குளிப்பதிலிருந்து, நல்ல ஆடை அணிவதிலிருந்து, பொட்டு வைத்து அலங்கரிப்பதிலிருந்து எல்லாவற்றையும் நாம் செய்வது நம்மை யாராவது பார்க்க வேண்டும், தேட வேண்டும், அணுகி வரவேண்டும் என்பதற்காகத் தான். இப்படி இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. கிரேக்கப் புராணம் ஒன்றின் படி நம்மைப் படைத்த இறைவன் நம்மை இரண்டு பகுதிகளாக வெட்டி இந்தப் பூமிக்கு நம்மை அனுப்புகிறாராம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் நமது மற்றொரு பகுதியைத் தேடிக்கொண்டே இருக்கின்றோம். ஆகையால் தான் நாம் ஒருவர் மற்றோடு உறவாட முடிகிறதோ. 'ஒருவேளை இவர் நம் பாதியாக இருப்பாரோ! அவர் நம் பாதியாக இருப்பாரோ!' என தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எங்கள் பங்கில் கடந்த வாரம் நடந்த ஒரு இறப்புச் சடங்கிற்கு இறந்தவரின் மனைவியும், அவர்களது ஒரு மகனும் மட்டும் வந்திருந்தார்கள். இறந்தவரைச் சேர்த்து ஆலயத்திற்கு வந்திருந்தவர்கள் மொத்தம் இந்த மூன்று பேர்தான். வாழ்க்கை முழுவதும் இவர் வேறு நண்பர்களையே தேடிக்கொள்ளவில்லையா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

உன்னைத் தேடி சாரை சாரையாய் மக்கள் வருவார்கள் என வாக்களிக்கின்றார் கடவுள்.

யாரைத் தேடி மக்கள் வருவார்கள்? நிறைவாக இருப்பவரைத் தேடியே வருவார்கள். தண்ணீர் ஊறும் கிணற்றுக்குத்தான் மக்கள் செல்வார்களே தவிர, காய்ந்து போன கிணற்றுக்கு அல்ல. பணம், பதவி, அதிகாரம், ஆற்றல் என நிறைந்திருக்கும் ஒருவரையே மக்கள் தேடுவார்கள். அணுகிச் செல்வார்கள்.

ஆக, இறைவன் இன்று தரும் வாக்குறுதி, 'நீ நிறைவுள்ளவராய் இருப்பாய்!'

நிறைவுள்ளவராக இருக்க நாம் என்ன செய்யணும்?

'என்னிடம் நிறைவு இருக்கு' என்று நாம் முதலில் நம்பணும். நம்மில் இல்லாதவற்றைப் பற்றி வருத்தப்படவே கூடாது. ஆங்கிலத்தில் இதை 'அபன்டன்ஸ் மென்ட்டாலிட்டி' என்று சொல்வார்கள். நம்மை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நாம் முதலில் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை நம் ஆழ்மனம் வரை செல்ல வேண்டும். கனவிலும் இந்த நம்பிக்கை கலைந்துவிடக் கூடாது. அப்படி ஒரு நம்பிக்கை வந்துவிட்டால் நாம் நிறைவு பெற்றுவிடுவோம்.

நம்மை நோக்கி சாரை சாரையாக வருவார்கள்!


1 comment:

  1. " ஆண்டவரின் ஆலயம் இருக்கும் மலை நோக்கி மக்கள் சாரை சாரையாய் வருவார்கள்". ஆலயத்தில் கிடைக்கும் நிறைவு நம்மிடமும் கிடைத்தால் மக்கள் நம்மை நோக்கியும் வருவார்கள்.நம்மிடம் இருக்கும் நிறைவு மற்றவருக்கும் நிறைவளிப்பதாக இருக்கும் வகையில் நாம் மற்றவருக்கு உப்பாக,ஒளியாக,ஊரணியாக,சுமைதாங்கியாக, சாய்ந்துகொள்ளத்தோளாக இருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது இன்றையப் பதிவு.மற்றபடி நாம் நம் 'அடுத்த பாதியைத் தேடிக்கொண்டிருப்பதாக்க் கூறும் கிரேக்க புராணம்??!! யோசிக்க வைக்கிறது.இறை வருகை காலம் நம்மை நிறைவுள்ளவராய் ஆக்கட்டும்.நம்மை நோக்கியும் மக்கள் சாரைசாரையாய் வரட்டும்.'டிசம்பர்' மாதம் நம் அனைவருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுத்தரட்டும்....

    ReplyDelete