Sunday, December 14, 2014

மலிவு விலை மகிழ்ச்சி

ஒவ்வொரு நாள் திருப்பலியிலும் இங்கு மறையுரைக்குப் பின் விசுவாசிகளின் மன்றாட்டு உண்டு. நம்ம ஊருல ஞாயிறு மட்டும்தான் மன்றாட்டு சொல்வோம்.

இன்று மன்றாட்டு புத்தகத்தில் ஒரு மன்றாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது.

பெலிசித்தா தி பாஸ்ஸோ ப்ரெட்ஸோ - மலிவு விலை மகிழ்ச்சியை நாங்கள் வாங்காதபடி எங்களைக் காத்தருளும்.

வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்பார்கள். மகிழ்ச்சிக்கும் விலை இருக்கிறது. ஆனால் மலிவு விலை மகிழ்ச்சியும் இருக்கிறது. உயர்ந்த விலை மகிழ்ச்சியும் இருக்கிறது.

கொஞ்ச காலமாக நம்ம நாட்டுல நடக்கிற பெரிய பெரிய மோசடிகள் எல்லாம் வெளியே வருகின்றன. கூட்டுறவு வங்கியின் செயலாளர் அடித்த கொள்ளை, சாரதா நிதி நிறுவன மோசடி, ஆவின் பால், கிரானைட், தாது மணல், கிராஃபைட், கிரிக்கெட் என எங்கு பார்த்தாலும் மோசடி. இந்த மோசடிகளுக்குப் பின் இருப்பதும் ஒரு விலை தான். ஒரு மகிழ்ச்சி தான். இந்த மோசடிகள் தான் மலிவு விலை மகிழ்ச்சியோ?

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை மகிழ்ச்சி ஞாயிறு என அழைக்கிறது திருஅவை.

இன்று நம்மைச் சுற்றி மகிழ்ச்சியை கடைவிரித்திருக்கிறார்கள். நம்மைச் சுற்றி மகிழ்ச்சிக்கான வியாபாரம் நடந்து கொண்டேயிருக்கின்றது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என நமக்குத் தெரியாமல் பல நேரங்களில் நாம் விழித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று எங்கள் கல்லூரியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்து ஒரு அருட்சகோதரியை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பணி கொடுக்கப்பட்டது. லீடர்னா எல்லா வேலையும் தான செய்யணும். அவர்களின் இல்லம் எங்கிருக்கிறது எனத் தெரியாததால் அவர்களோடு நடந்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர்களின் இடம் வந்தது. வந்தபின் தான் தெரிந்தது அந்த இடத்திற்கு வெறும் 7 நிமிடங்களில் வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் எடுத்துக் கொண்டது 37 நிமிடங்கள். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி போவதற்கு ஏ.ஏ. ரோட்டில் போவதற்குப் பதில் கோரிப்பாளையம் போய், ஏவிஎம் பாலம், சிம்மக்கல், மதுரா கோட்ஸ் என சுற்றி வந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது.

கொஞ்சம் கோபத்தோடு இந்த இடம் தான் உங்கள் இல்லம் என்றால் 'வி குட் ஹேவ் டேகன் அனதர் வே!' என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே சீக்கிரம் வந்திருந்தால் நாம் இவ்வளவு புதிய இடங்களையும், நட்சத்திரங்களையும், டெக்கரேஷன்களையும் பார்த்திருக்க முடியாதே என்றார்.

என் பஸ்ஸில் ஏறி வந்தபோது எனக்குள் நான் பேசியது ஓடிக்கொண்டே இருந்தது.

நம் மகிழ்ச்சிக்கு பெரிய தடை இதுதான்: 'வி குட் ஹேவ்!' 'சே...அப்படி இருந்திருக்கலாமே. இப்படி இருந்திருக்கலாமே!' என்று நடந்து முடிந்ததை மாற்ற நினைப்பது மகிழ்வை நம்மிடமிருந்து திருடி விடுகிறது.

இன்று நாம் மகிழ்ச்சிக்குக் கொடுக்கும் விலை மலிவு என்றால் அந்த விலையை நாம் கொடுப்பதை கொஞ்சம் நிறுத்தலாமே!



1 comment:

  1. தந்தையே! அந்த அருட்சகோதரி அதி புத்திசாலி.தெரிந்தேதான் உங்களை இழுத்தடித்திருக்கிறார்.அவர் அத்தனை விஷயங்களையும் கண்டுகளிக்க தாங்கள் தங்கள் நேரத்தை விலை கொடுத்துள்ளீர்கள். அது மலிவா..காஸ்ட்லியா..சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படித்தான் பல நேரங்களில் யாரோ மேலே ஏறி வர நாம் ஏணியாக விலை பேசப்படுகிறோம்.இது விழித்துக்கொள்ளும் நேரம். விழித்துக்கொள்வோம்.... நாமும் விலைமதிப்பற்றவர்கள் என்பதைப் புரிய வைப்போம்....

    ReplyDelete