Saturday, November 29, 2014

அப்படி வந்தால் தான் அவரு கடவுள்!

நாளை நாம் திருவருகைக்காலத்தைத் தொடங்குகிறோம். திருவருகைக்காலம் என்பது கத்தோலிக்கத் திருஅவையின் வழிபாட்டு ஆண்டின் நான்கு பெரும்பகுதிகளில் ஒன்று. மற்றவை பொதுக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம். நாளை வழிபாட்டு ஆண்டின் புத்தாண்டு. திருப்பலி புத்தகம் முதல் பக்கத்திலிருந்தும், வாசகப்புத்தகம் தன் முதல் பக்கத்திலிருந்தும் பயணத்தைத் தொடங்கும்.

எதற்காக திருவருகைக்காலத்தைக் கொண்டாடுகிறோம்? திருவருகையின் அர்த்தம் என்ன?

இதன் ஆங்கிலப் பதம் 'அத்வெந்து'. நாம் சாலையில் செல்லும் போது வழியில் எங்காவது ஒரு ப்ராடஸ்டன்ட் சர்ச் 'நியு அத்வெந்து சர்ச்' என்றோ அல்லது 'செவன்த்டே அன்வென்டிஸ்ட் சர்ச்' என்றோ பார்த்திருப்போம். ஆண்டவரின் வருகைக்காக மக்களை தயாரிக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் என இவர்கள் தங்களையே அழைத்துக் கொள்வது வழக்கம்.

நாம் நெருக்கமாக அன்பு செய்யும் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து நீண்டதொரு பயணம் மேற்கொண்டாலோ, அல்லது படிப்பு, வேலை, குடும்பம் என மற்றொரு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு விட்டாலோ அவரின் வருகை திரும்ப வராதா என எதிர்பார்ப்பது இயல்பு.

இந்த எதிர்பார்ப்பில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன:

அ. அந்த நபர் நம்மோடு இருந்தபோது நாம் கொண்டிருந்த மகிழ்ச்சி. எல்லாருடைய வருகையையும் நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை! இப்பதான் காய்ச்சல் வந்துவிட்டுப் போக, நம் பிரட், கஞ்சி என்று சாப்பிட்டு துரும்பாய் இளைத்துப்போக, அந்தக் காய்ச்சல் திரும்ப எப்போ வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோமா? இல்லை. நம்மைக் கடித்த கொசு திரும்ப வரும் என்று எதிர்பார்க்கிறோமா? இல்லை. நமக்கு நிறைவும், மகிழ்ச்சியும் தந்த ஒன்றைதான் நாம் திரும்ப எதிர்பார்க்கிறோம்.

ஆ. எதிர்பார்ப்பில் ஒரு காத்திருத்தல் இருக்கும். எதிர்பார்ப்பதும், காத்திருத்தலும் இணைந்தே செல்லக் கூடியவை. நாம் எதிர்பார்க்காத ஒன்றிற்காக காத்திருப்பதுமில்லை. நாம் காத்திராத ஒன்றை எதிர்பார்ப்பதும் இல்லை.

ஆக, வருகை என்பது இடமும், நேரமும் சார்ந்தது.

திருவருகைக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக காத்திருக்கின்றனர். மற்ற மதத்தினரோ அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களோ இயேசுவுக்காக காத்திருப்பதில்லை.

ஏற்கனேவே இயேசு வந்ததை நினைவுகூறி கொண்டாடுவதாகவும், திரும்பவும் அவர் வருவதற்கான தயாரிப்பாகவும் திருவருகைக்காலம் அமைகின்றது.

நாம் யாரையாவது எதிர்பார்க்கிறோம் என்றால் அவர் வரும்போது அவருக்கு விருப்பமான ஆடை அணியவும், உணவைத் தயார்செய்யவும் முனைப்பாய் இருப்போம். திருவருகைக்காலத்தில் இயேசுவை எதிர்பார்க்கிறோம் என்றால் அதற்கேற்ற தயாரிப்பு இருக்க வேண்டும்.

ஆனா நம்ம எல்லார் மனசுக்குள்ளும் கடவுள் அப்படி சீக்கிரம் வந்துட மாட்டார் என்றே தோன்றுகிறது. சீக்கிரம் வரக்கூடாது என்றும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, இருட்டுல ஒரு உருவம் தெரிவது மாதிரி இருந்தால் அதை நாம் பேய் என்று தான் சொல்கிறோமே தவிர, ஒருபோதும் அது கடவுளாய் இருக்குமோ என்று சொல்வதே கிடையாது. ஏன்னா நமக்கு நிச்சியமாகத் தெரியும் கடவுள் வரமாட்டார் என்று!

'இதோ அவர் சீக்கிரமாய் வருகிறார்!' என்று ஒரு கூட்டம் இயேசுவின் வருகையை வியாபாரமாக்கவும் தொடங்கி விட்டது.

இன்னைக்கு உங்க வீட்டுக்கு வெளியில அப்படி யாராவது சத்தம் போட்டுக்கொண்டு போனாலோ, அல்லது மைக் வைத்துக் கொண்டு அலறினாலோ என்ன செய்யணும்?

ரொம்ப சிம்பிள்!

குளிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து குளிங்க!
துணிதுவச்சிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து துவைங்க!
சாப்பிட்டுட்டு இருக்கீங்களா...தொடர்ந்து சாப்பிடுங்க!
குழந்தைக்கு தலைசீவி விடுறீங்களா...தொடர்ந்து செய்யுங்க!
அடுப்புல உலை கொதிக்குதா...அரிசியைப் போடுங்க!
தெய்வம் தந்த வீடு பார்க்குறீங்களா....தொடர்ந்து பாருங்க!
படிச்சுகிட்டு இருக்கீங்களா...தொடர்ந்து படிங்க!
கஸ்டமர் கேர்ல பேசிட்டு இருக்கீங்களா....தொடர்ந்து பாருங்க!
ஃபேஸ்புக் ஸ்டேஸ் போடுறீங்களா...தொடர்ந்து போடுங்க!
ஏன்னா...இந்த எல்லா நிகழ்வுகளிலும் அவர் இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்.
இதுல எப்படிங்க வருவாரு...அவர் வானத்துல தான் வருவாருன்னு
வெளியே ஓடி வராதீங்க...
அவர் எதுலயும் வர முடியும்...அப்படி வந்தால் தான் அவரு கடவுள்...




1 comment:

  1. 'திருவருகைக்காலம்'.. காத்திருப்போரின் காலம்.எதற்காக்க் காத்திருக்கிறோம்; யாருக்காக்க் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் 'காத்திருத்தல்' முக்கியத்துவம் பெறுகிறது.மிக சீரியஸாக ஆரம்பித்து மிக இயல்பாக முடித்திருக்கிறார் தந்தை.நம்மைத் தேடிவ்ரும் இயேசுவைத்தேடி நாம் அங்கே இங்கே ஓடத்தேவையில்லை...நாம் இருக்கும் இடத்திலேயே, நாம் செய்யவேண்டிய காரியத்தில் கண்ணாயிருந்தோமெனில் நம்மைத்தேடி வருவார் இயேசு.அப்படி வந்தால்தான் 'அவரு கடவுள்'..சரியாகச்சொன்னீர்கள். காத்திருப்போம்...நம்மைத்தேடிவரும் இயேசவைக்காண.......

    ReplyDelete