Friday, July 5, 2019

ஒரே ஆசிதான் இருந்ததா?

இன்றைய (6 ஜூலை 2019) முதல் வாசகம் (தொநூ 27:1-5, 15-29)

ஒரே ஆசிதான் இருந்ததா?

கடந்த புதன் கிழமை எங்கள் குருமடத்தின் பேராசிரியர்களுக்கு மாத ஒடுக்கம் வழிநடத்த வந்த அருள்தந்தை ஜோ ஆண்டனி, சேச, அவர்கள் 'ஆசீரும், சாபமும்' பற்றித் தன்னுடைய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

'நான் என்னுடைய மாணவர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நான் என்னுடைய உடன் அருள்பணியாளர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நான் என் நண்பர்கள், உறவினர்களுக்கு ஆசீராக இருக்கிறேனா?'

'நானே ஆசீர்பெற்றவனாக இருக்கிறேனா?'

'என்னுடைய பிரசன்னம் மற்றவர்களுக்கு ஆசீர் அளிப்பதாக இருக்கிறதா?'
அல்லது இதற்கு மாறாக, நான் சாபமாக, சபிக்கப்பட்டவனாக இருக்கிறேனா?

இந்தக் கேள்விகளின் பின்புலத்தில்தான் சிந்தனை இருந்தது.

எதற்காக 'ஆசீர்' தேவை?

அ. ஆசீர் நம்முடைய எதிர்நோக்கை நீட்டிக்கிறது.

ஆ. ஆசீர் நமக்கு நேர்முகமான ஆற்றலைத் தருகின்றது.

இ. ஆசீர் அன்பைக் கூட்டுகிறது.

இதற்கு மாறாக,

ஒருவர் தனக்கு ஏற்பட்ட அநீதியின் காரணத்தால் மற்றவருக்கு வழங்கும் சாபம், அல்லது ஆற்றல் இல்லாத ஒருவர் ஆற்றல் பெற்ற ஒருவர்மேல் தன் இயலாமையில் ஏவும் சாபம் அடுத்தவரை அழித்துவிடும் அளவுக்குச் செல்கிறது.

அன்பு ஒன்றே சாபத்தை நீக்கும் ஆற்றல் கொண்டது - தவளையும் இளவரசியும் கதையில் வருவது போல.

நிற்க.

இன்றைய முதல் வாசகத்தில் ஏசா தன் தந்தை ஈசாக்கிடம் மிகவும் சோகமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றார்: 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?' 'எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா' என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகிறான்.

தன் தம்பி தனக்கு இழைத்த துரோகம், அதற்கு உடந்தையான தாய், அவசரப்பட்ட அப்பா என எல்லார்மேலும் இந்த ஏழை அண்ணனுக்கு கோபம் வந்திருக்கும்.

இந்த அண்ணன்கள் பல நேரங்களில் பாவம். தங்களுக்குரியவற்றைத் தம்பிகள் தட்டிப் பறிக்கும்போது கையறுநிலையில் புலம்புவார்கள் - ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டில் வரும் அண்ணன் போல.

ஏசாவின் கேள்வியில் ஏமாற்றப்பட்டதன் வலி நிறையவே தெரிகிறது.

ஆனால், கதையின் இறுதியில் ஏசாவே யாக்கோபுக்கு ஆசியாக மாறுகின்றார் - தன்னுடைய பெருந்தன்மையால்.


1 comment:

  1. “ எதற்காக ஆசீர் தேவை?” ...கேள்வி கேட்கும் தந்தையே காரணங்களையும் கூறுகிறார்.ஆம்...நம்மிடமுள்ள ஆற்றலையும்,அன்பையும் கூட்டும் இந்த ஆசீர்.....நம்மை அணுகியிருப்பவர்களுக்கும் பரவுகிறது, நமது அறிதல் இல்லாமலே.சாபமும் அப்படியே!ஒரு குடும்பத்தில் ஒருவர்பெற்ற ஆசீரோ,சாபமோ...பல தலைமுறைகளைத் தாண்டிநிற்குமாம்.ஆனால் நமக்கு ஏற்பட்ட சாபத்தையும் ஆசீராக மாற்றும் திறமையும் நம்மிடம் உள்ளது....ஏசா போல.நான் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எனனவாக இருக்கிறேன்.சாபமாக இல்லை எனில் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.ஆசீராக இருப்பதாக உணர்ந்தால் அதை அள்ளி, வழங்குவோம் தேவையிலிருப்போருக்கு.அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் அது. அழகானதொரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்,!!!

    ReplyDelete