Monday, July 1, 2019

சாகப்போகிறோம்

இன்றைய (2 ஜூலை 2019) நற்செய்தி (மத் 8:23-27)

சாகப்போகிறோம்

'பதற்றம்' - இது இன்றை நம்மில் பலரைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்த நோயின் தாயின் பெயர் 'அவசரம்.' 'அவசரம்' என்ற உணர்வு மூளை சார்ந்ததா அல்லது உடல் சார்ந்ததா? என்று பார்த்தால், உடல் உபாதை அல்லது உடல் பசி நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் 'அவசரம்' என்பது உள்ளம் சார்ந்ததே. 'பதற்றம்' என்பது மூளைக்கும் உடலுக்கும் நடுவில் உள்ள இடைவெளி. எடுத்துக்காட்டாக, நான் 11 மணிக்கு ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 10 மணிக்கே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம். என்னுடைய மூளை 11 மணிக்குப் போய்விட்டது. உடல் 10 மணியில் இருக்கிறது. மூளை உடலைப் பார்த்து, 'வா ... வா ... சீக்கிரம் பேசு' என்று அவசரப்படுத்தும். ஆனால், உடலால் 10 மணியிலிருந்து 11 மணிக்கு தாவ முடியாது. அது ஒவ்வொரு நொடியாகத்தான் நகரும். தன்னால் தாவ முடியவில்லையே என்று சொல்லும் கையறுநிலைதான் பதற்றம்.

சீடர்களும் இயேசுவும் படகில் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த கடல் திபேரியாக் கடல். அலைகள் இல்லாத, அல்லது சிற்றலைகள் எழுகின்ற கடவுள் அது. சீடர்கள் பெரும்பாலானவர்கள் மீனவர்கள், மீன்பிடித் தொழில் செய்தவர்கள். கடலின் அலைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள். படகில் உள்ள ஒரு விதிவிலக்கு இயேசு. இவர் தச்சர். தண்ணீரின் ஓட்டம், அலைகளின் தாக்கம் தச்சனுக்குத் தெரியாது. ஆனாலும், தச்சன் தூங்குகிறார். மீனவர்கள் அலறுகிறார்கள்.

சீடர்களின் அலறலுக்குக் காரணம் அவர்களின் பதற்றம்.

அவர்களுடைய மூளை சாவுக்கு அருகில் சென்றுவிட்டது. உடல் படகில் இருக்கிறது. இரண்டிற்குமான இடைவெளியைச் சரிசெய்ய முடியாமால், 'ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்' என அலறி, தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புகின்றனர்.

அலைகள் அடிக்கின்ற நேரத்திலேயே, 'சாகப்போகிறோம்' என்ற குரல் எழுப்புவது சீடர்களின் முதிர்ச்சியின்மையையும் காட்டுகின்றது. சீடர்கள் தங்களுடைய அதீத எண்ண ஓட்டங்களால் நடக்கவிருப்பதை மிகைப்படுத்துகிறார்கள்.

ஆனால், இயேசு மிகவும் சாதாரணமாக அல்லது இயல்பாக இருக்கிறார். 'என்னப்பா ஆச்சு! ஏன் சத்தம் போடுறீங்க?' என்று எதார்த்தமாகக் கேட்கிறார். 'நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?' எனக் கடிந்துகொள்கின்றார்.

'அவசரம்,' 'அச்சம்,' 'பதற்றம்,' 'சாவு பற்றிய பயம்,' 'நம்பிக்கையின்மை' - இவை சீடர்களின் உணர்வுகள்.

'அமைதி' - இது மட்டுமே இயேசுவின் உணர்வு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 19:15-29) சோதோம் நகரிலிருந்து லோத்தையும் அவரின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு, ஆண்டவராகிய கடவுள் அந்நகரின்மேல் நெருப்பும் கந்தகமும் பொழியச் செய்கின்றார். 'திரும்பிப் பார்க்காதே' என்று ஆண்டவர் கட்டளையிட்டும், லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கிறாள். உப்புச்சிலையாக மாறுகிறாள்.

ஏன் அவள் திரும்பினாள்?

'ஆர்வத்தினாலா,' 'உண்மையாகவே அழிகிறதா என்று பார்க்கவா,' 'தனக்குப் பின் யாராவது வருகிறாரா?' என்ற அக்கறையினாலா?

தெரியவில்லை.

ஆனால், நகரை விட்டு ஓடும் அவசரம், பதற்றம் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம். பதற்றத்தில் நாம் அடிக்கடி திரும்பியும் பார்ப்போம் - உடலால் உள்ளத்தால். சீடர்களும் கரைக்குத் திரும்பலாமா என்று திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

அவசரம், பதற்றம், அச்சம், திரும்பிப் பார்த்தல் ஆகியவற்றை விடுத்து அமைதி மட்டும் பெற்றால் எத்துணை நலம்!

2 comments:

  1. நமது அன்றாட வாழ்வில், நம்மை அல்லாடவைக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிய பதிவு தான் இன்றையது.’ அவசரம்’,’பயம்’,’பதற்றம்’,’ ‘ சாவு பற்றிய பயம்’, ‘நம்பிக்கையின்மை’ ......”நம் இல்லாமையும் மற்றும் இயலாமையும் சேர்ந்து பெற்றெடுக்கும் பிள்ளைகள்” தான் இவை. “பதற்றம்” என்பது மூளைக்கும் உடலுக்கும், இடையேயுள்ள இடைவெளி” எனபதைத் தனக்கே உரிய பாணியில் மிக அழகாக விளக்கியுள்ளார் தந்தை.தாங்கள் கையறு நிலையில் இருந்தபோது தங்கள் அருகிலேயே இருந்த இயேசுவை மறந்து போன சீடர்கள் நிலையில் நாமும் இருப்பதாலேயே இந்தப் பதற்றம், அச்சம் எல்லாம்.கரைக்குத் திரும்பலாமா என நினைத்த சீடர்கள் மாதிரியோ, தான் விட்டு வந்த ஊரில் என்ன நடக்கிறது எனத் திரும்பிப்பார்த்த லோத்தின் மனைவி மாதிரியோ இராமல் உடலால்,உள்ளத்தால் அமைதி காத்தால் எத்துணை நலம்! தந்தையின் வார்த்தைகளை நாமும் வழி மொழியலாமே! பதட்டத்திலேயே பாதிநேரம் வாழ்க்கையை ஓட்டும் என் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் ஒரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. “பதறிய காரியம் சிதறும்; எனவே அனைத்திற்கும் நேரமிடல் தேவை”.... நம் தமிழ் முதுமொழிக்கிணையான பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் அவர்களின் கருத்தும் தந்தையின் வார்த்தைகளை வழிமொழிகின்றன. தந்தைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete